இயக்கம் – மீரா கதிரவன்
நடிகர்கள் – கஸ்தூரி ராஜா, நடிகர் ஈஷா , மாளவிகா மானோஜ், தனாஸ்ரீ
இசை – சாம்.சி.எஸ்
தயாரிப்பு – சுரேஷ் காமாட்சி – வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்
குடும்ப தலைவர் ஒருவர் நெசவுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கிறார்,வரும் காலங்களில் நெசவுத் தொழில் நலிவடைந்து வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார். இதனால், அவரது தம்பி வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்கிறார். தம்பி வெளிநாட்டில் வேலை செய்தாலும், கடைசி வரை நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் மட்டும் தான் வாழ வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே அவரது மகன் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால், அவரையும் வெளிநாட்டுக்கு அனுப்ப உறவினர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டுக்கு சென்று விட்டால் தனது பள்ளியை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதாலும், குடும்பத்தை பிரிய மனம் இல்லாததாலும் வெளிநாட்டுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.நவீன இயந்திரங்களின் வருகையால் கைத்தறி நெசவுத் தொழில் பாதிப்படைய பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறார். அவரது கஷ்ட்டத்தை போக்க மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப உறவினர்கள் வற்புறுத்துகிறார்கள். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் சித்தப்பாவின் நிலையை நினைத்து தானும் அப்படி ஒரு வலியை அனுபவிக்க கூடாது என்பதில் மகன் உறுதியாக இருக்கிறார்.இதற்கிடையே, தன் காதலை சொல்வதற்காக இரவு நேரத்தில் அவரது இல்லத்திற்கு செல்லும் அவன் பொதுமக்களிடம் சிக்கிக்கொள்கிறான்.அதன் பிறகு என்ன ஆனது என்பதே உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்வதே ‘ஹபீபி’.
இந்தப் படத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஒரு ஏழை நெசவாளராக முகமது யூசுப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் , கதாபாத்திரத்துக்கு தேவையான உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்திருக்கிறார். ஒரு குடும்ப தலைவராக குடும்பத்தின் மீதான அக்கறை, தான் நேசிக்கும் நெசவுத் தொழில் புதைக்கப்படும் போது வெளிப்படுத்தும் ஏமாற்றம், மகனின் நிலையை கண்டு கதறி அழுவது, என அனைத்து இடங்களிலும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி தன் கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.அதே போல் படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக இளம் நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஈஷா, குழந்தைத்தனமான முகம் மற்றும் புன்னகையுடன் கவனம் ஈர்க்கிறார். மனதுக்குள் வளர்க்கும் காதல், அதை சொல்ல தடுமாறுவது என்று பள்ளி பருவத்திலும், காதல் பருவத்திலும் எதார்த்தமாக நடித்திருப்பவர், தன் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வில், இறுக்கமான முகத்தோடு இருந்தாலும், காட்சிகளை உணர்வுப்பூர்வமாக கையாண்டு முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கைதட்டல் பெறுகிறார்.
மாளவிகா மானோஜுக்கு படம் முழுவதும் வசனம் இல்லை என்றாலும், இறுதிக் காட்சியில் அவர் பேசும் அந்த ஒரு சில வசனங்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் ஒட்டுமொத்த வலியையும் பார்வையாளர்களிடம் கடத்தி விடுகிறது.கட்டுப்பாடுகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகும் இஸ்லாமிய பெண்களில் பெண்ணியம் பேசுபவர்களும், தங்களது உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடுபவர்களும் உண்டு என்பதை உணர்த்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனாஸ்ரீ .
இந்த முறை சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான மெலோடியாக பயணிக்கிறது. இஸ்லாமிய பாடல்கள் கதைக்களத்தையும், கதை மாந்தர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் பயணித்திருக்கிறது. பின்னணி இசை கதைப் போல் எந்தவித பதற்றமும், பரபரப்பும் இன்றி அதிகம் சத்தமில்லாமல் பயணித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.அதே போல் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு 80-களில் ஆரம்பிக்கும் கதையை 90, 2000 மற்றும் தற்போதைய காலக்கட்டம் என்று பார்வையாளர்களை கதைக்களத்துடன் பயணிக்க வைத்திருப்பதோடு, இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வியலை கண்டு மனதை ஏங்க வைக்கிறது.
இந்தப் படத்திற்கு மீரா கதிரவன் திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் , மூன்று தலைமுறையை கடந்த ஒரு குடும்பத்தின் வாழ்க்கை சூழலை காட்சி மொழியில் மிக இயல்பாக கொடுத்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல், அவர்களது நட்பு, காதல், எதிர்பார்ப்பு ஆகியவற்றை மிக சரியான முறையில் பேசியிருந்தாலும், பொருளாதாரம் ஈட்டுவதற்காக குடும்பத்தை பிரிந்து செல்லும் அவர்களது வலி, அவர்களுக்கானது மட்டும் அல்ல, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் அனைவருக்குமானது என்பதையும் புரிய வைத்திருக்கிறார். நம் ஊரில் பல இஸ்லாமிய உறவுகள் பொருளாதார பிரச்சினை காரணமாக விருப்பம் இல்லாமல் மற்ற நாடுகளுக்கு பணிக்கு செல்வதால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்கும் இன்னல்களையும் உண்மைக்கு அருகில் நமக்கு காண்பிஹ்ட்துள்ளார்.
மொத்தத்தில், ’ஹபீபி’ மனித உணர்வுகளின் வெளிப்பாடு.




