இயக்குநர் – ஶ்ரீ செந்தில்
நடிகர்கள் – பரத், அஜய் கார்த்தி, சங்கீதா, பவானி ஶ்ரீ
இசை – சாம் சி எஸ்
தயாரிப்பு – ஸ்கை பிக்சர்ஸ் – ஃபைவ் ஸ்டார் கே செந்தில்
ஒரு தம்பதி அவர்களது 4 வயது பெண் குழந்தையுடன் புறநகர் சென்னையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர், இந்நிலையில் ஒரு நாள் அவர்களது குழந்தை காணாமல் போகிறது. அந்த குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் இருவர் விசாரணையில், அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் மீது சந்தேகம் எழுகிறது. அவரை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கிறது. இதற்கிடையே, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், அவரை வழக்கறிஞர் காப்பற்றி அழைத்துச் சென்று விடுகிறார். பின் அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால், குடியிருப்பு வாசிகளிடத்தில் அச்சம் அதிகரிக்கிறது. இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ?என்பதை சஸ்பென்ஸ்கலந்துசொல்வதே இந்த ‘காளிதாஸ் 2’.
இந்த படத்தில் காளிதாஸ் கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பரத் நடித்துள்ளார், தனது நடிப்பு அனுபவம் மூலம் உண்மையான காவல்துறை அதிகாரியை பிரதிபலித்திருக்கிறார். போலீஸுக்கான துணிச்சலுடன் பயணித்தாலும், நிதானமான அனுகுமுறை மற்றும் கூர்மையான விசாரணை மூலம், நெருக்கடியான சூழ்நிலைகளை அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் எப்படி சாமர்த்தியமாக கையாள்வார்கள், என்பதை தன் நடிப்பின் மூலம் பரத் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார். rence Movie Reviews & Previews
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி, அதிகம் பேசவில்லை என்றாலும், படம் முழுவதுமே அவரைப் பற்றி தான் பேசுகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே அமைதியான முகத்தோடும், பல்வேறு விசயங்களை பேசும் கண்களோடும் அறிமுகமாகி கவனம் ஈர்க்கும் அஜய் கார்த்தி, திருப்பம் மிக்க கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ‘பூவே உனக்காக’ சங்கீதா, எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார். அவரது கதாபாத்திரம் நம்மை ஆட்கொள்ளும்.
அதே போல் காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, களப்பணி பற்றி சரியாக தெரியாமல், பதவி அதிகாரத்தின் மூலம் அதிரடியாக செயல்பட்டு, பிறகு அவஸ்தைப்படும் ஆர்வகோளாறு அதிகாரிகளை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். அபர்ணதிக்கு சிறிய வேடம் என்றாலும் திரைக்கதையின் திருப்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அனந்த் நாக், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோரின் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
படத்திற்கு பலம் என்றால் அதன் பின்னணி இசை என்றே சொல்லலாம், சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக பேச வைக்கவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. அதிகப்படியான சத்தம் இல்லாமல் படம் முழுவதுதிலும் ஒருவித அமைதியான சூழல் இருப்பதற்கு ஏற்ப பின்னணி இசையிலும் ஒருவித அமைதியை பின்பற்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, பார்வையாளர்களின் கவனம் வேறு எந்த பக்கமும் திரும்ப கூடாது என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, படம் முழுவதிலும் குறிப்பிட்ட ஒரு வண்ணத்தை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்.
ஒரு குழந்தையின் மர்மமான இறப்புதான் கதையின் மையக்கரு என்றாலும், அதற்கான திரைக்கதையில் பல்வேறு குற்ற சம்பவங்களை இணைத்து, அதன் மூலம் பல்வேறு திருப்பங்களோடு படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், குற்றவாளி யார் ? என்பதில் கடைபிடித்திருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார். காளிதாஸ் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் டெக்னிகலாக வலுவான படமாக அமைந்துள்ளது,
மொத்தத்தில், ‘காளிதாஸ் 2’ கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம்.




