Home Blog Page 23

ப்ரைம் வீடியோ வழங்கும் “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !!

0

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“சிஸ்டம்” திரைப்படம் வரும் மே 22ஆம் தேதி இந்தியாவிலும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், பிரத்யேகமாக ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

மும்பை, இந்தியா – மே 12, 2026 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. சமூகத்தின் கடுமையான உண்மைகளையும், அதிகாரம் உண்மையை நிர்ணயிக்கும் ஒரு அமைப்பில் நீதிக்கு என்ன மதிப்பு உள்ளது என்ற கேள்வியையும் இப்படம் முன்வைக்கிறது.

இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் தயாரித்துள்ளனர். பேராசை, பழிவாங்குதல், நீதி தேடும் போராட்டம் மற்றும் ஒழுக்கநெறி போன்ற உலகளாவிய கருக்களை மையமாகக் கொண்டு “சிஸ்டம்” உருவாகியுள்ளது.

டிரெய்லரில், நேகா என்ற இளம் வழக்கறிஞராக சோனாக்‌ஷி சின்ஹா அறிமுகமாகிறார். தனது தந்தையான மூத்த வழக்கறிஞர் (அஸ்தோஷ் கோவாரிகர் ) முன்னிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய சவாலில் அவர் ஈடுபடுகிறார். அதற்காக சரிகா என்ற கூர்மையான நீதிமன்ற ஸ்டெனோகிராஃபரை (ஜோதிகா) அவர் தனது அணியில் இணைத்துக்கொள்கிறார். ஆனால் சரிகாவுக்கும் தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பது பின்னர் தெரிய வருகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் நடக்கும் கடுமையான மோதல்கள், சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்கள் டிரெய்லரில் வேகமாக நகர்கின்றன.

“பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போய்விடுகிறது.” போன்ற தாக்கம் மிக்க வசனங்கள் படத்தின் மைய கருத்தை வெளிப்படுத்துகின்றன. “அதிகாரம் உண்மையை விட வலிமையானதாக இருக்கும் ஒரு அமைப்பில், நீதி இன்னும் உயிருடன் இருக்கிறதா?” என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. இதற்கான பதில் மே 22ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் “சிஸ்டம்” திரைப்படத்தில் கிடைக்கும்.

இப்படம் குறித்து இயக்குநரும் இணை எழுத்தாளருமான அஸ்வினி ஐயர் திவாரி கூறுகையில்..,

“நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன. “சிஸ்டம்” திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. ப்ரைம் வீடியோ மற்றும் Baweja Studios ஆகியோர் என் கற்பனையில் நம்பிக்கை வைத்ததற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நேகா என்ற அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹா கூறுகையில்..,

“இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். Dahaad படத்திற்குப் பிறகு சிஸ்டம் போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை ப்ரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாதாரண நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்றார்.

சரிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா கூறுகையில்…,

“பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது சவாலானது, அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவை இந்த படம் பேசுகிறது. அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். ப்ரைம் ஒரிஜினல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம். இந்த படம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் வரும் மே 22 மக்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

கருப்பு – விமர்சனம்

0

ஒரு பிரபலமான வழக்கறிஞர் லஞ்சம் கொடுத்து தன் வழக்குகளில் வெற்றி பெறுவதோடு, நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதமான வேலைகளையும் செய்கிறார் , அவரை மீறி நீதிமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது, என்ற கட்டமைப்பை உருவாக்குகிறார். இதனால், நீதிக்காக போராடுபவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க, அவர்களின் அழுகுரல் கேட்டு அந்த நீதிமன்றத்தில் இருக்கும் கருப்புசாமி , நேரில் வந்து எதிர்க்கிறார் வந்திருப்பது கடவுள் என்று தெரிந்தாலும், இங்கே எல்லாமே இப்படி தான், இதை யாராலும் மாற்ற முடியாது. முடிந்தால் நீங்க கடவுளாக அல்லாமல் சராசரி மனிதராக மாற்றிக் காட்டுங்கள், என்று கருப்புசாமியிடம் சவால் விடுகிறார். அவரது சவாலை ஏற்றுக்கொள்ளும் கருப்புசாமி மனிதனாக மாறி இதனை சரி செய்ய முயற்சிக்கிறார். அந்த முயற்சி என்ன ஆனது என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் கருப்பசாமியாகாவும் அதே சமயம் மதுரை வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்திலும் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படத்தை தேர்வு செய்து அதனை சிறப்பாக செய்துள்ளார், அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

அவருக்கு அடுத்து நிகராக காட்சிகளில் பேபி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார் , மாஸாக அறிமுகமாகி, மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

அதே போல வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா, சில காட்சிகளில் மட்டும் வருகிறார். பல முக்கிய காட்சிகளில் நடித்து படம் முழுவதும் பயணிப்பது போல காட்டியுள்ளார், நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி, திருட்டு போன தன் தங்க நகைகளை மீட்க போராடும் கேரளத்தவராக நடித்திருக்கும் இந்திரன்ஸ், சுவாசிகா, சிவதா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமையுள்ளார், டூட் படத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தது இவரது இசை, மொத்த படத்தையும் தாங்கி பிடித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும், படத்தில் இசை ஒரு பெரிய தூணாக இருக்கிறது. சாய் அபயங்கருக்கு நிச்சயம் பாராட்டுக்கள். அதே போல ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ளார் ,

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும் அநீதிகளுக்கு கருப்புசாமி மூலம் பதிலடி கொடுக்க முயற்சித்திருக்கிறார். மக்களின் கடைசி நம்பிக்கையாகவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூணாகவும் விளங்கும் நீதிமன்றங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் எப்படி செயல்படுகிறது என்பதையும், நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் விலைபோகும் நீதியரசர்கள், நீதிமன்றத்தின் எழுதப்படாத விதிமுறைகள் அதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் என்று பல விசயங்களை மிக தைரியமாக எடுத்துரைத்துள்ளார். நிச்சயம் அவருக்கு பாராட்டுக்கள் .

மொத்தத்தில், ‘கருப்பு’ அனைவரையும் கவரும்.

எக்ஸாம் விமர்சனம்

0

காவல் துறை டி.எஸ்.பி பெண் தனது பணி மாறுதலை தொடர்ந்து புதிய இடத்திற்கு பொறுப்பேற்க செல்லும் போது, மற்றொரு பெண்ணால் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்படுகிறார். அதன் பிறகு அந்த டி எஸ் பி பெயரில் கடத்திய பெண் பதவி ஏற்றுக்கொள்வதோடு, அந்த இடத்தில் நடக்க இருக்கும் அரசு தேர்வு மோசடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். உண்மையான டி எஸ் பி மூலமாக அந்த மோசடி நடக்க இருப்பதாக நினைத்து அவரை கடத்தி அடைத்து வைக்கும் பெண்ணிற்கு, அவருக்கும் மேலே ஒருவர் இருப்பதும், கண்ணுக்கு தெரியாத அந்த நபர் மூலம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பகடைக்காய்களாக பயனபடுத்தப்பட்டு, அவர்கள் மூலம் மோசடி நடக்க இருப்பதும் தெரிய வருகிறது.
அந்த கண்ணுக்கு தெரியாத நபர் யார் ?, அவர் மூலம் நடக்க இருக்கும் மோசடியையும், அதன் பின்னணியையும் , கண்டுபிடித்தாரா? கடத்திய பெண் அங்கிருந்து தப்பித்தாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

தற்போது வெளியாகும் இணையத் தொடர்கள் , கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் பாணியிலான கதைகளை மட்டுமே விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல முயற்சிப்பர் ஆனால் அதை உடைத்து, சமூகப் பிரச்சனைகளை பேசும் கதைகளை கூட விறுவிறுப்பான இணையத் தொடராக கொடுக்க முடியும், என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் சற்குணம், பல உண்மை சம்பவங்களை மிக தைரியமாக காட்சிப்படுத்தி இதனை உருவாக்கியுள்ளார்.

இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் இருவரும் தங்களது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள். துஷாரா விஜயனின் அழுத்தமான நடிப்பு, அரசு பணிக்காக கடுமையாக படித்தும் பலன் பெறாமல், பணம் மற்றும் அதிகாரத்திற்கு முன்பு தோற்றுப்போகும் பல மாணவர்களை பிரதிபலித்திருக்கிறது. அதிதி பாலன், பணம் இருந்தால் எதையும் குறுக்கு வழியில் சாதிக்க முடியும், என்ற எண்ணத்தில் வாழும் மேல்தட்டு மக்களின் மனநிலையை தன் நடிப்பில் சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.

அரசு தேர்வு மற்றும் காவல்துறையை சார்ந்த கதை என்பதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களாக பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களது நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.குறிப்பாக சப் இன்ஸ்பெக்டர் செழியன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். கதையின் மிக முக்கியமான கதாபாத்திரமாகவும், திரைக்கதையின் திருப்பமாகவும் நடித்துள்ளார் துரை சுதாகர், ஆரம்பத்தில்.

இந்த தொடரில் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் மிக நேர்த்தியாக இருக்கிறது. கதை முழுவதும் மலைப்பிரதேசத்தில் நடப்பதால் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயணித்திருக்கிறது.

முதல் மூன்று அத்தியாயசங்கள் நம் கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுவது போல், அடுத்தடுத்த அத்தியாயங்கள் இல்லாதது சிறு குறையாக இருந்தாலும், இதுவரை சொல்லப்படாத மற்றும் சொல்ல வேண்டிய மிக முக்கியமான பிரச்சனைனையை எந்தவித சமரசமும் இன்றி சொல்லியிருக்கும் இயக்குநர் சற்குணம், அதை ஒரு சுவாரஸ்யமான இணையத் தொடராக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றவும், சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறவும் அரசு பதவிகளும், பணியும் மிக முக்கியமானது. அதற்காக கடுமையாக உழைக்கும் அவர்களது உழைப்பு பதவி ஆசைக்காகவும், அதிகார போதைக்காகவும் பணம் படைத்தவர்களுக்காக, எப்படி திருடப்படுகிறது என்பதை அரசு தேர்வுகளில் நடக்கும் பெரும் மோசடிகள் மூலம் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் அதற்கு பாராட்டுகள்.

மொத்தத்தில், ‘எக்ஸாம்’ நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை

0

கமல்ஹாசன் அறிக்கையின் சாராம்சம்:

என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே,

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது.

அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும்.

இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகின் மீது விழும்.

சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் திரைப்படத்திற்கு முறையாகப் பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்; வெறும் பிரம்மாண்டமான தோற்றத்துக்காக மட்டும் அது இருக்கக்கூடாது.

சினிமா பொருளாதாரத்தில் செய்யப்படும் எந்தவொரு சீர்திருத்தமும் தொழிலாளர்களின் ஊதியம், பாதுகாப்பு, கண்ணியம், உணவு, போக்குவரத்து, தங்குமிடம், மனிதாபிமானமிக்க பணிச் சூழல் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் அமையவே கூடாது. கடினமாக உழைப்பவர்களின் மேல் கூடுதல் சுமை விழுந்து விடக்கூடாது.

நாம் செய்ய வேண்டிய உண்மையான சீர்திருத்தங்கள் வேறு இடங்களில் உள்ளது. மோசமான திட்டமிடல், தவிர்க்க சாத்தியமுள்ள வீணடிப்புகள், ஆரவாரமான ஆடம்பரங்கள், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள், தயாரிப்புத் தாமதங்கள் மற்றும் செலவு செய்வதற்கும் அதன் நோக்கத்திற்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி ஆகியவற்றில் தான் சீர்திருத்தங்கள் தேவை.

ஒவ்வொரு காதல் கதையும் பாரிஸில் தான் மலர வேண்டுமா? ஒவ்வொரு தேனிலவும் சுவிட்சர்லாந்தில் தான் முடிய வேண்டுமா? அதிர்ஷ்டவசமாக, காதலுக்கு அந்நியச் செலாவணி தேவையில்லை. இந்திய சினிமாவும், இந்தியர்களும் தம்மீதும் நமது அழகான நாட்டின் மீதும் இன்னும் சற்றே கூடுதல் நம்பிக்கை வைக்க தகுதியானவர்கள்.

இந்தியத் திரைப்படத்துறை முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் ஒன்றிணைவதற்கான சரியான தருணம் இதுவென நான் நம்புகிறேன். வரவிருக்கும் பொருளாதாரச் சவால்களை நாம் எவ்வாறு கூட்டு முயற்சியுடன் எதிர்கொள்வது என்பது குறித்த ஒரு விரிவான விவாதத்திற்காக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழிற்சங்கங்கள், ஸ்டூடியோக்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், OTT தளங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு இடையிலான ஒரு மனம் திறந்த உரையாடலுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

திறமையான திரைப்படத் தயாரிப்புக்கான நடைமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு முறைகளை நாம் இணைந்து உருவாக்க வேண்டும். கவனமான படப்பிடிப்பு, நேர்த்தியான கால அட்டவணைகள், ஆடம்பரம் மற்றும் பரிவாரங்களுக்கான செலவுகளைக் குறைத்தல், பொருத்தமான உள்ளூர் மாற்றுகள் இருக்கும்போது தவிர்க்கக்கூடிய வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்துதல், படப்பிடிப்புத் தளங்கள் மற்றும் ஸ்டுடியோக்களில் ஆற்றலைச் (energy) சேமித்தல் அத்துடன் செட் கட்டுமானங்களின் பயன்படுத்திய பொருட்களை மறுபயன்பாடு செய்வதை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஆடம்பரமாகச் செய்யப்படுவதுதான் பிரமாண்டம் என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் நமது மிகச்சிறந்த திரைப்படங்கள் ஆடம்பரத்தால் ஆனவை அல்ல. மாறாக தெளிவான திட்டமிடல், நேர்த்தியான செயலாக்கம் மற்றும் உறுதியான நம்பிக்கையுடனே அவை உருவாக்கப்பட்டன.

உலக அளவில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவும் காலத்தில் ஒவ்வொரு துறையும் தொலைநோக்குப் பார்வையுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என்பதை, பொறுப்பான நுகர்வு மற்றும் கூட்டு ஒழுக்கத்திற்கான தேசிய அளவிலான அழைப்பு நமக்கு சரியான நேரத்தில் நினைவூட்டுகிறது. இந்தியத் திரைப்படத்துறையும் இந்தச் சூழலுக்கு ஏற்ப தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தனிப்பட்ட நலனை விட தேசிய நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தருணம் இது. நமது சினிமாத் துறை ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது; கலாச்சாரத்தை வடிவமைப்பதிலும், சிந்தனையைத் தூண்டுவதிலும் பெரும் பங்களிப்பாற்றுகிறது. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கையும் தாண்டிய பொறுப்புகளைக் கொண்டுள்ளது.

இந்தத் துறையிலிருந்து அதிகம் பெற்றுக் கொண்டவர்கள் தான் முதலில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இன்று நாம் சினிமாவின் பொருளாதாரத்தைப் பாதுகாத்தால், நாளை சினிமாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும்,

கமல் ஹாசன்.

தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனன் தலைமையில் சென்னையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ‘கலர்ஸ் 2.0’ வெல்ல்னஸ் சென்டர்

0

சென்னை: முன்னணி வெல்ல்னஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனம் ‘கலர்ஸ்’ (கலர்ஸ் ஹெல்த் கேர் 2.0) தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை ஈஸ்ட் அண்ணாநகரில் அதிநவீன வசதிகளுடன் புதிய கிளையை சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனன் ஜோதி ஏற்றி ‘கலர்ஸ் 2.0’ வெல்ல்னஸ் சென்டரை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாளவிகா மோகனன், ஆரோக்கியமும் அழகும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் இளைஞர்கள் தங்களது உடல் தகுதி மற்றும் சத்துணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சரியான உணவுப் பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் இயற்கையான அழகையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கும் என்றார். சென்னை மக்களுக்கு சர்வதேச தரத்திலான வெல்ல்னஸ் சேவைகளை கொண்டு வருவது பாராட்டத்தக்க முயற்சி என்றும் கூறினார். உடல் எடை குறைப்பு, சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு ‘கலர்ஸ்’ வழங்கும் சேவைகள் புதிய தன்னம்பிக்கையை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கலர்ஸ் ஹெல்த் கேர் நிர்வாக இயக்குநர் வெங்கட சிவாஜி கூனா பேசுகையில், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் ஏற்கனவே பல நகரங்கள் மற்றும் பட்டணங்களில் தங்கள் நிறுவனம் வெற்றிகரமாக சேவையளித்து வருவதாக தெரிவித்தார். சமீபத்தில் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் புதிய கிளையைத் தொடங்கியதையடுத்து, தற்போது சென்னையிலும் புதிய மையத்தைத் தொடங்குவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

கடந்த 22 ஆண்டுகளாக வெல்ல்னஸ் துறையில் சிறப்பான அனுபவத்துடன் செயல்பட்டு வரும் தங்கள் நிறுவனம், உடல் எடை கட்டுப்பாட்டின் மூலம் சுமார் 90 வகையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சிறப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளதாக விளக்கினார். தற்போது நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்கள், 100 நிபுணர் மருத்துவர்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அங்கீகாரம் பெற்ற அதிநவீன கருவிகளின் மூலம் ‘கலர்ஸ் 2.0’ வழியாக உலகத் தரத்திலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்றும் கூறினார்.

மேனேஜிங் டைரக்டர் டாக்டர் விஜய் கிருஷ்ணா பேசுகையில், இரண்டு தசாப்தங்களாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ‘கலர்ஸ்’ நிறுவனம், சென்னை மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த மையத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார். ஆப்பரேஷன்ஸ் டைரக்டர் கிருஷ்ண ராஜ் தும்மலா பேசுகையில், நாடு முழுவதும் 51 தோல் மருத்துவ நிபுணர்களுடன் சேவையளிக்கும் ஒரே வெல்ல்னஸ் நிறுவனம் தங்கள்தான் என்று பெருமையுடன் கூறினார்.

5எம் மீடியா சார்பில் ஜெய்தீப் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அதிநவீன வெல்ல்னஸ் சேவைகள் இனி சென்னை மக்களுக்கு மேலும் எளிதில் கிடைக்கப் போவதாக உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

“சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன் வெளியீட்டு விழா!

0

BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”.
இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது.
வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நண்பர்கள் அல்லது பணியிடத்தில் இருக்கும் சக ஊழியர்களின் வெற்றி, தோல்விகள் நம்மை பெரிதாக பாதிக்காமல் கடந்து போய்விடும். ஆனால் சிலரின் வெற்றி மட்டும் நமக்கே ஒரு தனி மகிழ்ச்சியை தரும். ‘நம்முடன் இருந்தவர் இன்று உயர்ந்து நிற்கிறார்’ என்ற பெருமிதம் மனதில் தோன்றும்.
அப்படிப்பட்ட நெருக்கமான வட்டாரத்தில் எனக்கு மிகவும் முக்கியமானவர் இயக்குநர் பாபு விஜய். இந்தப் படத்தில் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். ஒரு பைக் ரேஸில் ஒரே நேரத்தில் வண்டியையும் ஓட்டிக்கொண்டு, பெட்ரோல் கேனையும் சுமந்து கொண்டு வெற்றியை நோக்கி செல்லுவது எவ்வளவு கடினமோ, அதே அளவுக்கு சவாலான விஷயம்தான் முதல் படத்தை தயாரித்து இயக்குவது.
அந்தப் பொறுப்பும் போராட்டமும் என்ன என்பதை நன்றாக புரிந்துகொண்டதால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு மனதுடன் இந்தப் படத்திற்கு ஆதரவாக நின்று, என்னால் முடிந்த முழு உழைப்பையும் கொடுத்தேன்.
இந்தப் படம் அந்த அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் உரிய வெற்றியை கண்டிப்பாக பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படம் வெற்றி பெறும் நேரத்திலும் நீங்கள் அனைவரும் இதே அன்பும் ஆதரவும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, இந்த நிகழ்ச்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜெய் முரளி அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.”
உடை வடிவமைப்பாளர் கமலி பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்தப் படக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ஜெய் சாருக்கும், இந்தப் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக என்னை நம்பி இணைத்த பாபு சாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
உங்களிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் சார். இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
குறிப்பாக என் நெருங்கிய தோழி மீனாட்சிக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். படக்குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகளும் வெற்றிக்கான நல்வாழ்த்துகளும். நன்றி.”
ஸ்டண்ட் மாஸ்டர் முரளி பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய பாபு சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தின் பாடல்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அதற்காக பாபு சார் முழு அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
நானும் இதற்கு முன்பு ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ போன்ற பல படங்களில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறேன். அதுபோல பாபு சாரின் முதல் படத்திலேயே அவருடன் இணைந்து வேலை செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஜெய் சாருடன் பல ஆக்ஷன் காட்சிகளில் பணியாற்றியிருக்கிறோம். அந்த நேரங்களில் அவர் மிகுந்த ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்தார். ஆக்ஷன் காட்சிகளில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார்.
இந்தப் படத்தில் எனக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பை இயக்குநர் வழங்கியுள்ளார். அதற்காக அவர் எடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது.
வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. அதுபோல இந்தப் படம் இதில் பணியாற்றிய பலரின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
ரிச்சர்டுடன் எனக்கு நீண்டநாள் நட்பு உள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. குறிப்பாக இசையமைப்பாளருக்கு நான் தனியாக நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்துள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் அதிகமாக பேசும் பாடல்களாக இவை இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இதில் பணியாற்றிய அனைவருக்கும் நல்ல எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் வழங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”
எடிட்டர் டார்லிங் ரிச்சர்ட்சன் பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். எங்களுடைய இந்தப் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தால், அதன் அடித்தளமாக இருந்தது ‘பாஃப்டா’ தான். அங்குதான் ஜெய் சாரையும், பாபுவையும் முதன்முதலாக சந்தித்தோம். அங்கிருந்து தொடங்கிய இந்தப் பயணம் இன்று ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பயணத்தின் பலனாக இந்த முதல் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை என்னை நம்பி ஒப்படைத்த பாபு சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவர் மிகவும் நல்ல இயக்குநர். பொதுவாக சனி, ஞாயிறு மற்றும் அனைத்து பொது விடுமுறைகளிலும் எங்களுக்கு ஓய்வு கொடுப்பார். மாலை ஆறு மணிக்குள் அலுவலக வேலையையும் முடித்துவிடுவார். இப்படிப்பட்ட அமைதியான மற்றும் அன்பான குழுவுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் பிடித்த அனுபவமாக இருந்தது.
ஜெய் சாருடன் இதற்கு முன் ‘பலூன்’ படத்தில் அசிஸ்டென்ட் எடிட்டராக பணியாற்றியிருக்கிறேன். அதன் பிறகு என் முதல் படத்திலேயே அவருடன் மீண்டும் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆசீர்வாதமாக தோன்றுகிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.
அதேபோல் தனஞ்செயன் சார், சசி சார், மீனாட்சி மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்.
இங்கே இருக்கும் அனைத்து மாஸ்டர்களுக்கும் என் மரியாதை. இங்கு வந்திருக்கும் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.
என் வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று பேருக்கு நான் சிறப்பு நன்றி சொல்ல விரும்புகிறேன். முதலில் எடிட்டர் லலின் சார் — அவர் தான் என்னுடைய முதல் குரு. அடுத்து எடிட்டர் ரூபன் சார் — அவரிடம் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அசிஸ்டென்ட் எடிட்டராக பணியாற்றினேன். மூன்றாவதாக இயக்குநர் அட்லி சார். இந்த மூவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணமான முக்கியமான மனிதர்கள் இவர்கள்தான்.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.”
CFO சத்யநாராயணன் பேசியதாவது:
“அனைவருக்கும் மாலை வணக்கம். இயக்குநர் பாபு விஜய் மற்றும் இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் படத்திற்காக அனைவரும் மிகுந்த உழைப்புடன் பணியாற்றியிருக்கிறோம். குறிப்பாக இது பாபு விஜய்க்கு ஒரு கனவு திரைப்படமாகும்.
இந்தப் படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளித்து, இதை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”
இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். பல மேடைகளில் மைக்கைப் பிடித்து பேசிய அனுபவம் இருந்தாலும், இன்று இந்த மேடையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் சசி சாரை நேரில் சந்திப்பதில் மிகுந்த சந்தோஷம். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். உங்கள் ஒவ்வொரு படத்திலும் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான அம்சம் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. குறிப்பாக விஜய் ஆண்டனி சாருடன் வரும் உங்கள் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
‘கொலை’ படத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது கூட விஜய் ஆண்டனி சார் உங்களைப் பற்றி நிறையப் பேசுவார். அதனால் இன்று உங்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார்.
முருகதாஸ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் கொடுக்காத தாக்கமே இல்லை. உங்கள் படங்கள் தமிழ்நாட்டையே குலுக்கியிருக்கின்றன. இன்றைய பல மாற்றங்களுக்கும் நீங்கள் விதைத்த விதைகளே காரணம் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிப்பவர்.
ஜெய் ப்ரோவுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அருமையான அனுபவம். அவருடைய இசை அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பு விஷயங்களிலிருந்து இசையின் மிகச் சிறிய விவரங்கள் வரை என்னுடன் விவாதிப்பார். ‘இதை எப்படிச் செய்தீர்கள்?’, ‘இப்படிச் செய்தால் எப்படி இருக்கும்?’ என்று அருமையான ஆலோசனைகளை வழங்குவார். இந்தப் படத்தில் உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி ப்ரோ. படத்தைப் பார்த்தவுடன் உங்கள் ஸ்கிரீன் பிரசென்ஸ் அனைவருக்கும் புரியும்.
மீனாட்சி இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதேபோல் ரிச்சர்டின் வேலை எனக்கு முதல் படத்திலிருந்தே மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு ஃபுட்டேஜ் பார்க்கும்போதுதான் தெரியவந்தது. யாரும் அதைப் பற்றிச் சொல்லவில்லை. அது இந்தப் படத்தின் ஒரு இனிய சர்ப்ரைஸ் கேமியோ என்று நினைக்கிறேன்.
டார்லிங்கையும் ஒரு பொதுநண்பர் மூலமாகத்தான் எனக்குத் தெரியும். மிகவும் திறமையான எழுத்தாளர். இன்னும் நிறையப் படங்களில் நீங்கள் பணியாற்ற வேண்டும் ப்ரோ.
இப்போது இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொல்ல வேண்டும். அவரிடம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் அவரது வேகமான முடிவெடுக்கும் திறன். அவருடைய பிசினஸ் பின்னணி காரணமாக இருக்கலாம்; எந்த விஷயத்திலும் உடனே தெளிவான முடிவை எடுப்பார். நான் இதுவரை பணியாற்றிய பல இயக்குநர்கள் நீண்ட நேரம் யோசிப்பார்கள். பலரது கருத்துகளால் முடிவுகளை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் பாபு விஜய் அப்படியில்லை. அவர் எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது; அவர் நினைத்தாலும் கூட மாற்ற முடியாது. அந்த அளவுக்கு உறுதியான முடிவெடுப்பவர்.
அது எங்களைப் போன்ற டெக்னீஷியன்களுக்கு வேலை செய்வதை மிகவும் எளிதாக்குகிறது. நான் ஒரு டியூன் கொடுத்துவிட்டால், அது சரியானது என்று நம்பினால் மீண்டும் தேவையற்ற விவாதங்கள் இருக்காது. இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் பணியாற்றுவது எங்களுக்கெல்லாம் மிகவும் சுலபமாக இருக்கும். அதையும் தாண்டி அவருக்கு மிகச் சிறந்த இசை ரசனை உள்ளது. அவர் ரசித்து மகிழும் இசையை இந்தப் படத்தில் உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு என்னை அணுகினார்.
ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கி, வெளியீட்டிற்குக் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். அதுவும் முதல் படத்திலேயே அதைச் சாதித்திருக்கிறார். உண்மையில் இது ஒரு இமாலய சாதனை. இந்தப் பயணத்தில் பல சவால்கள் வந்தன. ஒவ்வொரு பிரச்சனையும் வந்தபோதும் அவர் எனக்கு ஃபோன் செய்வார். ‘பிரதர்…’ என்று குரல் சற்று தளர்ந்திருந்தால் ஏதோ பிரச்சனை என்று புரியும். அதே ‘பிரதர்…’ குரலில் உற்சாகம் இருந்தால் நல்ல செய்தி நடக்கிறது என்று அர்த்தம்.
இவ்வளவு சவால்களைத் தாண்டி இந்தப் படம் இன்று வெளியாகும் நிலைக்கு வந்துள்ளது. வரும் மே 15-ஆம் தேதி அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”
தொழிலதிபரும், Muthuraman Group of Companies நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினருமான திரு சிவகுமார் பேசியதாவது:
“வணக்கம். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மேடையில் பேச வருகிறேன். கடைசியாக பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு படங்களைத் தயாரித்தேன். அதன் பிறகு சினிமா துறையிலிருந்து முழுமையாக விலகி தொழில் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். தற்போது ஏழு நாடுகளில் எங்களுடைய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
எங்களுடைய தொழில் கூட்டாளர்களில் Daimler, BharatBenz, Samsung, Hyundai போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளன. மொத்தமாக சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் எங்களுடன் பணியாற்றுகிறார்கள். இந்த பத்து ஆண்டுகளில் நான் முழுமையாக தொழில் உலகில் பயணித்தேன். தற்போது புதிதாக 1200 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்குக் காரணம் CFO சத்யநாராயணன் தான். ஒரு முக்கியமான தொழில் பணியில் அவர் எனக்கு உதவி செய்தார். நான் கொடுத்த ஒரு பெரிய பொறுப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அதனால்தான் நேற்று மாலை அவர் கேட்டவுடன் இந்த விழாவிற்கு வரச் சம்மதித்தேன். பொதுவாக நான் இப்படிப்பட்ட சினிமா விழாக்களுக்கும் வருவதில்லை; மேடைகளில் பேசுவதும் இல்லை.
இயக்குநர் விஜய் பாபுவின் அடுத்த படத்திற்கு நான் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து தயாரிக்கத் தயாராக இருக்கிறேன். அவர் ஒரு நல்ல கதையைச் சொல்லட்டும். எங்களுடைய நிறுவன அளவில் பார்த்தால் அந்த 100 கோடி என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அவர் மீதும் CFO சத்யநாராயணன் மீதும் உள்ள நம்பிக்கையைக்காக அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.
சினேகன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு மூன்று ஆண்டுகள் நாங்கள் நெருக்கமாகப் பழகியிருக்கிறோம். அவர் அதை மறந்திருக்கலாம்; ஆனால் இன்று இந்த மேடையில் அவரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மாதிரியான பொதுவிழா மேடையில் பேசுவது எனக்கு முதல் அனுபவம். கிரிக்கெட் வாரியத்தில் இருந்த காலத்தில் நிறையப் பேசியிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் மேடையேறுவது இதுவே முதல் முறை. அனைவருக்கும் நன்றி.”
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:
“இன்று தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கும், இங்கே இருக்கும் மூன்று பேருக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதைப் பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி. குறிப்பாக முருகதாஸ் சாரைப் பார்க்கும்போது அது இன்னும் பெருமையாக இருக்கிறது.
விஜய் சாரின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற மூன்று முக்கியமான படங்கள் — ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’. இந்த மூன்று படங்களும் விஜய் சாருக்கு எவ்வளவு பெரிய வெற்றி கொடுத்ததோ, அதேபோல் முருகதாஸ் சாரின் பயணத்தையும் மிகப்பெரிய அளவுக்கு உயர்த்தியது.
‘சர்கார்’ படத்தில் நீங்கள் காட்டிய அரசியல் விழிப்புணர்வு அசாதாரணம். ஒரு ஓட்டின் சக்தியை அந்த அளவுக்கு சொல்லி வைத்தது ஒரு முன்னோக்கிய பார்வை போல இருந்தது. ஏதோ ஒரு மாற்றம் வரப்போகிறது என்பதை நீங்கள் அப்போதே உணர்த்திவிட்டீர்கள்.
‘கத்தி’ படத்தில் விவசாயிகளின் பிரச்சனையை எடுத்துச் சென்ற விதம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. அந்தப் படத்தில் விஜய் சார் கொடுத்த நடிப்பு குறித்து நான் அவரிடம் நேரிலேயே பாராட்டி இருந்தேன். கமர்ஷியல் படங்களில் இருந்த அவர், முதல் முறையாக அந்த அளவுக்கு எமோஷனலான மற்றும் அழகான நடிப்பைக் கொடுத்திருந்தார். அவர் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார்.
ஜெய் உண்மையிலேயே அன்பான தம்பி மாதிரி. தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் சாருக்காகச் சென்று பிரச்சாரம் செய்தது சாதாரண விஷயமல்ல. சினிமா துறையில் இருந்து ஒருவராகத் திறந்தவெளியில் அரசியல் ஆதரவு கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ‘என் அண்ணன் ஜெயிப்பார்’ என்ற நம்பிக்கையுடன் அவர் சென்றார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள், ரீல்ஸ் வெளியிட்டார். இன்று அந்த நம்பிக்கை உண்மையாகி, விஜய் சார் முதல்வராகியிருக்கிறார். அது நமக்கு மட்டுமல்ல, முழு சினிமா துறைக்கும் பெருமை.
அவர் தமிழ்நாட்டுக்கும், சினிமா துறைக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. ஜெய் ஆரம்பத்தில் விஜய் சாருக்குத் தம்பியாக நடித்தவர். இன்று இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தால், சின்ன தளபதி மாதிரி ஒரு தனி மேனரிசத்துடன் காமெடியும் நடிப்பும் கலந்த ஒரு தனித்துவம் இருக்கிறது.
இனிமேல் திரையில் விஜய் சாரைப் பார்க்க முடியாது. ஆனால் அந்த வெற்றிடத்தை நிரப்பும் திறன் ஜெய்க்கு இருக்கிறது. நல்ல கதைகள் கிடைத்தால், உங்கள் அண்ணனைப் போல நீங்களும் பெரிய உயரத்திற்குப் போக முடியும்.
பாபு விஜய் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்படியிருக்கும்போது, BOFTA திரைப்படக் கல்லூரியின் முதல் பேட்ச்சில் மாணவனாகச் சேர்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எனக்கு ஒரே குறிக்கோள் — விஜய் சாரோடு ஒரு படம் செய்ய வேண்டும்’ என்று அப்போதே சொன்னார்.
முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் முருகதாஸ் சாரிடம் பேசினேன். அவர் வாய்ப்புக் கொடுத்தார். ‘சர்கார்’ படத்தில் அவர் அசோசியேட்டாக வேலை செய்தார். அப்போது அவர் என்னிடம், ‘சார், என் கனவு நனவாயிடுச்சு. முருகதாஸ் சாரோட சேர்ந்து விஜய் சாரோட படத்தில் வேலை பண்ணிட்டேன்’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
அதற்குப் பிறகு அவருடைய கனவு, தானே ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான். அதுதான் இன்று ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற படமாக உருவெடுத்துள்ளது.
அவருடைய குடும்பமும் நண்பர்களும் முழுமையாக நம்பிக்கை வைத்து இந்தப் படத்தைப் பெரிய அளவில் தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் BOFTA-வின் முதல் பேட்ச் மாணவர் ஒருவர் எடிட்டராகவும், பாபு விஜய் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்கள். அவருடைய குருவாக இருந்த முருகதாஸ் சார் இந்த விழாவில் இருப்பதும், BOFTA-வில் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த சசிகுமார் சார் இங்கே இருப்பதும் எங்களுக்குப் பெருமை.
முதல் படம் என்பதால் ஒரு சின்ன, எதார்த்தமான படமாக ஆரம்பிக்கலாம் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர், ‘நான் கமர்ஷியல் இயக்குநரிடம் இருந்து வந்தவன். எனது முதல் படம் கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும்’ என்றார். அதற்கேற்ற மாதிரி இந்தப் படம் உருவாகியுள்ளது.
முருகதாஸ் சார் படங்களில் இருப்பது போலவே இதில் என்டர்டெயின்மென்ட்டும் இருக்கும்; அதே நேரத்தில் சமூகப் பொறுப்புள்ள ஒரு கருத்தும் இருக்கும். பாபு விஜய் தனது முழு முயற்சியையும் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.
இறுதியாக, இந்தப் படம் அனைவரையும் சென்றடையும் என்று நம்புகிறேன். ஊடக நண்பர்கள் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டும். இன்று தளபதி விஜய் மிகப்பெரிய சாதனையைச் செய்து தமிழ்நாட்டின் முதல்வராக உயர்ந்திருக்கிறார். அவருடன் தொடர்புடைய பலர் இணைந்து உருவாக்கிய இந்தப் படைப்பும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று உங்கள் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”
நடிகர் கதிர் பேசியதாவது:
“‘சட்டென்று மாறுது வானிலை’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். எனக்கு எப்போதுமே விஜய் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அதனால் அவருடன் நேரடியாக நடிக்க முடியாத ஒரு குறை இருந்தது. ஆனால் ஜெய் சாருடன் இந்தப் படத்தில் நடித்தபோது, விஜய் சாருடன் நடித்த உணர்வே கிடைத்தது. படம் முழுவதும் அவர் அந்த மாதிரியான ஒரு ஆற்றலோடு நடித்திருக்கிறார்.
அதிலும் முக்கியமாக, படம் சரியாக முடிந்து, ரிலீஸ் ஆகும் நிலைக்கு வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் நாம் ஒரு படத்தில் நடித்தாலும், அது மக்களிடம் சென்று சேர வேண்டுமென்றால் படம் வெளியாவதே முக்கியம். அந்த விஷயத்தை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறீர்கள். அதற்காக மிகவும் மகிழ்ச்சி.
மீனாட்சி மேம் உடன் நடித்ததும் ஒரு நல்ல அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் நீங்கள் உணர்ச்சிபூர்வமாகவும், அதே நேரத்தில் மிகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறீர்கள். முருகதாஸ் சார் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதேபோல் போஸ் வெங்கட் சார், தனஞ்செயன் சார், ரிச்சர்ட் அண்ணா, சினேகன் சார் மற்றும் இங்கே இருக்கும் அனைவருடனும் இந்த விழாவில் இருப்பது மகிழ்ச்சி.
ஊடக நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழுங்கள், நல்ல முறையில் எழுதுங்கள். இன்று மக்கள் திரையரங்கிற்கு வருவது முழுமையான பொழுதுபோக்கை எதிர்பார்த்துதான். அந்த எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன. அதனால் அனைவரும் இந்தப் படத்துக்கு ஆதரவு தர வேண்டும். நன்றி.”
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது:
“இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு இசையமைப்பாளர், கவிதைகளுக்கும் வரிகளுக்கும் உண்மையான ரசிகராக இருப்பது ஒரு பாடலாசிரியருக்கு மிகப்பெரிய சந்தோஷம். சாதாரணமாக ஒரு மெட்டு கிடைத்தாலே போதும், அதற்குள் வரிகளைப் பொருத்திவிடலாம் என்ற மனநிலை பல இடங்களில் இருக்கும். ஆனால் வரிகளை ரசித்து, படைப்பாளிகளையும் கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் இசையமைப்பாளர்கள் மிகவும் அரிது.
அந்த வரிசையில் இன்று மிக அழகாக வளர்ந்து கொண்டிருப்பவர் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். தமிழ் வரிகளையும் கவிதைகளையும் அவர் ரசிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஒன்று ‘சட்டென்று மாறுது வானிலை’, இன்னொன்று ‘உயிரே’. அந்த இரண்டு பாடல்களையும் நாங்கள் சேர்ந்து உருவாக்கினோம்.
மீதமுள்ள ஒரு பாடலை வேறு குழுவாகச் சேர்ந்து எழுதியிருந்தார்கள். அப்போது கூட நாங்கள் சிரித்துக்கொண்டே, ‘அந்த ஒரு பாடலையாவது எங்களுக்குக் கொடுங்கள்’ என்று சொன்னோம். ஆனால் அவர்கள், ‘இது நாங்கள் கூட்டமாகச் சேர்ந்து எழுதிக்கொண்டிருக்கிற பாடல்; இதற்குள் நீங்கள் வராதீர்கள்’ என்று நகைச்சுவையாகச் சொன்னார்கள். அந்த முழு அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பாபு விஜய் சாரைப் பார்க்கும்போது என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அவரது எளிமை. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ஒரு பக்கம் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டு, இன்னொரு பக்கம் கலை உலகத்தில் முழுமையாக இறங்குவது மிகவும் கடினம். பொதுவாக ஒருவருக்குக் கணக்குப் பார்ப்பதிலோ அல்லது கலையை ரசிப்பதிலோ தான் முழு கவனம் இருக்கும். ஆனால் இந்த இரண்டு உலகங்களையும் சமநிலையுடன் கையாண்டு, இப்படத்தை ஒரு அழகான படைப்பாக உருவாக்கியிருக்கிறார்.
இந்த மேடையில் இவ்வளவு நாட்களுக்குப் பிறகு ஊடக நண்பர்களையும், பல பழைய நண்பர்களையும் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய நவீன உலகத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பதே ஒரு திருவிழா போல ஆகிவிட்டது. எல்லாமே பிரிந்து போயிருக்கும் இந்த காலத்தில், முகத்தைப் பார்த்துப் பேசும் ஒரு அருமையான வாய்ப்பைப் இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் சசி சார் மற்றும் முருகதாஸ் சார் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களுடன் நேரடியாக வேலை செய்யவில்லை என்றாலும், அவர்களுடைய ரசிகனாக நான் எப்போதும் ஒரு மூலையில் இருப்பேன்.
ஜெய் சாரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்க்கும்போதெல்லாம் புதிதாகப் பள்ளியில் சேர்ந்த ஒரு குழந்தையைப் போலவே தோன்றுவார். எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும், எவ்வளவு அனுபவம் இருந்தாலும், அவரிடம் ஒரு குழந்தைத்தனமான குணம் இருக்கும். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு வரமாக அமைந்தது. குறிப்பாக நான் எழுதிய பாடல்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் மிகவும் பெரிய விஷயம். இன்றைய காலகட்டத்தில் பாடல்கள் சின்னச் சின்னப் பகுதிகளாக வெட்டி சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் முழுமையான நீளமான பாடல்களும், நல்ல தமிழ்ச் சொற்களும் கொண்ட பாடல்கள் வருவது அரிது.
அந்த வகையில் இந்தப் படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களாக அமையும் என்று நம்புகிறேன். அந்த வாய்ப்பை அளித்த இசையமைப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.”
நடிகை மீனாட்சி பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். பாபு விஜய் சாருக்கு நான் ஒரு சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மிகவும் நன்றி சார். நம்முடைய பயணத்தில் நிறையத் தடைகள் இருந்தன. ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டி இன்று இந்த நிகழ்வை நடத்தும் நிலைக்கு வந்திருக்கிறோம். என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி.
ஜெய் சாருடன் இது என்னுடைய இரண்டாவது படம். மீண்டும் அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அதேபோல் ரிச்சர்ட் சாருக்கு ஒரு சிறப்பு நன்றி. எங்களை அனைவரையும் திரையில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றிகள். வரும் மே 15-ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். நன்றி.”
இயக்குநர் சசி பேசியதாவது:
“பாபு விஜய் என்னிடம் வந்து ‘நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என்று சொன்னபோது, முதலில் நான் ‘யார் தயாரிப்பாளர்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான்தான் சார் தயாரிப்பாளர்’ என்றார். அதைக் கேட்டவுடன் எனக்குக் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. முதல் படமே இயக்கி, அதையும் தானே தயாரிப்பது ஏன் இந்த அளவுக்குப் பெரிய பரீட்சை என்று தோன்றியது.
அவர் எத்தனை நாட்களில் படத்தை முடிப்பீர்கள் என்று சொன்னபோதும் எனக்கு ஒரு பயம் இருந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு படத்தை எப்படி அந்த அளவுக்குத் தரமாக முடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் இன்று டிரெய்லர், பாடல்கள், அவற்றின் விஷுவல்ஸ் எல்லாம் பார்த்த பிறகு நான் உண்மையாகவே அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருக்கிறேன். ஒரு இயக்குநராக இதைப் பார்த்து மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவிற்குத்தான். ரிச்சர்ட் இல்லாமல் இந்த அளவுக்குக் குறுகிய காலத்தில் இவ்வளவு தரமான காட்சிகளை உருவாக்குவது சாத்தியமே இல்லை. அவருக்கு உண்மையாகவே ‘ஹாட்ஸ் ஆஃப்’. அதேபோல் கிரிஷின் இசையும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக பாரதியார் பாடலில் ராப் கலந்த விதம் மிகவும் அருமையாக இருந்தது.
பாபு விஜய் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நான் பாஃப்டாவில் (BOFTA) வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் சில மாணவர்கள் மட்டும் தனியாகக் கவனிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் பாபு விஜய். அவர்கள் எக்ஸாம், டெஸ்ட்டுக்காக எடுத்த குறும்படங்களே, ‘இவர் யார்?’ என்று எங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துவிடும். அந்த மாதிரி நான் குறிப்பாக நினைவில் வைத்திருந்த மாணவர்தான் இவர்.
அவருடைய படம் எப்படி இருக்கும் என்று நான் மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தேன். அவர் ஒருமுறை இந்தக் கதையின் மையக் கருத்தை மட்டும் என்னிடம் சொன்னார். அது மிகவும் இயல்பான, நம்ம வாழ்க்கையில் நடந்திருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அந்த ஒரு கருத்தே இந்தப் படத்தை வெற்றிகரமான இடத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் அப்போதே நம்பினேன்.
மாணவராக இருந்தபோது பாபு விஜய் என்னிடம் எப்படி ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினாரோ, அதே எதிர்பார்ப்பை இந்த டிரெய்லரும் பாடல்களும் மீண்டும் கொடுத்திருக்கின்றன. ஜெய் சாரின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பாபு விஜய்க்கும், இந்தப் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். அனைவருக்கும் நன்றி.”
இயக்குநர் முருகதாஸ் பேசியதாவது:
“அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இன்று பாபு விஜய்யின் முதல் இயக்கம் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகும் பட விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படம் வெளியான போது நான் எவ்வளவு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருந்தேனோ, அதே உணர்வை இன்று பாபு விஜய்யிடம் பார்க்கிறேன்.
பாபு விஜய் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடன் வேலை செய்த அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஒரு விஷயம் தெரியும் — ஆரம்பத்தில் வேலைக்கு அழைக்கும் போது நல்ல சம்பளம் பேசிவிடுவார். ஆனால் படம் முடியும் நேரத்தில் தான் புரியும்; அவர் எல்லோரிடமிருந்தும் மூன்று மடங்கு உழைப்பை வாங்கியிருப்பார். அது அவருடைய அர்ப்பணிப்பு.
ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஞாபகம் வருகிறது. ‘சர்கார்’ படத்தின் போது நடந்தது. படம் முடிந்த பிறகு ஒரு இன்டர்வியூ நிகழ்ச்சி நடந்தது. அதில் நான், ஹீரோயின் மற்றும் பழ.கருப்பையா சார் கலந்து கொண்டோம். அப்போது பழ.கருப்பையா சார் பாபு விஜய்யை அழைத்து, “எனக்கு அரசியல் மேடைகளில் பேசத் தெரியும். ஆனால் சினிமா இன்டர்வியூ கொடுக்கத் தெரியாது. என்ன பேசுவது?” என்று கேட்டார்.
அதற்கு பாபு விஜய், “சார், நீங்கள் முதலில் இந்தப் படத்தில் நடிக்கப் பயந்தீர்கள். ‘நான் அரசியலில் இருக்கிறேன், வில்லன் கதாபாத்திரம் எப்படிச் செய்வது?’ என்று கேட்டீர்கள். அப்போது நான், ‘உங்கள் பேரப்பிள்ளைகளிடம் கேளுங்கள்’ என்றேன். அவர்கள் ‘விஜய் சார் படம் என்றால் கண்டிப்பாகச் செய்யுங்கள், நீங்கள் மக்களிடம் நன்றாக ரீச் ஆகுவீர்கள்’ என்று சொன்னார்கள். அதையே சொல்லுங்கள் சார்,” என்று கூறினார்.
இன்டர்வியூ ஆரம்பித்ததும், பழ.கருப்பையா சார் தொடர்ந்து “பாபு விஜய்… பாபு விஜய்…” என்று பெயரைச் சொல்லிக்கொண்டே பேச ஆரம்பித்தார். நான் பக்கத்தில் இருந்தபடி, ‘இவ்வளவு தடவை என் பெயரைச் சொல்கிறாரே!’ என்று ஆச்சரியப்பட்டேன். அந்த நேரம் இன்றும் மறக்க முடியாத நினைவு.
அதுமட்டுமல்ல, எனக்கு மிகவும் கடினமான காலங்களில் பாபு விஜய் என்னுடன் இருந்திருக்கிறார். ஒரு படம் வெளியானபோது, போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு பெரிய பிரச்சனைகள் நடந்துகொண்டிருந்தன. போலீஸ் சூழ்ந்திருந்த சூழ்நிலையில், நாங்கள் இருவரும் டிண்டட் கிளாஸ் கொண்ட காரில் அமைதியாக உட்கார்ந்து காசி தியேட்டர் அருகே நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தோம். போஸ்டர்கள் கிழிக்கப்படுவதைப் பார்த்தபோது கண்களில் தண்ணீர் வந்தது. அந்த மாதிரி கடினமான நேரத்திலும் அவர் என்னுடன் இருந்தார்.
இன்று காலை கூட அவர் என்னிடம், “சார், அந்தச் சம்பவத்தைப் பேசுங்க” என்று சொன்னார். இப்போ பார்த்தீங்களா? மறுபடியும் அதையே பேச வைத்துவிட்டார். அதுதான் பாபு விஜய்யின் திறமை. மிகவும் நேர்மையானவர், உழைப்பாளி.
என்னிடம் இருந்து இதுவரை பன்னிரண்டு உதவி இயக்குநர்கள் இயக்குநர்களாகி இருக்கிறார்கள். அதில் இன்று பாபு விஜய்யின் முதல் படம் வெளிவருவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தினமும் காலையில் ஏழு, ஏழரை மணிக்கே காரில் கீழே நின்றுகொண்டிருப்பார். ரெடியாக எல்லா ரிஹர்சல்களையும் செய்து வைத்திருப்பார். அந்த அளவுக்கு உழைப்பாளி. என்னைக் கூட சோம்பேறியாக்கிய உதவி இயக்குநர்களில் முக்கியமானவர் பாபு விஜய்.
இன்று அவர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துவதல்ல, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஜெய் பற்றியும் சொல்ல வேண்டும். அவருடனும் எனக்கு ஒரு நல்ல கனெக்ஷன் இருக்கிறது. என் தயாரிப்பில் வந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ‘ராஜா ராணி’. இப்போது இது மூன்றாவது முக்கியமான கூட்டணி போல இருக்கிறது. இது ஹாட்ரிக் வெற்றியாக அமைய வேண்டும்.
ஜெய் மிகவும் நல்ல நடிகர். அவருடைய காமெடி டைமிங் அருமை. திரையில் மட்டுமல்ல, நேரில் பேசினாலும் அதே நகைச்சுவை உணர்வு இருக்கும்.
மீனாட்சி ஒரு கிளாசிக்கல் டான்சர். என் மகளும் அவரும் ஒரே குருவிடம் நடனம் கற்றவர்கள். அதனால் அவரை முன்பே பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் மிகவும் அழகாகவும் நன்றாகவும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்டின் வேகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டேன். “ரொம்ப ஃபாஸ்ட் சார்” என்று சொன்னார்கள். வேகமாக வேலை செய்வது ஒரு விஷயம்; அதே நேரத்தில் தரத்தையும் கொடுப்பது மிகவும் கடினம். ஆனால் ரிச்சர்ட் அதைச் சாதித்திருக்கிறார். செலவழித்த பணத்தைத் திரையில் தரமாகக் காட்டுவது ஒரு கேமராமேனின் மிகப்பெரிய பொறுப்பு. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
எடிட்டரும் மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறார். இசையும் அருமை. குறிப்பாக அந்த “பீவர் என்று…” பாடலின் வைப்ரேஷன் கேட்கும்போதே மிகவும் நன்றாக இருந்தது. பாடல்களும் விஷுவல்ஸும் தரமாக இருந்தன.
பல தடைகள், போராட்டங்களைத் தாண்டி பாபு விஜய் இந்தப் படத்தை உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறார். அதனால் பத்திரிக்கை நண்பர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், யூடியூபர்கள் அனைவரும் இந்தப் படத்துக்கு நல்ல ஆதரவு கொடுக்க வேண்டும். பாபு விஜய் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.”
இயக்குநர் பாபு விஜய் பேசியதாவது:
“முதலில் ஆண்டவனுக்கு நன்றி. இப்படி ஒரு அற்புதமான தருணத்தையும், உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் கொடுத்ததற்கு. என் பெற்றோருக்கு என் மனமார்ந்த அன்பும் நன்றியும். அதைவிட முக்கியமாக என் மனைவி லக்ஷ்மி சர்மாவுக்கு நான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இருக்க முடியாது. எல்லா வகையிலும் என்னை முழுமையாக ஆதரித்தவர் அவர் தான்.
அதேபோல் என் நண்பர் சத்யநாராயணன். நான் சோர்ந்து போன நேரங்களில் எல்லாம் என்னைத் தாங்கிப் பிடித்து, ‘உங்களால் முடியும்’ என்று சொல்லி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர். அவருக்கும் என் நன்றி.
எனக்கு சினிமா என்றால் மனதில் முதலில் வருவது ஒரே ஒரு பேர் — A.R. முருகதாஸ் சார். எனக்கு ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையே இல்லை. ‘ரமணா’ படம் பார்த்ததிலிருந்து முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக ஒரு படம் வேலை செய்தாலே போதும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. அந்த அளவுக்கு அவர் மீது ஒரு பைத்தியக்காரமான அன்பு. நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால், அவர்களுடைய வீட்டில் பெரிய பிரச்சனை வந்திருக்கும் அளவுக்கு அவர் மீது காதல் இருந்தது.
சாருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏனென்றால் அவர் மற்றவர்களுக்காக அதைவிட அதிகமாகச் செய்வார். குறிப்பாக உதவி இயக்குநர்களுக்காக. இன்று நான் இங்கே நிற்பதற்கும், இந்தப் படம் உருவானதற்கும் காரணம் நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள்தான்.
உண்மையில் அவரிடம் இருந்து நான் கற்றது ஐந்து சதவீதம் கூட இருக்காது. அந்த ஐந்து சதவீதத்திற்குத்தான் நீங்கள் இவ்வளவு பாராட்டுகள் சொல்கிறீர்கள். அவரை முழுமையாக யாராலும் கற்றுக்கொள்ள முடியாது.
முருகதாஸ் சார் உதவி இயக்குநர்களை வேலை செய்ய விடுவார். அது சரியா, தவறா என்று முதலில் கேட்க மாட்டார். முதலில் செய்யச் சொல்வார். பிறகு திருத்துவார். உதவி இயக்குநர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கே அவர் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.
அவருடன் வேலை செய்தால் வெளியுலகமே தெரியாது. அந்த அளவுக்கு எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கற்றுக்கொடுப்பார். நான் படம் தயாரிக்கப் போகிறேன் என்று முடிவு செய்தவுடன் முதலில் தனஞ்செயன் சாரைச் சந்தித்தேன். அவர் சொன்ன ஆலோசனைகள் இந்தப் படத்தில் மிகவும் உதவியாக இருந்தது.
தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. முதலில் ரிச்சர்ட் சார். உண்மையில் இந்தப் படம் இந்த அளவுக்குத் தரமாக வந்ததற்கு மிகப்பெரிய காரணம் அவர். நான் முதலில் அவரை அணுகவே இல்லை. பெரிய கேமராமேன், சின்ன படம் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கே விஷயம் தெரிந்து அவர் என்னைத் தொடர்பு கொண்டார். ‘நான் இந்தப் படம் பண்ணுறேன்’ என்றார்.
அது பெரிய விஷயம் — இன்று வரை அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. ‘நீங்கள் முதல் முறையாகத் தயாரிக்கிறீர்கள். பணம் முக்கியமில்லை’ என்று சொல்லிவிட்டு முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். ஒரு கேமராமேன் மாதிரி அல்ல, ஒரு தயாரிப்பு நிர்வாகி மாதிரி வேலை பார்த்தார். இந்தப் படத்துக்கு அவர் செய்த உதவியை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
இசையமைப்பாளர் கிரிஷ், அவர் ஒரு நல்ல லிஸனர் (Listener). நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதைப் பொறுமையாகக் கேட்டு, அதற்குச் சரியான இசையைத் தருவார். நாங்கள் சொல்ல முடியாத உணர்வுகளை இசையாக மாற்றிவிடுவார்.
கதாநாயகி மீனாட்சியை முதலில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். இந்தக் கதைக்குச் சரியானவர் இவர்தான் என்று தோன்றியது. அவரைத் தொடர்பு கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார்கள். அவருக்கும் என் நன்றி.
ஜெய் சாரை அணுகும் முன்பே நிறையப் பேர் என்னிடம் எதிர்மறையாகப் பேசினார்கள். ‘ஜெய்யா? அவர் ஷூட்டிங்கே வரமாட்டார்’, ‘அவரை வைத்து படம் எடுக்க முடியாது’, ‘அது வேலை ஆகாது’ என்று பலரும் சொன்னார்கள். ஒருநேரம் எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது.
அப்போது சரவணா சாரிடம் பேசினேன். அவர் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார் — ‘அவர் ஒரு குழந்தை மாதிரி. சரியாகப் பழகி, அவரைப் புரிந்து கொண்டு நடத்தினால், உங்களைவிட முன்னாடியே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நிற்பார்’ என்றார்.
அது உண்மையிலேயே அப்படித்தான் நடந்தது. ஜெய் சார் உண்மையில் ஒரு குழந்தை மாதிரி. நடுவில் சில பிரச்சனைகள் வந்தாலும், அமைதியாக விளக்கிப் பேசினால் உடனே புரிந்துகொள்வார். ஒரு ஹீரோவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஈகோவும் காட்ட மாட்டார். கேரவனுக்குப் போனால் நேரம் ஆகிவிடும், லைட்டிங் மாறிவிடும் என்று நினைத்து, அங்கேயே உடை மாற்றிக்கொள்வார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்.
அவர் ஒரு சிறந்த நடிகர். உண்மையாகச் சொன்னால், அவரை இன்னும் முழுமையாக எந்த இயக்குநரும் பயன்படுத்தவில்லை — என்னையும் சேர்த்துச் சொல்கிறேன். படம் பார்க்கும்போது எனக்கே தோன்றியது, ‘இவரை வைத்து இன்னும் எவ்வளவு பெரிய கதைகள் செய்யலாம்!’ என்று. அந்த அளவுக்கு அற்புதமான பர்ஃபார்மன்ஸ் கொடுத்தார். மிகவும் ஒத்துழைப்பானவர்.
அவரைப் பற்றிச் சிலருக்குத் தவறான எண்ணங்கள் இருக்கலாம். சில சம்பவங்களை வைத்து அவரைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் மிகவும் நல்ல மனிதர். ரொம்ப நல்ல மனசு. “தேங்க் யூ செல்லம்… லவ் யூ,” என்று உணர்ச்சியுடன் பேசினார்.
அனைத்து டெக்னீஷியன்களும் இந்தப் படத்துக்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள். ஆனால் அது வெறும் வேலை இல்லை — அன்போடு செய்த வேலை. எல்லோரும் மகிழ்ச்சியுடன் வேலை செய்தார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
“A.R. முருகதாஸ் சாரின் ‘சர்கார்’ படத்தில்தான் என் உதவி இயக்குநர் வாழ்க்கை ஆரம்பித்தது. இன்று சிஎம் விஜய் சாராக அவர் உயர்ந்திருக்கும் நேரத்தில், அவருடைய ‘சர்கார்’ காலத்தில், இன்று என் முதல் படம் வெளிவருகிறது. அதற்கான வாய்ப்பைக் கொடுத்த முருகதாஸ் சாருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நான் நன்றி சொல்கிறேன்.
இந்தப் படத்தில் விஜய் சார் ரெஃபரன்ஸ்கள் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதான். ஏனென்றால் நான் அவருடைய ரசிகன். எங்கள் படம் மே 15 வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.”
நடிகர் ஜெய் பேசியதாவது:
“இங்கே வந்திருக்கும் அனைத்துப் பெரியவர்களுக்கும், மீடியா நண்பர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக A.R. முருகதாஸ் சார், சசி சார், சினேகன் சார், எங்கள் ஃபைட் மாஸ்டர், எடிட்டர், இசையமைப்பாளர், கேமராமேன் ரிச்சர்ட் சார் — எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
இப்போது எல்லாருமே பிஸியானவர்கள். அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும், ‘இவர்கள் அழைக்கிறார்கள், போய் பார்க்கலாம்’ என்ற அன்போடு இங்கே வந்திருக்கிறீர்கள். அதற்காக நான் உண்மையாகவே மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். நீங்கள் இந்த நேரத்தை எங்களுக்காகச் செலவழிப்பதை நான் மிகவும் மதிக்கிறேன்.
பொதுவாக என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் என்னிடம் ‘உனக்கு பிடித்த இயக்குநர் யார்?’ என்று கேட்பார்கள். நான் எப்போதுமே ஒரே பெயரைத் தான் சொல்வேன் — முருகதாஸ் சார். பின்னாளில் அவர்கள் கூட ஆப்ஷன்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள் — மணிரத்னம் சார், ஷங்கர் சார், முருகதாஸ் சார்… யார் பிடிக்கும்? என்றாலும், நான் ‘முருகதாஸ் சார் தான்’ என்பேன்.
ஏனென்றால் அவருடைய படங்களையும், அவருடைய கேரக்டரையும், பேசும் விதத்தையும் நான் அந்த அளவுக்கு ரசித்திருக்கிறேன். அவருக்கே தெரியாமல் நிறைய விஷயங்களை நான் அவரிடமிருந்து ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். ஒரு விஷயத்தை மிகவும் இனிமையாக, சரியாகப் புரியும்படிச் சொல்வார்.
ஒருநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் வாழ்க்கையில் நான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன்.
‘ஷூட்டிங் டைம்ல மட்டும் கொஞ்சம் சீக்கிரம் தூங்குங்க. லேட்டா தூங்கினா டார்க் சர்கிள்ஸ் வரும். அதை மறைக்க மேக்கப் போடுவாங்க. அந்த மேக்கப்புக்கு கேமராமேன் லைட்டிங் மாற்றணும். அதனால் உங்க ஒரு சின்ன தூக்கமின்மை பின்னாடி நிறைய பேரோட வேலையைப் பாதிக்கும்’ என்றார்.
அது எனக்குப் பெரிய பாடம் தந்தது. அன்றிலிருந்து இன்று வரை நான் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறேன். இன்னைக்கும் மறுநாள் காலை ஷூட்டிங் என்றால் இரவு 10:30 ஆனாலே முருகதாஸ் சார் ஞாபகம் வந்துவிடுவார். அந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் செய்தது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், முதலில் வேறு ஒருவர் பற்றிப் பேச்சு நடந்தது. பின்னர் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இசையமைப்பாளர்தான் நமக்கு வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். முதல் பாடலின் முதல் 30 விநாடிகள் கேட்டவுடனே புரிந்துவிட்டது — ‘சரியான ஆள் கிடைத்துட்டார்’ என்று.
அந்தப் பாடல் AirPods-ல் கேட்கும்போது அவ்வளவு தரமாக, புதுசாக இருந்தது. அதனால் தான் பாடல் வெளியான உடனே மில்லியன் கணக்கில் பார்வைகள் போனது.
எடிட்டரும் அதே மாதிரி மிக நேர்த்தியாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படம் அவருக்கு ரொம்ப சவாலான படம். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.
முக்கியமாக ரிச்சர்ட் சார்… ரொம்ப நன்றி சார். உங்கள் உழைப்பை நினைத்தாலே எனக்குக் கஷ்டமாக இருக்கும். நாங்கள் ‘9 to 6 ஷூட்டிங்’ என்று சொல்வோம். ஆனால் காலை 8 மணிக்குப் போய், மாலை 5:30-க்கு ‘சன்செட்டில் இன்னொரு ஷாட் எடுத்தா நல்லா இருக்கும்’ என்று ஆரம்பித்து, அது ஒரு முழு சீனாக மாறி, இரவு 10 மணி ஆகிவிடும்.
நான் வீட்டுக்குப் போகும்போது கூட, ‘இன்னும் ஷூட் முடியல சார், வேறு லொக்கேஷனுக்கு போயிருக்காங்க’ என்பார்கள். அவர்கள் இரவு 12, 1 மணி வரை வேலை செய்து, மறுநாள் காலை 7 மணிக்கே மீண்டும் ஸ்பாட்டில் இருப்பார்கள். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு.
அவரை கேமராமேனாக அறிவித்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் அப்போதுதான் ‘மாநாடு’ படம் வந்திருந்தது. அந்தப் படம் கேமராமேன், எடிட்டர் இருவருக்கும் மிகச் சவாலான படம். அதைப் பார்த்தவுடன் ‘வாவ்’ என்று தோன்றியது. அதே தரமும், ஃப்ரேமிங்கும் இந்தப் படத்திலும் இருக்கிறது.
இப்போது தயாரிப்பாளர் பாபு விஜய் பற்றிச் சொல்லணும். ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று இந்தப் படத்தில்தான் எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது. ஒரு நடிகனாக இருந்தால், பணம் எங்கிருந்து வருகிறது, என்ன வட்டி கொடுக்கிறார்கள் — இதெல்லாம் தெரியாது. ஆனால் இங்கே நான் நேரில் பார்த்தேன்.
ஒரு ஷாட்டுக்காக கூட அவர் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார். தேவையான இடத்தில் செலவு செய்வார். தேவையில்லாத இடத்தில் வீண் செலவு செய்ய மாட்டார். அது ஒரு நல்ல தயாரிப்பாளரின் குணம்.
இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொன்னால், சில சமயம் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகும் கனவில் கூட ‘டார்லிங் ரெடி டார்லிங்’ என்று கூப்பிடுவார் போல இருக்கும். அந்த அளவுக்கு அவர் நம்மைச் சோர்வடைய விடமாட்டார்.
ஒரு நாளில் 150 சீன்கள் எடுத்த மாதிரி வேலை நடக்கும். ஆனால் நம்மை எங்கும் டயர்ட் ஆக விடாமல், ஒரு எனர்ஜிக்குள் வைத்திருப்பார். அவருக்கு வேலை என்ன வேண்டும் என்று தெளிவாகத் தெரியும். அதே நேரத்தில் யாராவது ஒரு நல்ல சஜெஷன் சொன்னால் அதை அழகாக ஏற்றுக்கொள்வார்.
கதை சொன்ன உடனே எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் அவர் முழுக்க ஒரு பேக்கேஜாக இந்தப் படத்தை யோசித்திருந்தார். முதல் பாதியில் கொஞ்சம் விஜய் சார் ஃபேன் மொமெண்ட்ஸ் இருக்கும். உடல் மொழி, டயலாக் டெலிவரி — அந்தச் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் கதை முழுக்க வேறு ஒரு இம்பாக்ட்டுக்கு போய்விடும்.
அது ஒரு முதல் இயக்குநருக்கு ரொம்ப சவாலான ஸ்கிரிப்ட். அவர் நினைத்திருந்தால் சாதாரண கமர்ஷியல் பாதைக்கு போயிருக்கலாம். ஆனால் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்.
அதனால் இந்தப் படத்தை நீங்கள் திரையரங்கில் பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”
இப்படத்திற்குக் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரிச்சர்ட் M. நாதன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் S. கண்ணன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.
இப்படம் வரும் மே 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Apollo Cancer Foundation Reinforces Commitment to Thalassemia Care; Celebrates Young Survivors; Strengthens Access to Lifesaving BMT Care

0
  • Initiative announced on World Thalassemia Day 2026 aims to improve access to life-saving Bone Marrow Transplantation across India.

Chennai, May 14, 2026: India continues to carry one of the world’s highest Thalassemia burdens, with an estimated 1–1.5 lakh children living with Thalassemia and nearly 10,000–15,000 affected babies born every year. Marking World Thalassemia Day 2026, Apollo Cancer Foundation along with Apollo Speciality Hospitals, Teynampet, came together to celebrate the inspiring journeys of 30 Thalassemia survivors, while reaffirming its continued commitment towards awareness, early diagnosis, and access to advanced treatment for children battling Thalassemia
Thalassemia is a hereditary blood disorder in which the body is unable to produce healthy hemoglobin adequately, often leading to severe anemia and lifelong dependency on blood transfusions in many children. Without timely treatment and medical intervention, the condition can lead to serious health complications affecting growth, immunity, organs, and overall quality of life.
India continues to carry one of the world’s highest Thalassemia burdens, with nearly 1–1.5 lakh children living with Thalassemia. Additionally, around 10,000–15,000 affected babies born every year. Experts estimate that close to 42 million Indians are carriers of beta-thalassemia, underlining the growing need for awareness, early diagnosis, carrier screening, and timely access to treatment.
Recognising the long-term impact of this disorder on children and families, Apollo Cancer Foundation and Apollo Speciality Hospitals, Teynampet, have been actively strengthening Pediatric Hematology and Thalassemia care through advanced Bone Marrow Transplant (BMT) programs, awareness initiatives, early diagnosis support, and comprehensive long-term care for patients across Tamil Nadu and India.
As part of these continued efforts, Apollo Cancer Foundation, in association with Coal India Ltd (CIL), is supporting access to life-saving Bone Marrow Transplantation for children from economically weaker backgrounds under the Thalassemia Bal Sewa Yojana (TBSY) initiative. Launched in 2017 and currently in Phase IV, the initiative has emerged as one of India’s major healthcare access programs supporting children diagnosed with Thalassemia Major and Severe Aplastic Anaemia through a pan-India treatment approach.
Bone Marrow Transplantation remains the only established curative treatment option for many children affected by Thalassemia Major. Through Apollo’s specialized Pediatric Hematology and BMT infrastructure, eligible children undergo clinical evaluation, donor matching assessment, medical screening, pre-transplant investigations, and structured treatment support to improve access to timely care.
Apollo Hospitals has completed over 500 Thalassemia Bone Marrow Transplants, with the program achieving a 93% thalassemia-free survival rate. Apollo has also continued to advance innovative treatment approaches, including haplo-identical transplants for children without fully matched donors, further improving access to curative care for families navigating this rare blood disorder.
Addressing this condition, Dr. Preetha Reddy, Vice Chairperson of Apollo Hospitals Enterprise Limited said, “Thalassemia silently impacts thousands of children and families across India, yet awareness around the condition still remains limited. With early screening, timely diagnosis, and access to advanced treatment, countless young lives can be transformed. At Apollo, we believe healthcare is a shared responsibility that extends far beyond hospitals. Real change happens when healthcare institutions, governments, and corporate India come together with a common purpose. We sincerely appreciate the support extended by Coal India Limited in helping strengthen access to life-saving care and in bringing greater visibility to this often-overlooked disease. Their contribution stands as a strong example of how corporates can create meaningful social impact beyond business. We hope many more organisations step forward to support awareness, early detection programmes, and treatment initiatives for Thalassemia, because every child deserves not just treatment, but the opportunity to lead a healthy and fulfilling life.”
Speaking on the occasion, Dr. Revathi Raj, Senior Consultant – Paediatrics & Haematology Oncology, Apollo Speciality Hospitals, Teynampet, said “Thalassemia affects not only the child, but also the emotional and financial wellbeing of entire families. With timely diagnosis, awareness, and access to Bone Marrow Transplantation, children can lead healthier and disease-free lives. Today, we celebrate the courage of every Thalassemia warrior who continues to inspire us.”
Dr. Ramya U, Consultant – Paediatric Haematology, Apollo Speciality Hospitals, Teynampet, added, “Thalassemia is not just a lifelong medical condition, but a challenging journey for children and their families. Many children continue to depend on regular blood transfusions due to delayed diagnosis and limited awareness around curative treatment options. Initiatives like these are important in strengthening awareness, enabling timely intervention, and improving access to advanced care that can help children lead healthier and disease-free lives.”
Mr. Karan Puri,Chief Executive Officer, Apollo Speciality Hospitals, Teynampet, said, “At Apollo, we are seeing a gradual but meaningful shift in the way Thalassemia is being diagnosed and managed, especially over the last few years in Tamil Nadu. Increased awareness, earlier intervention, improved screening, and access to specialized Pediatric Hematology and Bone Marrow Transplant care are helping more children move beyond lifelong dependency on transfusions and lead healthier lives. Seeing Thalassemia survivors today living with greater confidence and improved quality of life is extremely encouraging for both families and clinicians, and it reinforces the importance of continued awareness and timely treatment.”
The event also featured inspiring survivor interactions and patient journeys, celebrating children not as patients, but as symbols of courage, resilience, and hope.
The initiative further strengthens ongoing efforts by healthcare institutions, CSR partners, and government-supported programs to improve treatment accessibility and reduce the healthcare burden associated with Thalassemia in India. These stories reflect the potential impact of timely diagnosis, financial support, and access to specialized transplant care for families navigating Thalassemia.
About Apollo Hospitals:
Apollo revolutionised healthcare when Dr. Prathap Reddy opened the first hospital in Chennai in 1983. Today, Apollo is the world’s largest integrated healthcare platform with over 10,400 beds across 76 hospitals, 6,600+ pharmacies, 264 clinics, 2,182 diagnostic centres, and 800+ telemedicine centres. It is one of the world’s leading cardiac centers, having performed over 3,00,000 angioplasties and 2,00,000 surgeries. Apollo continues to invest in research and innovation to bring the most cutting-edge technologies, equipment, and treatment protocols to ensure patients have access to the best care in the world. Apollo’s 1,20,000 family members are dedicated to delivering exceptional care and leaving the world better than we found it.

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

0

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் ‘வடசென்னை 2 ‘ படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான இன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்… தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து … இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.

இந்த பரபரப்பான அறிவிப்பை கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக பயணத்தை பற்றிய ஒரு அரிதான பார்வையையும் வழங்குகிறது. இதில் உள்ள கதைகள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றன. வடசென்னை படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் ‘ஆடிஷன் ‘ செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். அதில் இரண்டு முழு நிமிடங்களுக்கு தடையின்றி கெட்ட வார்த்தையை பேசும் படி அவரிடம் கேட்கப்பட்டது. இது ஒரு அசாதாரணமான பணி என்றாலும்.. அவர் தயக்கமின்றி அதை ஏற்றுக் கொண்டு, மனதில் நீடித்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த உரையாடல் பிரத்யேகமானதாகவும் மாறுகிறது. ஐஸ்வர்யா தனது கல்லூரி கால நினைவை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரிகளில் படித்த பிறகு அந்த சூழலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு.. தொடர்ந்து பத்து நாட்கள் வகுப்புகளை தவிர்த்து இருக்கிறார். அந்தத் தருணம் நேர்மையுடனும் , நகைச்சுவையுடனும் வெளிப்பட்டு… பார்வையாளர்களின் மனதை தொடுகிறது.

ஜெகன் கிருஷ்ணனின் எளிமையான மற்றும் ஈர்க்கும் பாணியால் வழிநடத்தப்பட்டு, ‘ஆஃபீஸ் கானா’ இசை குழுவின் ஆற்றல் மிக்க பங்களிப்பால் மெருகேற்றப்பட்ட இந்த எபிசோட்.. புதிய தகவல்களையும், பொழுதுபோக்கையும் தடையின்றி ஒன்றிணைக்கிறது.

இந்த கொண்டாட்டம் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நின்று விடவில்லை. ஜாலி ஓ ஜிம்கானா நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வருபவர்கள்… துருவ் விக்ரம் – ரவி மோகன் – மிர்ச்சி சிவா – பிரேம்ஜி அமரன் – ஹரிஷ் கல்யாண் – மகத் ராகவேந்திரா – வைபவ் ரெட்டி – அஸ்வின் காகுமனு மற்றும் அனைவரின் விருப்பத்திற்குரிய டிஜிட்டல் திரை இரட்டையர்களான கோபி- சுதாகர் என பட்டியல் நீள்கிறது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு புதிய விருந்தினர்… ஒரு புதிய கதை … முற்றிலும் தவற விட கூடாத நிகழ்ச்சி ஜாலி ஓ ஜிம்கானா..!

சன் நெக்ஸ்ட் – SUN NXT – பற்றி

சன் நெக்ஸ்ட் என்பது நாடு தழுவிய பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளமாகும். இது தமிழ் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் …4000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் …44 க்கும் மேற்பட்ட நேரலை – தொலைக்காட்சி – அலைவரிசைகளை வழங்குகிறது. திரைப்படங்கள்.. தொலைக்காட்சி .. நேரலை மற்றும் முன்கூட்டிய அணுகலுக்கான சலுகைகள் என பல தரப்பட்ட உள்ளடக்கங்களுடன் சன் நெக்ஸ்ட் SUN NXT உயர்தரமான தென்னிந்திய பொழுதுபோக்கின் அடையாளமாக திகழ்கிறது.

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!

0

ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.

வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..,
புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..,
நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ZEE5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…
“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023-இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’-இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…,
பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் கவின் பேசியதாவது…,
பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…,
பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…,
விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…,
தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகை கௌசல்யா பேசியதாவது..,
இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.

நடிகை மீனா பேசியதாவது,
“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.

நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,
“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.

Trailer Link 🔗https://youtu.be/3j0NBortZ3k?si=M16Q53p10TWuu4dH

நடிகை சாயாதேவி பேசியதாவது,
“முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார்.

நடிகர் வையாபுரி பேசியதாவது,
“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5-ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி.

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது ,
“‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது” என்றார். “பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார். “இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது.
“ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.

தயாரிப்பாளர் குமார் பேசியதாவது…
நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்.

நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது..,
ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ராம்குமார் பேசியதாவது..,
பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது..,
பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.

கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.

இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர்.

கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

0

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா ரூரல் ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் ‘ரவுடி ஜனார்த்தனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷூம் உள்ளார். இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் மற்றும் படத்தின் ஆக்‌ஷனை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது.

உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் பெரிய திரையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க, விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற பார்வையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு வடிவமைப்பாளர்: டைனோ சங்கர்,
ஒளிப்பதிவு: ஆனந்த் சி. சந்திரன்,
பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,
தயாரிப்பாளர்கள்: தில் ராஜூ, ஷிரீஷ்,
மக்கள் தொடர்பு: தெலுங்கு- GSK மீடியா (சுரேஷ்- ஸ்ரீனிவாஸ்),
தமிழ்- சுரேஷ் சந்திரா,
கதை, இயக்கம்: ரவி கிரண் கோலா

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா ரூரல் ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் ‘ரவுடி ஜனார்த்தனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷூம் உள்ளார். இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் மற்றும் படத்தின் ஆக்‌ஷனை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது.

உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் பெரிய திரையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க, விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற பார்வையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு வடிவமைப்பாளர்: டைனோ சங்கர்,
ஒளிப்பதிவு: ஆனந்த் சி. சந்திரன்,
பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,
தயாரிப்பாளர்கள்: தில் ராஜூ, ஷிரீஷ்,
மக்கள் தொடர்பு: தெலுங்கு- GSK மீடியா (சுரேஷ்- ஸ்ரீனிவாஸ்),
தமிழ்- சுரேஷ் சந்திரா,
கதை, இயக்கம்: ரவி கிரண் கோலா