சாருகேசி விமர்சனம்

இயக்கம் – சுரேஷ் கிருஷ்ணா
நடிகர்கள் – ஒய்.ஜி.மகேந்திரா, சுஹாசினி, ராஜ் ஐயப்பன், சத்யராஜ்
இசை – தேவா
தயாரிப்பு – இ எஸ் என்டர்டெயின்மென்ட்

புகழ் பெற்ற கர்நாடக சங்கீத , பாடகர் ஒருவர் தன் மனைவி மகனுடன் வாழ்ந்து வருகிறார், இசையுலகில் பல சாதனைகளை நிகழ்த்தி பேர், புகழ், பணம் என்று உச்சத்தை தொட்டாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை வலி மிகுந்ததாக இருக்கிறது. அதற்கு காரணம் அவரது ஒரே மகன் , தந்தையின் அடையாளம் இல்லாமல் தனது தனித்துவமான அடையாளத்தோடு வாழ விரும்பும் அவர், தந்தையை வெறுப்பதோடு, தாய், தந்தைக்கு தெரியாமல் தன் காதலியை திருமணம் செய்து கொள்கிறார். தங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணமாக இருந்தாலும், அந்த பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்ளும்  அவர்கள் அதிர்ச்சியாகும் விதத்தில், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஒன்றை அந்த பெண்ணிடம் சொல்லி மிரட்ட செய்வதோடு, அவர்களை பழிவாங்கும் தனது நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே நம் வாழ்க்கைக்கு தேவையான தத்துவதுடன் சொல்வதே இந்த ‘சாருகேசி’.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரா, சாருகேசி என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். வெற்றியின் உச்சத்தை தொட்ட சங்கீத சாம்ராட் என்ற அடையாளத்தோடும், மகனால் அவமதிக்கப்படும் ஒரு சாதாரண தந்தை, என்ற இரண்டு விதமான பரிமாணங்களை தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் சாருகேசியின் மனைவியான பத்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஹாசினி, தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். அவரது நடிப்பில் பல இடங்களில் செயற்கைத்தனம் தெரிந்தாலும், அவரது திரை இருப்பு மற்றும் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சாருகேசியின் மகனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் மற்றும் மருமகளாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், இருவரும் வயதுக்கு ஏற்ற துள்ளலோடு நடிப்பில் மிளிர்கிறார்கள். இருவரும் சாருகேசியை எதிரி போல் பாவித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்கள் மீது கோபம் ஏற்பட வைக்கிறது. சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், தீனா ரித்விக், ப்ரீதிகா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

கானா பாடல்களுக்கு பெயர் போன தேவா, கர்நாடக சங்கீத இசையில் மிரட்டியிருக்கிறார். தன் தேனிசை மூலம் மெலோடி பாடல்களை திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக கொடுத்தாலும், அதில் தனது பழைய பாடல்களின் இசையை ஒலிக்க செய்து பழைய நினைவுகளை தட்டி எழுப்பியிருக்கிறார்.  ஒளிப்பதிவாளர் கதைக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

சாருகேசி என்ற இசைக்கலைஞரின் நேர்மையான வாழ்க்கையை தன் கதை மூலம் நேர்மையாக கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் வெங்கட். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா, மக்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அளிக்கும் ஒரு படைப்பாக சாருகேசியை படைத்திருக்கிறார்.

ஒரு மனிதன் தான் தொழில் உச்சத்தை பெற்றாலும் அவனது இல் வாழ்க்கை பொறுத்தே அவனது வாழ்க்கை தீர்மானம் செய்யப்படுகிறது என்ற கருத்தை அழகாக எடுத்துரைத்துள்ளார்.  

மொத்தத்தில், ‘சாருகேசி’ அனைத்து ரசிகர்களையும் கவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *