இயக்குனர் – விஜய குமரன்
நடிகர்கள் – வடிவுக்கரசி , திலீபன், சிங்கம்புலி, கஜ ராஜா, அனந்து நாக்
இசை – செல்லையா பாண்டியன்
தயாரிப்பு – விஜய் மேரி யுனிவர்சல் மீடியா – டி விஜய மேரி
தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. அந்த தகவலை வைத்து விசாரணையை தீவிரப்படுத்துகிறார். இதற்கிடையே லண்டனில் இருந்து தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தமிழகத்தில் இருக்கும் தன் பூர்வீக வீட்டில் ஒருவர் குடியேறுகிறார். அங்கு ஒரு மூதாட்டி மயக்கம் அடைந்து விழுகிறார். அவரை ஆதரவு அளிக்கிறார்.அந்த ஊர் தலைவர் அவரைப் போலவே இருக்கும் ஒரு மூதாட்டி பற்றிய பயங்கரமான கதை ஒன்றை சொல்லி எச்சரிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை விவரிப்பதே இந்த படத்தின் கதை.
இந்தப்படத்தில் ஒரு மூதாட்டியாக வடிவுக்கரசி, தள்ளாடும் வயதோடு, ஆரம்பத்தில் இறக்கப்பட வைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவர் முகத்தில் தெரியும் வெறித்தனம், பார்வையாளர்களை பீதியடைய செய்கிறது. இந்தப் படத்தில் வசனம் ஏதும் பேசாமல் தனது நடிப்பு மற்றும் பார்வை மூலமாகவே மிரட்டியிருக்கிறார். பல காட்சிகளில் அவரது நடிப்பு அனுபவம் நம்மை ஆச்சர்ய படுத்தியுள்ளது, கண்டிப்பாக நம்மை கதி கலங்க செய்து விடுவார்.
மேலும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன் , அதன் பின் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சிங்கம்புலி, ஊர் தலைவராக நடித்திருக்கும் கஜராஜ், வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். இவர்கள் திரைக்கதைக்கு பக்க பலமாக இருந்தனர்.
இசையமைப்பாளர் டாக்டர்.செல்லையா பாண்டியனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும் பெரிதும் உதவுகிறது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஏ.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அவரது ஒளிப்பதிவு பழைய வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்களை பதட்டத்துடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.
நம் சிறு வயதில் குழந்தைகளுக்கு சொல்லப்படும் மாய மந்திர கதைகளை மையமாக வைத்து, ஒரு சுவாரஸ்யமான திகில் கதையை சொல்லியிருப்பதோடு, அதன் பின்னணியில் ஒரு மூதாட்டியை வைத்து பார்வையாளர்களை அச்சுறுத்தியிருக்கிறார் இயக்குனர். சிறுவர்களுக்கு கதை சொல்லி தூங்க வைக்கும் பாட்டிகளை பார்த்திருக்கிறோம், ஆனால் தன் தேவைக்காக அந்த சிறுவர்களை வேட்டையாட துடிக்கும் ஒரு பாட்டியின் மூலம் பார்வையாளர்களை பயத்தில் ஆழ்த்தும் ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் விஜய குமாரன்.
மொத்தத்தில், ‘க்ராணி’ பார்வையால் நம்மை உலுக்குகிறார்.




