இயக்கம் – ராம் சக்ரி
நடிகர்கள் – சமுத்திரக்கனி , லக்ஷ்மி பிரியா , கௌதம் வாசுதேவ் மேனன்
இசை – சர்வீஸ் மியுசிக்லௌட் ஸ்டுடியோ
தயாரிப்பு – அருண் ரங்க்ராஜுலு
ஒரு கார் ஓட்டுனர் அளவான குடும்பம், வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக இருந்தாலும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதே இந்த ‘கார்மேனி செல்வம்’படத்தின் மீதிக்கதை.
நடுத்தர குடும்பத்தின் பிரதி பலிப்பாக இருக்கிறார் நடிகர் சமுத்திரக்கனி , எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எதார்த்தமாக கையாண்டு பாராட்டுப் பெறும் சமுத்திரக்கனி, செல்வம் என்ற கதாபாத்திரத்தில் எளிய மனிதரின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மன போராட்டம், இயலாமை என அனைத்து உணர்ச்சிகளையும் மிக நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். அவரது ஏக்கம் நம்முடன் கலந்து விடுகிறது.
அவருக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் அவரது மனைவியாக நடித்திருக்கும் லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி. நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் ஆசைகள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் ஆகியவற்றை தனது கண்கள் மூலமாக வெளிக்காட்டியிருக்கும் அவர், ஆசையை விட அமைதியான வாழ்க்கையே போதும், என்ற தன் மனநிலைக்கு கணவரை மாற்ற முயற்சிக்கும் இடங்களில் எதார்த்தமாக நடித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். சமுத்திரக்கனியின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் துணையாக பயணித்திருக்கிறார்கள்.
படத்திற்கு மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜி (Musicloud Studio & Technology) இசையமைத்துள்ளது, அவர்து இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து பலம் சேர்த்திருக்கிறது. நெரிசல் மிக்க நகரம் மற்றும் நகரத்தில் இருந்து விலகியிருந்தாலும் அமைதி நிறைந்த நாயகனின் குடியிருப்பு மூலம் மனிதர்களின் வேகமான வாழ்க்கையையும், ரசிக்க மறந்த வாழ்க்கையும் மிக அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன்.
மொத்ததில் நிம்மதியாக வாழ நினைத்தால் நம்மிடம் இருப்பதை வைத்து வாழ வேண்டுமே தவிர, பிறரிடம் இருப்பதை நாமும் வாங்கி வாழ வேண்டும், என்ற ஆசையில் சிக்கி அவஸ்த்தைப்படக் கூடாது, என்பதை சிந்திக்க வைக்கும்படி சொல்லியிருக்கும் படம், குடும்பத்திற்காக பொருள் தேடுகிறோம் என்ற பெயரில் அந்த குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதை தவறவிடக்கூடாது, என்று வெளிநாட்டில் வேலை செய்கிறவர்களுக்கும் அறிவுரை சொல்கிறது.
மொத்தத்தில், ‘கார்மேனி செல்வம்’ நடுத்தர மக்களுக்கான படம்.




