மர்மர் திரை விமர்சனம்

யூட்யூப் சேனலை சேர்ந்த நான்கு இளைஞர்கள் தமிழகத்தில் உள்ள ஜவ்வாது மலையில் அமையப்பெற்றிருக்கும் காத்தூர் என்னும் கிராமத்தில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களை கேள்வி படுகிறார்கள். அதாவது காத்தூர் என்ற அந்த கிராமத்தில் மங்கை எனும் பெண்ணுடைய ஆவி மக்களை பழி வாங்குகிறது என்ற விஷயத்தையும், பௌர்ணமி தினத்தன்று கன்னிமார்கள் இங்குள்ள குளத்தில் நீராடுகிறார்கள் என்ற விஷயத்தையும் கேள்விப்பட்டு அதனை பற்றிய உண்மையை காணொளியாக படமாக்கி, தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றுவதற்காக கிராமத்திற்கு செல்கிறார்கள். அங்கே அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் படைப்பு தான் ‘மர்மர்’ படத்தின் கதை.

’ஃபவுண்ட் ஃபூட்டேஜ்’ என்று சொல்லக்கூடிய நேரடியாக கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கொண்டு படமாக்கப்பட்ட முதல் தமிழ் திகில் படம் என்ற தனிச்சிறப்போடு உருவாகியிருக்கும் இப்படத்தின் கதைக்களம் மற்றும் திகில் காட்சிகளை கையாண்ட விதம் அனைத்துமே உண்மைக்கு நெருக்கமாக இருப்பதால், படம் முழுவதுமே பெரும் பயத்தை கொடுக்கிறது.

ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ஒரு காட்டுக்குள் சிக்கிக்கொண்டு பயத்தில் உரைந்து போகும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கும் அளவுக்கு தங்களது பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், கதையின் ஒவ்வொரு காட்சியையும் கேமரா மூலம் நம்மால் நேரில் பார்க்கிறோம் என உணர வைத்துள்ளார். மேலும், இசை இல்லாததால், கேவ்ய்ன் பிரெடெரிக் தனது ஒலி வடிவமைப்பின் மூலம், பயத்தை அதிகரிக்கச் செய்து, படத்தின் பரபரப்பை உயிர்ப்பித்து இருக்கிறார். இயக்குநர் ஹேம்நாத் நாராயணனின் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *