லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) – விமர்சனம்

0

இயக்கம் – விக்னேஷ் சிவன்
நடிகர்கள் – பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி , சீமான் , எஸ் ஜே சூர்யா, யோகி பாபு
இசை – அனிரூத் ரவிச்சந்திரன்
தயாரிப்பு – நயன்தாரா , லலித் குமார்

காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒருவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால், இனி எந்த காதலர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட கூடாது என்பதற்காக, பல வருட உழைப்பிற்குப் பிறகு 2040 ஆம் ஆண்டில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany – LIK) என்ற செயலியை உருவாக்குகிறார். இந்த செயலி மூலம் தங்களுக்கு பொறுத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்வது முதல், அவர் எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதோடு, 24 மணி நேரமும் அவர்களை கேமரா மூலம் கண்காணிக்கவும் முடியும். இதனால், காதலர்களில் யார் ஏமாற்றினாலும், அது அவர்களுக்கு தெரிந்து விடுவதோடு, காதலர்கள் பிரிய நினைத்தால் இழப்பீடு வாங்கிக் கொடுத்து அதை நிறைவேற்றுகிறது இந்த லிக் செயலி. அதன் ஒரு வாடிக்கையாளரான நாயகி, சிறு வயது முதலே ஸ்மார்ட்போனின் வழிகாட்டுதலின் மூலம் வளர்வதால், சமூக ஊடகங்களில் அதிக பின்தொடர்பவர்களை பெறுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.ஸ்மார்ட்போன்கள் மூலம் தங்களுக்கே தெரியாமல் தவறு செய்பவர்களை திருத்துவதற்காக பசுமை உலகம் என்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லாத ஒரு இடத்தை உருவாக்கி நடத்தி வருகிறார் ஒருவர். அவரது மகன் தன் அப்பாவின் வழிகாட்டுதலின்படி கைபேசி பயன்படுத்தாத நபராக வாழ்ந்து வருகிறார்.இந்த இருவருக்கும் காதல் ஏற்படுகிறது வெவ்வேறு சூழ்னிலையில் வாழ்ந்த இருவரும் காதலிக்கின்றனர், அவர்கள் காதல் வெற்றியில் முடிந்ததா? இருவரின் வாழ்க்கை வேறுபாடு அவர்களை பிரித்ததா என்பதை காதலுடன் சொல்வதே இந்த ‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி).

வழக்கம் போல் பிரதீப் ரங்கநாதன் ஒரு எளிமையான கதாபாத்திரத்திற்கு தனது மேனரிசம் கலந்த நடிப்பின் மூலம் பெரும் வலிமை சேர்த்திருக்கிறார். பல படங்களில் பார்த்தது போல கண்டதும் காதல் என்றாலும், தன் காதலி மீது தான் வைத்திருக்கும் அன்பை அவர் வெளிக்காட்டும் காட்சிகள் நகைச்சுவையாக கடந்தாலும், அதில் இருக்கும் காதல் உணர்வை, தன் கண்கள் மூலமாக வெளிக்காட்டும் இடங்களில் அசத்தியிருக்கிறார். காதல் வலியை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், காதலுக்காக தன்னம்பிக்கையோடு போராடும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருப்பதோடு, அதை மாஸாக கையாண்டு தன் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் செல்கிறார்.அதே போல் நாயகியாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி, அதிகப்படியான மேக்கப்போடு வலம் வந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருக்கிறது. அவரது மேக்கப் மற்றும் ஆடை வடிவமைப்பு அவரை பாபி பொம்மையாக வலம் வர செய்து பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது. நடிப்பிலும் தனது பணியை சரியாக செய்திருக்கும் கிரித்தி ஷெட்டி, சமூக வலைதள மோகம் மற்றும் தாய் பாசத்திற்கான ஏக்கத்தை தன் கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த இருவரை தாண்டி லிக் செயலியின் நிறுவனராக, மனித காதலுக்கும், உணர்வுகளுக்கும் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜெ.சூர்யா, தனது வழக்கமான பாணியை அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மட்டுமே கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். தன் செயலிக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முயற்சியும், அதில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் அவரது துள்ளல் மனநிலையும் பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது.பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக அன்பு கடல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சீமான், தன் இயல்பான உணர்வுகளை நடிப்பாக வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். அவர் சொல்லும் அறிவுரைகளும், எதிர்பார்க்கும் மாற்றங்களும் மனித குலத்தின் மகத்துவத்தை பாதுகாப்பதற்கான வழிகள் என்பதை மக்களுக்கு புரிய வைக்கிறது.தோற்றத்தில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் யோகி பாபு, நடிப்பிலும், நகைச்சுவையிலும் எந்த மாற்றத்தையும் வெளிக்காட்டவில்லை. முதல் முறையாக கவர்ச்சியான உடைகளோடு வலம் வரும் கெளரி கிஷன் தாக்கம் ஏற்படுத்தாத வேடத்தில் வலம் வருகிறார்.

வழக்கம் போல படத்தின் திரைக்கதை கதை என அனைத்தையும் தாண்டி அனிருத்தின் இசை நம்மை கிரங்கடிக்க செய்துள்ளது,
வெளியான பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பெரிய ஹிட் ஆகிவிட்டது, படத்திலும் நன்றாக பொருந்தியுள்ளது.படத்தின் பட்ஜெட் ஒளிப்பதிவில் தெரிகிறது, ரவி வர்மனின் ஒளிப்பதிவு படத்திற்காக செய்யப்பட்டிருக்கும் செலவுகளை திரையில் கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமான பின்னணியோடு காட்சிப்படுத்தப்பட்டு கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறது.

இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சில ஆண்டுகள் முன்பே சிவகார்த்திகேயன் வைத்து உருவாக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது அந்த படம் தான் இப்போது இந்த லிக் படமாக உருவாகியுள்ளது, இந்தப் படத்தின் முக்கிய கரு என்னவென்றால் தொழில்நுட்பங்கள் உண்மையான காதலை கொடுக்குமா? அல்லது அதன் மூலம் மனிதர்களிடம் இருக்கும் உண்மையான காதலை அறிந்துக் கொள்ள முடியுமா? என்ற கேள்விகளுக்கான விடையை அவரது ஸ்டைலில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.காதல் பிரிவு வலியையும், அந்த காதலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் மட்டும் இன்றி, தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பின்னணியோடு சொல்லியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன், காட்சியமைப்புகள் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில், ‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) பிரதீப் ரங்கநாதன் வெற்றி வரிசையில் நிச்சயம் இடம் பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here