ஆட்டி – விமர்சனம்

0

இயக்கம் – திருமுருகன்
நடிகர்கள் – இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா , பிரவீன் பழனிசாமி, செல்வகுமார், காதல் சுகுமார்
இசை – தீசன்
தயாரிப்பு – சுரேஷ் காமாட்சி – வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்

மலை கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒருவர் இன்ஸ்பெக்டராக வருகிறார், அந்த காவல் நிலையத்தில் எந்தவித குற்ற வழக்குகளும் பதிவாகாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே, அந்த ஊருக்கு ஆசிரியராக வரும் ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் நாயகன், அந்த ஊர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை அறிந்துக் கொள்வதொடு, முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று, பலரை கொடூரமாக கொலை செய்வதையும் கண்டுபிடிக்கிறார். அவர்கள் யார் ?, எதற்காக இப்படி கொலை செய்கிறார்கள் ?, ஆசிரியர் கொலைக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பதை சஸ்பென்ஸாக சொல்வதே இந்த ‘ஆட்டி’ படத்தின் கதை.

இந்த படத்தில் காவல் துறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார் வண்ணன் கம்பீரமான தோற்றம், கூர்மையான பார்வை, தெளிவான சிந்தனை ஆகியவற்றின் மூலம் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். நாயகன் என்றாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டு திரைக்கதைக்கு முக்கியத்துவம் அளித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
அதே போல் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபி நட்சத்திரா, தன் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். அவரது அறிமுகம் மற்றும் அவருக்கான பில்டப் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவற்றுக்கான குறைவான முக்கியத்துவம் பெரும் ஏமாற்றமளிக்கிறது.

ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் பழனிசாமிக்கு சிறிய வேலை என்றாலும் அதை நிறைவாக செய்து திரைக்கதையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார். காவலராக நடித்திருக்கும் செல்வகுமார், காதல் சுகுமார், கரண் சக்கரவர்த்தி, சவுந்தர் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

தீசனின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, மலைப்பகுதியில் நிலவும் ஓசைகளை துள்ளியமாக கொடுத்து கவனம் ஈர்க்கிறது.சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு இயற்கையின் அழகையும், அங்கு நிறைந்திருக்கும் ஆபத்தையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பதோடு, 1970 காலக்கட்டத்தில் பயணிக்கும் அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்பட வைத்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு திருமுருகன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார், திருமுருகனின் திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணித்தாலும், அக்காலம் முதலே பெண்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களை வரலாற்று ரீதியாக விளக்கவும் செய்திருக்கிறது.கதை ஒரு கொலையில் தொடங்கும் அந்த பரபரப்பை கடைசி வரை வைத்துள்ளார். இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘ஆட்டி’ விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here