எக்ஸாம் விமர்சனம்

0

காவல் துறை டி.எஸ்.பி பெண் தனது பணி மாறுதலை தொடர்ந்து புதிய இடத்திற்கு பொறுப்பேற்க செல்லும் போது, மற்றொரு பெண்ணால் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்படுகிறார். அதன் பிறகு அந்த டி எஸ் பி பெயரில் கடத்திய பெண் பதவி ஏற்றுக்கொள்வதோடு, அந்த இடத்தில் நடக்க இருக்கும் அரசு தேர்வு மோசடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். உண்மையான டி எஸ் பி மூலமாக அந்த மோசடி நடக்க இருப்பதாக நினைத்து அவரை கடத்தி அடைத்து வைக்கும் பெண்ணிற்கு, அவருக்கும் மேலே ஒருவர் இருப்பதும், கண்ணுக்கு தெரியாத அந்த நபர் மூலம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பகடைக்காய்களாக பயனபடுத்தப்பட்டு, அவர்கள் மூலம் மோசடி நடக்க இருப்பதும் தெரிய வருகிறது.
அந்த கண்ணுக்கு தெரியாத நபர் யார் ?, அவர் மூலம் நடக்க இருக்கும் மோசடியையும், அதன் பின்னணியையும் , கண்டுபிடித்தாரா? கடத்திய பெண் அங்கிருந்து தப்பித்தாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

தற்போது வெளியாகும் இணையத் தொடர்கள் , கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் பாணியிலான கதைகளை மட்டுமே விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல முயற்சிப்பர் ஆனால் அதை உடைத்து, சமூகப் பிரச்சனைகளை பேசும் கதைகளை கூட விறுவிறுப்பான இணையத் தொடராக கொடுக்க முடியும், என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் சற்குணம், பல உண்மை சம்பவங்களை மிக தைரியமாக காட்சிப்படுத்தி இதனை உருவாக்கியுள்ளார்.

இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் இருவரும் தங்களது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள். துஷாரா விஜயனின் அழுத்தமான நடிப்பு, அரசு பணிக்காக கடுமையாக படித்தும் பலன் பெறாமல், பணம் மற்றும் அதிகாரத்திற்கு முன்பு தோற்றுப்போகும் பல மாணவர்களை பிரதிபலித்திருக்கிறது. அதிதி பாலன், பணம் இருந்தால் எதையும் குறுக்கு வழியில் சாதிக்க முடியும், என்ற எண்ணத்தில் வாழும் மேல்தட்டு மக்களின் மனநிலையை தன் நடிப்பில் சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.

அரசு தேர்வு மற்றும் காவல்துறையை சார்ந்த கதை என்பதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களாக பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களது நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.குறிப்பாக சப் இன்ஸ்பெக்டர் செழியன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். கதையின் மிக முக்கியமான கதாபாத்திரமாகவும், திரைக்கதையின் திருப்பமாகவும் நடித்துள்ளார் துரை சுதாகர், ஆரம்பத்தில்.

இந்த தொடரில் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் மிக நேர்த்தியாக இருக்கிறது. கதை முழுவதும் மலைப்பிரதேசத்தில் நடப்பதால் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயணித்திருக்கிறது.

முதல் மூன்று அத்தியாயசங்கள் நம் கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுவது போல், அடுத்தடுத்த அத்தியாயங்கள் இல்லாதது சிறு குறையாக இருந்தாலும், இதுவரை சொல்லப்படாத மற்றும் சொல்ல வேண்டிய மிக முக்கியமான பிரச்சனைனையை எந்தவித சமரசமும் இன்றி சொல்லியிருக்கும் இயக்குநர் சற்குணம், அதை ஒரு சுவாரஸ்யமான இணையத் தொடராக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றவும், சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறவும் அரசு பதவிகளும், பணியும் மிக முக்கியமானது. அதற்காக கடுமையாக உழைக்கும் அவர்களது உழைப்பு பதவி ஆசைக்காகவும், அதிகார போதைக்காகவும் பணம் படைத்தவர்களுக்காக, எப்படி திருடப்படுகிறது என்பதை அரசு தேர்வுகளில் நடக்கும் பெரும் மோசடிகள் மூலம் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் அதற்கு பாராட்டுகள்.

மொத்தத்தில், ‘எக்ஸாம்’ நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here