இயக்குநர் – டென்னிஸ் மஞ்சுநாத்
நடிகர்கள் – செல்வராகவன் , குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ், கௌசல்யா
இசை – ஏ கே ப்ரியான்
தயாரிப்பு – விஜயா சதீஷ்
சாலை வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நுங்கு வியாபாரம் செய்கிறார். ஒரு பெண்ணை விரும்பி திருமணம் முடித்துக் கொள்கிறார், தன் மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்வதற்காக பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை அருகே சிறிய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் அந்த பெண் திடீரென்று தற்கொலை செய்துக் கொள்கிறார். மனைவியின் தற்கொலைக்கான அதிர்ச்சிகரமான உண்மையை தெரிந்து கொள்ளும் செல்வராகவன், அதன் பிறகு மேற்கொள்ளும் நடவடிக்கை மூலம் அந்த ஊர் மக்களுக்கு தெய்வமாகிறார். அவர் மனைவி இறப்புக்கு காரணம் என்ன ? அதன்பின் அவர் என்ன செய்கிறார் என்பதை சமூகபொறுப்புடன் சொல்லியிருப்பது தான்இந்த ‘மனிதன் தெய்வமாகலாம்’.
இந்த படத்தின் நாயகன் மிகவும் சாதுவாக இருக்க வேண்டும், அதற்கு பொருத்தமாக நடித்துள்ளார் செல்வராகவன், தன் குணத்தை நடிப்பின் மூலமாகவும் மிக சரியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். மனைவி மீதான அன்பு, அவருக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி கலங்குவதோடு, அவர் எடுக்கும் அதிரடி விஸ்வரூபம் மூலம் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். மேலும் நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி ரவி, அழகில் மட்டும் இன்றி நடிப்பிலும் கவர்கிறார். கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
பின் செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கும் கெளசல்யாவுக்கு பெரிய வேடம் இல்லை என்றாலும், தனது வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ், உணர்வுப்பூர்வமான பல விசயங்களை தனது நடிப்பின் மூலம் நேர்த்தியாக கடத்தி கவனம் ஈர்க்கிறார். கந்துவட்டி கொடுப்பவராக நடித்திருக்கும் மைம் கோபி, தன் கதாபாத்திரம் மீது பார்வையாளர்கள் வெறுப்படையும் விதத்தில் நடித்திருக்கிறார். அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் வழக்கம் போல் செயற்கைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறுமி லிர்திகா, சேலம் தீபக் மற்றும் பல புதுமுகங்கள் மண்ணின் மக்களாக நடித்திருக்கிறார்கள். அவர்களது இயல்பான நடிப்பு, அந்த மண்ணின் வாழ்க்கையை திரையில் மிக சிறப்பாக பிரதிபலித்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கல் அனைத்தும் மனதில் நிற்கிறது. பாடல்களை விட பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும், வலிகளையும் பார்வையாளர்கள் மனதில் கடத்த பெரிதும் உதவுகிறது. ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, தற்போதைய நவீன காலக்கட்டத்திலும் சாலை வசதி இன்றி இருக்கும் கிராமங்களின் அவலங்களையும், அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை சூழலையும் நம் கண்முன் நிறுத்தியுள்ளார்.
இந்தப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார்.எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் எதிர்பார்ப்பு, அதை அடைவதற்கான அவர்களின் கடின உழைப்பு ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை பிரச்சனை அதன் மூலம் அவர்களுக்கு நிகழும் கொடுமையை உணர்ச்சிகர்மாக பதிவு செய்து பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.
மொத்தத்டில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ நம் மனதை வருடும்.




