Home Blog Page 4

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

0

நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், தற்போது ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இயல்பான கிராமத்து மண்வாசனை என வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ’அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகிறது. ’அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், தெளிவின்மை என பல அர்த்தங்கள் உண்டு. ‘அல்மோஸ்ட் தேர்…’, ’அல்மோஸ்ட் டன்…’ போன்ற சொற்களைப் போலவே, இப்படத்தின் கதையிலும் அந்த வார்த்தைக்கு முக்கிய இடம் உண்டு.

இன்று (ஜூலை 6, 2026) காலை பூஜையுடன் இப்படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பிரம்மா, ஹாட்ஸ்டார் சபரி, திங்க் மியூசிக் சந்தோஷ், ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் கார்த்திக், ஆர்.ஜே. பாலாஜி, தயாரிப்பாளர் லலித் குமார், அபிஷேக் கீதம், ரங்கராஜ் பாண்டே, விது, இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “புதிய கதைகளை சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தயாரிப்பாளருக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரம். அந்த வகையில் ஹெச். வினோத் மற்றும் ராஜு ஜெயமோகனுடன் ‘அல்மோஸ்ட் நல்லவன்’ படத்தில் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நம் மண்ணின் கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் இயல்பான நகைச்சுவை இந்தப் படத்தில் உள்ளது. ராஜு இந்தக் கதையை சொன்னபோதே, திரையரங்கில் ரசிகர்கள் நிச்சயம் சிரித்து மகிழ்வார்கள் என்பது உறுதியானது. இயல்பான நகைச்சுவை, புதிய திரைக்கதை மற்றும் முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்தப் படத்தை உருவாக்குகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் ஹெச். வினோத் கூறியதாவது, “நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. குறிப்பாக, இந்த வருடம் வெளியான பல நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். நான் நினைத்ததை விடவும் மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமா எனக்கு கொடுத்துள்ளது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் என்னை தொடர்ந்து நல்ல கதைகளை உருவாக்க ஊக்குவிக்கிறது. அதனால்தான் புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் தயாரிப்பாளராகவும் பயணிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து தரமான திரைப்படங்களை வழங்கி வரும் பேஷன் ஸ்டுடியோஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக உள்ளது. ‘அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

நடிகரும் இயக்குநருமான ராஜு ஜெயமோகன் பகிர்ந்து கொண்டதாவது. “‘அல்மோஸ்ட் நல்லவன்’ என்ற தலைப்பே இந்தப் படத்தின் மையக் கருத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல குணங்களும், குறைகளும் இருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் பலர் இரண்டு வாழ்க்கைகளை வாழ்கிறார்கள். ஒன்று அவர்களின் உண்மையான வாழ்க்கை. மற்றொன்று, சமூக வலைதளங்களில் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் முகம். சில நேரங்களில் அந்த டிஜிட்டல் அடையாளமே தங்களின் உண்மையான முகம் என்று கூட நம்பத் தொடங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தக் கதை. இந்தப் படத்தில் சத்யராஜ் சார், துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் புகழ் தாமரை செல்வி, நாடகக் கலைஞர் யாழினி மற்றும் பிரிதம் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய வித்தியாசமான டார்க் காமெடி மற்றும் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இது. முதலில் இந்தக் கதையை சுதன் சார் மற்றும் வினோத் சாரிடம் கூறினேன். சினிமா பற்றிய அவர்களின் அனுபவமும் அறிவும் இந்தக் கதையை முழுமையான திரைக்கதையாக உருவாக்க என்னை ஊக்குவித்தது. இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தை நம்பி ஆதரவு அளித்த ஹெச். வினோத் சார், ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ், சுதன் சுந்தரம் சார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தற்போது தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி வரும் இசையமைப்பாளர் ஃபாக்ஸன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம்” என்றார்.

இப்படத்திற்கு டி.எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் அவர்களிடம் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ’ஜெயிலர்’, ’ஜெயிலர் 2’, ’டாக்டர்’ போன்ற படங்களில் அவர் பணியாற்றியுள்ளார். கலை இயக்குநராக பாலா ஜெயபிரதா இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சண்டைக் காட்சிகளை ஓம் அமைத்துள்ளார். ’96’, ’மெய்யழகன்’ போன்ற படங்களில் பணியாற்றிய கோவிந்த் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஆடை வடிவமைப்பை ஜெஃபர்சன் மற்றும் ராஜி தேனப்பன் கவனிக்கின்றனர். நாக் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தின் வி எஃப்எக்ஸ் பணிகளை மேற்கொள்கிறது.

வலுவான கதைக்களம், திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் புதுமையான திரைக்கதையுடன் உருவாகி வரும் ’அல்மோஸ்ட் நல்லவன்‘ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

0

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி – ஆரவ் ,ரம்யா பாண்டியன் -கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் ‘அருள்வான்’ திரைப்படத்தினை பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனிக்க.. லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஜி சரவணன் தயாரித்திருக்கிறார். இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வழங்குகிறார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இணை தயாரிப்பாளர் திருமதி சுபா சரவணன், இயக்குநர் கணேஷ் விநாயகன், இணை தயாரிப்பாளர்கள் சரண், சரத் , நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட் , நடிகைகள் ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குநர் இளையராஜா , ஒளிப்பதிவாளர் எம். சுகுமார், கலை இயக்குனர் லால்குடி’ இளையராஜா ,சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், ” இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். மனிதர்களும், மிருகங்களும் நடமாட கடினமான மலைப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. மலைப்பகுதியில் முட்புதர்களாக இருக்கும் இடத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் பின்னோக்கி ஓடிக் கொண்டிருப்பார். நாங்கள் அவரை பின்தொடர்ந்து செல்வதே சவாலானதாக இருக்கும். இப்படி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதே சவாலானதாக இருக்கும்.

ஒரு நாள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு செல்வதற்கு எந்த வசதியும் இல்லை. நடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான ‘டென்ட்’டை அவர்களே தூக்கிக் கொண்டு சென்று, ,அங்கு டென்ட் அடித்து தங்க வேண்டும். படப்பிடிப்பு தளத்திற்கு உள்ளூர் வழிகாட்டி ஒருவர் வேகமாக மலைப்பகுதியில் இறங்கி நடந்து சென்றார். அவரை பின் தொடர்வது கடினமானதாக இருந்தது. ஓரிடத்தில் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்லும் போது ‘திக் திக் ‘என்று இருந்தது. இவ்வளவு இருந்தும் இறுதி கட்ட படப்பிடிப்பில் இரண்டு நாள் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தப் படத்தில் சின்ன வேடத்தில் நடித்த எனக்கே அவ்வளவு சவால்கள் இருந்தது என்றால் ..இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும். அனைவருக்கும் இது கடினமான – மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் இப்படத்தின் காட்சிகளை இயக்குநர் எனக்கு காண்பித்த போது மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் சுகுமார் ஏற்கனவே காட்டில் பிறந்த மனிதரைப் போலவே படமெடுப்பார். ஆனால் இந்த படத்தில் காட்டை வேறொரு கோணத்தில் காண்பித்திருக்கிறார். படத்தில் எல்லா படப்பிடிப்பு தளங்களும் மேகத்திற்கு மேலே தான் இருந்தது. அதாவது சொர்க்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது போல் இருந்தது.

இவற்றையெல்லாம் கடந்து இப்படத்தின் கதை மிகவும் முக்கியமானது. அடிப்படைக் கல்வியைப் பற்றி பேசும் ஒரு படம். இந்த படம் வெளியான பிறகு நிச்சயமாக பேசப்படும்.

நடிகர் அருள்நிதி ஒரு படத்திற்கு சாதாரணமாக நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். அவருடைய கதை தேர்வு பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றால்… இந்தப் படம் மிக நன்றாக இருக்கும். இப்படத்தில் உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசுகையில், ” பொதுவாக திரைப்பட விநியோகம் என்பது வர்த்தகத்தை சார்ந்தது. இதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். அது கருத்தியல் ரீதியாகவும்… காட்சி அமைப்பு ரீதியாகவும் அல்லது அதில் பங்களிப்பு செய்திருக்கும் கலைஞர்களுக்காக என ஏதோ ஒரு விசயம் மனதிற்கு நெருக்கமாக அமைந்திருக்கும். அதுபோன்ற படங்களையும் வெளியிட்டிருக்கிறோம்.

ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை பற்றி எனக்குள் நிறைய கேள்விகள் இருக்கிறது. இது தொடர்பாக பல விசயங்களை நான் பகிர்ந்து கொண்டதில்லை. அரசு பள்ளியில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்காதவர்களை பற்றி 2026 ஆம் ஆண்டில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் 2000 ஆம் ஆண்டில் கதை நடப்பது போல் விவரித்திருக்கிறார்கள்.‌ இந்த படத்தை பார்க்கும் போதே என்னவோ செய்தது.‌ இந்தக் கதையில் இடம்பெறும் ஒவ்வொரு சிறிய கதை மாந்தர்கள் கூட நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது.

இயக்குநர் கணேஷ் விநாயகனும் , ஒளிப்பதிவாளர் சுகுமாரும் ஏற்கனவே இணைந்து ‘தேன்’ எனும் ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்கள். நாங்கள் தான் அந்த படத்தை வெளியிட்டோம். இந்த இருவருக்கும் காடு- மலை- மக்கள்- எனும் விசயத்தில் ஒற்றுமை உண்டு என நினைக்கிறேன். அதனால் மீண்டும் இருவரும் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

சினிமாவில் காடு -மலை- அருவி- என்றால் சுகுமார் தான் என ஒரு ‘பேட்டர்ன்’னை உருவாக்கி வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் காட்டின் மொத்த அழகியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் சுகுமார்.

ஆரவ்- ரம்யா பாண்டியன் தம்பதியினரின் நடிப்பும் முதிர்ச்சியாக இருக்கும். பேபி கிருத்திகாவின் நடிப்பும் நன்றாக இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து கல்வியைப் பற்றிய ஒரு கடினமான உண்மையை இப்படம் பேசி இருக்கிறது.

இந்த படத்தில் அருள் நிதியின் பங்களிப்பையும் அவசியம் குறிப்பிட வேண்டும். திரைக்கதையில் அவர் வருகை தந்த பிறகு கலை படைப்பாக இருந்த படத்தை கமர்ஷியல் படமாக மாற்றிவிட்டார். அருள்நிதி மிகப் பெரிய பர்ஃபெக்ஷனிஸ்ட். தயாரிப்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குபவர்.

இந்தப் படத்தை வெளியிடுவதை பெருமிதமாக நினைக்கிறேன். ஏனெனில் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை திரை மொழியில் பேசக்கூடிய- அரசியல் புரிதலுடன் கூடிய இயக்குநர்கள் மிகவும் குறைவு. இவரைப் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

அரசு பள்ளியில் பயிலும் முன்னாள் மாணவர்களின் நல சங்கத்திற்காக நடிகர் காளி வெங்கட் தன்னாலான பங்களிப்பை வழங்கி உள்ளது குறித்த செய்தியை பார்த்திருக்கிறேன். இது மிகவும் அழகான விசயம். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.

இப்போதுள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் தங்களுடன் படித்த மாணவர்களுடன் தொடர்ந்து இணைய வழியிலான தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இது போன்ற சமூக ஊடக தொடர்புகள் இல்லை.

நல்லதொரு விசயத்தை சொல்வதற்காக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால்.. தொடர்ந்து நல்ல விசயத்தை சொல்லும் படங்கள் வரும்” என்றார்.

நடிகை பேபி கிருத்திகா பேசுகையில், ” நான் வளர்ந்து வரும் இளம் நடிகை. திரைத்துறையில் எனக்கு எந்த பின்னணியும் இல்லை. இந்நிலையில் ‘அருள்வான்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் படத்தில் இவ்வளவு பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றுவேனா..! என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு நிஜமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஜீ. வி . பிரகாஷ் குமாரின் இசையில் யுக பாரதியின் வரியில் வெளியான ‘அல்லிப்பூவே ‘ எனும் பாடல் என்னுடைய ஃபேவரைட் .அந்தப் பாடலை இதுவரை நூறு முறைக்கும் மேல் கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடினமான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், ” இந்தப் படத்தின் கதையை கேட்பதற்கு முன் கிராமத்து கதைகளில் சிறிது நாட்கள் வரை நடிக்க வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். இருந்தாலும் இயக்குநருக்காக இந்த கதையை கேட்டேன். கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இந்த கதையில் நடிக்கலாம் என விரும்பினேன். ஏனெனில் இந்தப் படத்தின் கரு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

படிக்கும் போது ஒரு பள்ளியில் இந்த வசதி இல்லை… இது இல்லை… என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளோ வசதிகளோ இல்லை என்று.. நம் மண்ணிலேயே ஒரு இடம் இருக்கிறது… மக்கள் இருக்கிறார்கள்… அந்த நிலையிலும் மக்கள் வாழ்கிறார்கள்… என கேள்விப்பட்டவுடன் இதில் நிச்சயமாக என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். இதை என்னுடைய பொறுப்பாகவும் நினைத்தேன். இதுபோன்ற கதையை நம்பி முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி.

வரைபடத்திலேயே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை… தொலை தொடர்பு வசதிகளே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை…. தூங்குவதற்கோ சாப்பிடுவதற்கோ எந்த வசதிகளும் இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை… இந்த படத்தில் தான் நாங்கள் பார்த்தோம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒரு ஜீவன் இருக்கிறது. அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அங்கு செல்வதற்கு கடினமானதாக இருந்தாலும் அங்கு சென்ற பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டதும்.. அங்குள்ள மக்களுடன் உரையாடியதும்… மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுடன் பழகி வாழும் போது அதுவும் சுவாரசியமாகவே இருந்தது.

ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் இணைந்து ஏற்கனவே ‘ரா ரா’ என்ற ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அவர் கிராமங்களை அழகியலுடன் காட்சிப்படுத்துவதை விட, இந்தப் படத்தில் பிரம்மாண்டமாக காண்பித்து இருக்கிறார். அதை இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியும் அற்புதமான விஷுவல் ட்ரீட்டாக இருந்தது.

அருள்நிதி- நம்பிக்கை நாயகன். இந்த படத்தில் அருள்நிதி சார் இருக்கிறார் என்று சொன்னவுடன்… என்னுடைய நண்பர்களும், தோழிகளும் ‘அவர் இருக்கிறாரா..! அப்போ படம் நன்றாக இருக்கும். படம் வித்தியாசமாக இருக்கும் படத்தில் ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்’ என்று சொல்கிறார்கள். அவர் அப்படி ஒரு நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்திலும் நிச்சயமாக ஒரு நல்ல விசயம் இருக்கிறது. அதைத்தான் அவரும் நம்பி இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது என்று சொன்னவுடன் எங்களுடைய குழுவினரின் நம்பிக்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. இதற்காக அவருக்கு நன்றி.

என்னுடைய சக நடிகர் ஆரவ். அற்புதமான அர்ப்பணிப்புள்ள நடிகர். நடிகர் காளி வெங்கட் சொன்னது போல் மலையில் செங்குத்தாக ஏறி, அதன் பிறகு மேலே சென்று அங்குள்ள மரத்தில் ஏறி ஆரவ் நடித்தார். அதேபோல் அருவி ஒன்றின் கீழ் பகுதியில் நடுங்கும் குளிரில் அவர் உடல் முழுவதும் சந்தனத்தை பூசிக்கொண்டு நடித்தார். இவை எல்லாம் மிகவும் கடினமானது. நாங்கள் அனைவரும் அவர் உடனிருந்து பார்த்தோம். அவருடைய அர்ப்பணிப்பை கண்டு வியந்தேன். ” என்றார்.

இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. இதில் நிறைய வலிகளும் இருக்கிறது. துன்பங்களும் இருக்கிறது.

‘தகராறு’, ‘வீர சிவாஜி’ ‘ஹைப்பர்’ ( கன்னடம் ) ‘தேன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறேன். இதை தொடர்ந்து ‘அருள்வான்’ படத்தை இயக்கினேன். அருள்வான் படத்திற்கு முன்னதாக நான் இயக்கிய அனைத்து படத்திற்கும் நான் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து, கதை சொல்லி, வாய்ப்பு கேட்டு தான் இயக்கினேன். ஆனால் இந்த படத்திற்கு மட்டும் தயாரிப்பாளர் என்னை தொடர்பு கொண்டு இயக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் நான் இந்த தயாரிப்பாளரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரான S.G.சரவணன் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். இருந்தாலும் சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டவர்.

காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்க வைத்து சிறிய அளவில் தொடங்கப்பட்டது தான் இந்தத் திரைப்படம். ஆனால் தயாரிப்பாளர்தான் இப்படத்தினை பெரிதாக்கினார். இந்த படத்திற்கு பெரிய டெக்னீசியனை பயன்படுத்துங்கள். ஜீ வி பிரகாஷ் குமாரிடம் கேளுங்கள் என்றார். தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னுடைய நிறுவனத்திற்கு 90 பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிச்சயம் அவர் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிப்பார். அவர் சினிமாவைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிறுவனம் தொடர்ந்து வெற்றி பெற்று வளர வேண்டும். இப்படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி.

எடிட்டர் லாரன்ஸ் கிஷோருடன் ‘தேன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறேன். தேன் படத்தில் அவருக்கு சிறந்த படத் தொகுப்பாளர் என்ற மாநில விருது கிடைத்தது. இந்தப் படத்திலும் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும்.

இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவும் இல்லாமல். கமர்சியல் ஃபிலிம் ஆகவும் இல்லாமல் இருக்கும். இதனை துல்லியமாக உணர்ந்து முழுமையாக படத்தை தொகுத்திருக்கிறார் லாரன்ஸ் கிஷோர்.

இந்தப் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

இந்த கதையை என்னுடைய குழந்தை பருவத்திலிருந்து நண்பராக உள்ள ஒளிப்பதிவாளர் சுகுமாரிடம் சொன்னபோது, அவர்தான் படத்திற்கான படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்தார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினர். அனைவருக்கும் நன்றி.

இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் அதில் 50 சதவீத உழைப்பு இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் சாருக்கு சேரும்.

இந்தப் படத்திற்கு மூன்று ஹீரோக்கள். ஆரவ் -அருள்நிதி- பேபி கிருத்திகா. இதில் பேபி கிருத்திகாவின் பார்வையில் தான் இப்படத்தின் கதை இருக்கும்.‌

படப்பிடிப்பு தளம் சாலை வசதி இல்லாத மலை பகுதி என்பதால்.. 18 நாட்கள் அங்கேயே அனைத்து கலைஞர்களும் தங்கினார்கள். சரியான உணவு கிடையாது. நடைபாதை கூட இருக்காது. இரவு நேரத்தில் விலங்குகள் வரக்கூடிய அபாயம்.. இவ்வளவு இருந்தும் பேபி கிருத்திகா அர்ப்பணிப்புடன் நடித்தார். அதனால் இந்தப் படத்தில் பேபி கிருத்திகாவிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

ரம்யா பாண்டியன் – காளி வெங்கட் – வி டிவி கணேஷ் ஜான் விஜய் சரவணன் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் ஆரவ்விடம் கதை சொல்லும் முன் இந்தக் கதையில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஒரு மாணவி என இரண்டு முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறது. உங்களுக்கு சரியாக வருமா? என கேட்டுவிட்டு தான் கதையை சொல்லத் தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, ‘கதை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றார். இந்தக் கதையை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்வார்? இது தனிப்பட்ட விசயம் இல்ல. சமூகம் சார்ந்த விசயம். அதனால் நான் நடிக்கிறேன்’ என முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

அவருடைய லைஃப் ஸ்டைல் என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால் 18 நாட்கள் அந்த மலைப்பகுதியில் டென்ட் அடித்து எங்களுடன் தங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

இப்படத்தின் கதையின் முற்பகுதியில் இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைகளுக்காக போராடும் போராளியாக ஆரவ் இருப்பார். படத்தில் இரண்டாம் பகுதியில் இந்த சமூகத்திற்காக போராடும் மனிதராக அருள்நிதி நடித்திருக்கிறார். இந்தத் தருணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் ஆரவ்விற்கு நன்றி.

நடிகர் அருள் நிதியுடன் எனக்கு 14 ஆண்டு கால நட்பு இருக்கிறது. அவருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. எளிமையானவர். அன்பானவர். எல்லோரிடத்திலும் இயல்பாக பழகக்கூடியவர். இவர் வெற்றி பெற்றவர் இவர் தோல்வி அடைந்தவர் என்ற பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர். அவருக்கு கதை பிடித்திருந்தால் இணைந்து பணியாற்றுவார். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். கதையைக் கேட்டு விட்டு இதை நாம் அவசியம் சொல்ல வேண்டிய படம். நான் நடிக்கிறேன் என்றார். அவருக்கும் நன்றி.

நான் இதற்கு முன் இயக்கிய ‘தேன்’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தான் வெளியிட்டது. இந்தப் படத்தையும் நிறைவு செய்த பிறகு அவருக்கு திரையிட்டோம். அவருக்கும் படம் பிடித்திருந்தது. இந்தப் படத்தையும் நான் வெளியிடுகிறேன் என்று சொன்னார். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

இதன் பின்னர் நடிகர் அருள்நிதி பகிர்ந்து கொண்டதாவது….

”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றார். பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் ஐந்து நாள் என்பது பத்து நாளாகவும்… பிறகு 15 நாளாகவும்.. பிறகு 20 நாளாகவும் உயர்ந்தது.

இப்படத்தின் கதையை கேட்ட பிறகு நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை -கதாபாத்திரத்தை- என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா? என தெரியாது.

இந்த படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து விவரித்திருக்கும்- பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் ஆரவ் பகிர்ந்து கொண்டதாவது…

”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன பிறகு, இதுபோன்ற கதாபாத்திரம் திரையுலக பயணத்தில் எனக்கு மீண்டும் அமையுமா? என தெரியாது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் காளி வெங்கட் உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அந்த காட்சிகளில் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன்” என்றார்.

பிரதீப் ரங்கநாதன் -மமீதா பைஜு- அஸ்வத் மாரிமுத்து- தி ஆல்ஃபா யூனிட்- சாய் அபயங்கர்- கூட்டணியில் தயாராகும் #PRS01

0

நடிகராக அறிமுகமாகி, ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை வழங்கி, தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக அடையாளத்தை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் தென்னிந்திய நட்சத்திர நடிகை மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் #PRS01 படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய ஆறு  உதவியாளர்கள் முதல் முறையாக ஒன்றாக இணைந்து –  தி ஆல்ஃபா
யூனிட் என்ற பெயரில் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். தி ஆல்ஃபா யூனிட்  இயக்கத்தில் உருவாகும் #PRS01 திரைப்படத்தில் மமீதா பைஜு, அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ராகவ் மேற்கொள்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வரும் இந்த திரைப்படத்தை பி ஆர் ஷோ  நிறுவனம் சார்பில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி, தயாரிக்கிறார்.

தமிழ்- தெலுங்கு -மலையாளம் -ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் #பிஆர்எஸ்01 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் அறிமுக காணொளி- வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளிக்கான பின்னணி இசை-  முன்னணி நட்சத்திரங்களின் திரைத் தோற்றம் – கான்செப்ட் – ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார் என்பதாலும், வுமன் சென்ட்ரிக் சப்ஜெக்ட் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

‘டிராகன்’ படத்திற்கு பிறகு மீண்டும் பிரதீப் ரங்கநாதன் -‌அஸ்வத் மாரிமுத்து கூட்டணி இணைந்திருப்பதாலும்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் தருணத்தில் அவர் இந்த படத்தில் இணைந்திருப்பது… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

டார்க் – விமர்சனம்

0

இயக்கம் – கல்யாண் கே.ஜெகன்
நடிகர்கள் – பாக்யராஜ், அஜய் கார்த்திக் ,நட்டி, அஞ்சனா நேத்ரன்
இசை – மனு ரமேஷ்
தயாரிப்பு – ஏ பி வி மாறன், கணேஷ் பாபு .

வயதான நபர் ஒருவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மூன்று நபர்கள் குடியிருக்கின்றனர். திடீரென ஒரு நாள் அந்த மூவரில் ஒருவன் மற்ற இருவரையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறான், இந்த சம்பவம் அங்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் யாரும் அந்த வீட்டிற்கு குடி வர விரும்பவில்லை, இந்த சமயம் ஒரு இளைஞன் வாடகை கம்மியாக இருப்பதால் சுற்றி இருப்பவர்கள் சொல்வதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அந்த வீட்டிற்கு குடி வருகிறான், இந்நிலையில் சில நாட்களில் அந்த  இளைஞன் தன்னை தானே தாக்கிக் கொண்டு இறந்து விடுகிறான் , சில நாட்களில் அந்த வயதானவரும் இறந்து விடுகிறார், இதனை விசாரிக்க ஒரு காவல்துறை அதிகாரியை அரசு நிர்வகிக்கிறது , அவர் அதை விசாரணை செய்யும்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது, அது என்ன ? அதற்கும் இறந்தவர்களின் மரணத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதை திகில் கலந்து விவரிப்பதே இந்த டார்க் படத்தின் கதை.

நாயகன் அஜய் கார்திக் , திகில் படங்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறார் , ஒரு இளைஞனுக்கு இருக்கும் தைரியம் உண்மையில் பேய் வீடு என்பது தெரிந்த பின்னர் அவனது நடவடிக்கை என அனைத்தும் சிறப்பாக உள்ளது, கதாப்பாத்திரதுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்,  

அதே போல மிடுக்கான காவல்துறை அதிகாரியாக  நட்டி நடித்துள்ளார், சாதாரண தற்கொலை வழக்கு விசாரிக்க விசாரிக்க பலம் திருப்பம் ஏற்படுகிறது, அதை தனது நடிப்பால் நம்மிடம் சிறப்பான காட்டியுள்ளார், சமீபத்தில் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ், தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளார். மற்ற கதாபாத்திரங்களாக அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்,

இந்த படத்திற்கு மனு ரமேஷ் இசையமைத்துள்ளார், அவரது இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது, பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். அதே போல  ஒளிப்பதிவாளர் ரவி சக்தி ஒரு திகில் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை செய்துள்ளார், இரவு நேரங்களில் கேமரா சிறப்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளது,

இயக்குனர் கல்யாண் கே.ஜெகன், ஒரு வீட்டை வைத்து சஸ்பென்ஸ் கலந்த திகில் படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார், என்னதான் படம் ஒரு வீட்டுக்குள் நடந்தாலும் நம்மை சலிப்படைய செய்யாமல் திரைக்கதையில் புது புது விஷயங்களை கொடுத்து நம்மளை கதையோடு ஒன்ற வைத்துள்ளார் இயக்குனர், நிச்சயம் பாராட்டுக்கள். இதில் ஒரு புதிய முயற்சியாக அதிக சத்தம் இல்லாமல் அமைதியை வைத்து நம்மை அச்சப்பட வைத்துள்ளனர் படக்குழு.

மொத்தத்தில், ‘டார்க்’ நம்மை கண்டிப்பாக இருக்கையின் நுனியில் அமர வைக்கும்.

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார்.

உரையாடலின்போது “படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். நீண்ட நாள் நண்பர்களான விஷ்ணு விஷாலும் சூரியும் பகிர்ந்த அந்த அன்பான தருணம் அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் நெகிழச் செய்தது.

விஷ்ணு விஷால் – சூரி இருவரின் நட்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

“கட்டா குஸ்தி 2” திரைப்படத்தில் முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடியான விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரம் ஜாராவும் முக்கியமான பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், இந்த இரண்டாம் பாகத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

0

ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் நடித்துள்ள இயக்குநர் பாண்டிராஜின் பரிமளா & கோ திரைப்படம் ஜூலை 10 முதல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ZEE5-ல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகிறது.

இந்தியா, ஜூலை 2026: இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பரிமளா & கோ திரைப்படத்தின் பிரத்யேக வெளியீட்டின் மூலம் பார்வையாளர்களுக்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் குடும்ப பொழுதுபோக்கு அனுபவத்தை ஜூலை 10 முதல் வழங்கத் தயாராக உள்ளது. பிரபல இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பசங்கா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜெயராம், ஊர்வசி ஆகியோருடன் மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் சுவாரஸ்யமான கொலை மர்மம் ஆகியவற்றை ஒன்றாகக் கொண்ட பரிமளா & கோ, எதிர்பாராத விதமாக ஒரு விசித்திரமான விசாரணையின் மையத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண குடும்பத்தின் கதையைச் சொல்கிறது. சந்தேகங்கள் அதிகரித்து, ரகசியங்கள் வெளிவரத் தொடங்கும் நிலையில், குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தொடர்ச்சியான கலகலப்பான தவறான புரிதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள். பாண்டிராஜின் தனித்துவமான குடும்ப பாசத்தையும், சூழ்நிலை நகைச்சுவையையும், சஸ்பென்ஸையும் இணைக்கும் இப்படம், அனைத்து வயதினருக்கும் மகிழ்ச்சியான திரையரங்கு அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

பிரிமியர் குறித்து பேசிய ZEE5-ன் தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் மற்றும் தமிழ், மலையாளம் வணிகத் தலைவர் லாயிட் சேவியர் கூறியதாவது:
“ZEE5-ல், மொழிகள் மற்றும் பிராந்தியங்களைத் தாண்டி குடும்பங்களின் மனதைத் தொடும் கதைகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நகைச்சுவை, உணர்வு மற்றும் மர்மம் ஆகியவற்றை புத்துணர்ச்சியூட்டும் வகையில் இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு பரிமளா & கோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஜெயராம் மற்றும் ஊர்வசி தலைமையிலான சிறப்பான நட்சத்திர பட்டாளமும், பாண்டிராஜின் தனித்துவமான கதை சொல்லலும் இணைந்துள்ள இந்தப் படத்தை ஐந்து மொழிகளில் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.”

சிரிப்பு, மர்மம் மற்றும் குடும்ப கொண்டாட்டம் நிறைந்த ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்திற்கு தயாராகுங்கள். பரிமளா & கோ ஜூலை 10 முதல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ZEE5-ல் பிரத்யேகமாக வெளியாகிறது.

திரைப்பட விவரங்கள்

தலைப்பு: பரிமளா & கோ.
ஸ்ட்ரீமிங் தேதி: ஜூலை 10, 2026
மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு & இந்தி
நடிகர்கள்: ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம்: பாண்டிராஜ்
தயாரிப்பு: சுபாஸ்கரன் (லைகா புரொடக்ஷன்ஸ்) & பாண்டிராஜ் (பசங்கா புரொடக்ஷன்ஸ்)
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ISC
இசை: Foxn
எடிட்டர்: பிரதீப் இ. ராகவ்
கலை இயக்குநர்: டி. ராமலிங்கம்

இந்தியாவில் கார்டன்ட் ஹெல்த் நிறுவனத்தின் ஷீல்ட்™ பலவகை புற்றுநோய் கண்டறியும் சோதனையை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் இணைந்துள்ளது.

0

இந்தியாவில் கார்டன்ட் ஹெல்த் நிறுவனத்தின் ஷீல்ட்™ பலவகை புற்றுநோய் கண்டறியும் சோதனையை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் இணைந்துள்ளது.

நம் நாட்டில் இந்த இரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் கண்டறியும் வசதியை அதிகப்படுத்த ஜைடஸ் லைஃப்சயின்சஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது –

சென்னை, ஜூலை 3, 2026: புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது, நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும். இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி மற்றும் பிரத்யேக விரிவான புற்றுநோய் சிகிச்சை அமைப்பான அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs), ‘சைடஸ் லைஃப்சயின்சஸ்’ (Zydus Lifesciences) நிறுவனத்துடன் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், துல்லியமான புற்றுநோய் சிகிச்சைக்கான நிறுவனமான ‘கார்டன்ட் ஹெல்த்’ (Nasdaq: GH) உருவாக்கியுள்ள, ஆய்வக அடிப்படையிலான ‘ஷீல்டு™ மல்டி-கேன்சர் டிடெக்ஷன்’ பரிசோதனை முறை இந்தியாவில் வழங்கப்படவுள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த அதிநவீனப் பரிசோதனைக்கான வாய்ப்பை வழங்கும் முதல் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமாக ஏசிசிஸ் உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் புற்றுநோயின் பாதிப்பு 2040-ஆம் ஆண்டிற்குள் 2.08 மில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது — இது 2020-ஆம் ஆண்டை விட 57.5% அதிகமாகும். எனவே, தகுந்த நேரத்தில் மருத்துவ ஆதரவு, ஆரம்பக்கட்ட தலையீடு, நம்பகமான தகவல்கள் ஆகியவை தற்போதைய மிக முக்கியத் தேவையாக மாறியுள்ளன. 2022-ஆம் ஆண்டில் மட்டும் 1.41 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய் மரணங்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்ந்து முதன்மைக் காரணமாக இருக்கும் வேளையில், ஆண்களிடையே வாய்வழிப் புற்றுநோய் மிகவும் பரவலாகக் காணப்படும் புற்றுநோயாக உள்ளது. புற்றுநோயின் பாதிப்புகள் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வந்தபோதிலும், நாடு முழுவதும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்பவர்களின் விகிதம் இன்னும் குறைவாகவும், சீரற்றதாகவுமே உள்ளது.

இந்த மைல்கல்லின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகத் துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி அவர்கள் இவ்வாறு கூறினார், “அப்போலோவில், மருத்துவப் பராமரிப்பின் எதிர்காலம் என்பது தடுப்பு மற்றும் ஆரம்பக்கட்ட கண்டறிதலில் தான் உள்ளது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நமது காலத்தின் மிக முக்கியமான சுகாதார சவால்களில் ஒன்றாக .

கபூர் எஸ், பாண்டே எம், கிருஷ்ணமாச்சாரி எஸ், மற்றும் பலர். 2022-க்கான புற்றுநோய் பாதிப்பு மதிப்பீடுகள் மற்றும் 2025-க்கான கணிப்பு: தேசிய புற்றுநோய் பதிவேடு திட்டம், இந்தியா. இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழ். 2023;156(4&5):598-607.
தேசியப் புற்றுநோய் பதிவேடு திட்டம் (NCRP), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR). 2022-க்கான புற்றுநோய் பாதிப்பு மதிப்பீடுகள் மற்றும் 2025-க்கான கணிப்பு.
ஜோஷி ஆர், மாத்தூர் கே, ஜோஷி எம், மற்றும் பலர். இந்தியாவில் புற்றுநோய் பரவலை வெளிப்படுத்துதல்: குளோபோகான் (GLOBOCAN) 2022 மற்றும் கடந்தகால வடிவங்களின் ஒரு பார்வை. தி லான்செட் ரீஜினல் ஹெல்த் – தென்கிழக்கு ஆசியா (The Lancet Regional Health – Southeast Asia). 2025;26:100651.
2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆண்களிடையே உதடு மற்றும் வாய்க்குழிப் புற்றுநோய் மிகவும் பொதுவானதாக உள்ளது, இது நாட்டின் ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்பில் 15.6% ஆகும் (பாஸ்கரன் கே, மற்றும் பலர்., ஜேசிஓ குளோபல் ஆன்காலஜி [JCO Global Oncology], 2024).
வெங்கடேரி ஜேபி, நாதானி பி, கோயல் எஸ், மற்றும் பலர். “இந்தியாவில் புற்றுநோய் கண்டறியும் சோதனைகளில் குறைந்த பங்கேற்பு: மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் திட்டங்களின் ஒரு ஆய்வு.” பிஎம்சி கேன்சர் (BMC Cancer). 2025;25:1724.

புற்றுநோய் தொடர்கிறது; மேலும் பரிசோதனைகள் மூலம் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதுதான், நோயைக் குணப்படுத்துவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே முக்கிய படியாகும். இந்தியாவில் ‘ஷீல்டு மல்டி-கேன்சர் டிடெக்ஷன்’ பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, மருத்துவப் புதுமைகளை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு அதிநவீன பரிசோதனை தீர்வுகளைக் கிடைக்கச் செய்கிறது. நாடு முழுவதும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை விகிதங்கள் குறைவாக உள்ள நிலையில், புற்றுநோயைத் தடுத்தல், பரிசோதனை செய்தல் மற்றும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது குறித்த உரையாடல்களை மக்களிடையே முதன்மைப்படுத்தவும் இந்த சோதனை உதவும்.”

ஷீல்டு எம்சிடி என்பது, புற்றுநோய் வருவதற்கான சாதாரண சராசரி அபாயம் கொண்ட 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு, மெத்திலேஷன் முறையில் இரத்தப் பரிசோதனை மூலம் பல வகையான புற்றுநோய்களைக் கண்டறியும் ஒரு சோதனை ஆகும். இதில் சிறுநீர்ப்பை, குடல், மார்பகம், புரோஸ்டேட், உணவுப்பாதை, இரைப்பை, கல்லீரல், நுரையீரல், கருப்பை மற்றும் கணையப் புற்றுநோய்கள் அடங்கும். அமெரிக்காவில், வளர்ந்து வரும் எம்சிடி தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்யும் ‘தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் வான்கார்ட் ஆய்வில்’, புற்றுநோயின் இருப்பு மற்றும் அது எந்த திசுவிலிருந்து உருவானது என்பதைக் கணிப்பதில் இந்த சோதனை சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. இதன் அடிப்படையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடமிருந்து இச்சோதனை ‘பிரேக்த்ரூ டிவைஸ் டெசிக்னேஷன்*’ பெற்றுள்ளது.

அப்போலோ மருத்துமனை புற்றுநோயியல் துறையின் சிஇஓ மற்றும் மருத்துவத் தலைவர் டாக்டர் ஹரித் கே. சதுர்வேதி அவர்கள் மேலும் இவ்வாறு தெரிவித்தார், “ஷீல்டு மல்டி-கேன்சர் டிடெக்ஷன் (MCD) என்பது சில குறிப்பிட்ட புற்றுநோய்களைக் கண்டறிவதில் மிகச் சிறந்த துல்லியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்ட ஒரு எளிய இரத்தப் பரிசோதனை ஆகும்; இருப்பினும், ஒரே ஒரு பரிசோதனை மூலமே அனைத்துப் புற்றுநோய்களையும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து விட முடியும் என்ற இலட்சிய நிலையை அடைய நாம் இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. தகுந்த மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் இந்த சோதனை மிகப்பெரிய பலனை அளிக்கும்.”

சைடஸ் லைஃப்சயின்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்வில் படேல் அவர்கள் கூறியதாவது, “இந்தியாவின் முன்னணி புற்றுநோயியல் நிறுவனமாக, புற்றுநோய் சிகிச்சையில் நோய் கண்டறிதல் முறைகளின் பங்கை நாங்கள் மறுவரையறை செய்து வருகிறோம். தற்போதுள்ள புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முறைகளுக்குத் துணையாக இருக்கும் புதுமையான பரிசோதனைத் தொழில்நுட்பத்திற்கான அணுகலை விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவில் ஷீல்ட் எம்சிடி-யை அறிமுகப்படுத்த அப்போலோ மருத்துவமனை மற்றும் கார்டன்ட் ஹெல்த் நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.. எங்களது பிரத்யேக நோய் கண்டறியும் பரிசோதனை முறைகள் மூலம், முறையான விழிப்புணர்வு முன்முயற்சிகளை மேற்கொண்டு, சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வதையும், முன்கூட்டியே ஆரோக்கியத்தைக் கவனிப்பதையும் நாங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். துல்லியமான நோய் கண்டறிதல் முறைகளை அதிக மக்களுக்குக் கிடைக்கச் செய்வதன் மூலம், நோயாளி பராமரிப்பில் புதிய சாத்தியங்களை உருவாக்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.”

கார்டன்ட் ஹெல்த் ஏஎம்இஏ-இன் தலைமை நிர்வாக அதிகாரி சிம்ரன்ஜித் சிங் அவர்கள் மேலும் கூறியதாவது, “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் எங்களது நீண்டகால வர்த்தகக் கூட்டாளியான சைடஸ் லைஃப்சயின்சஸ் மூலம் ‘ஷீல்டு மல்டி-கேன்சர் டிடெக்ஷன்’ (MCD) பரிசோதனையை இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அதன் சிகிச்சை முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஒரே ஒரு இரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளைக் கண்டறிய உதவும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக இந்த ஷீல்டு எம்சிடி விளங்குகிறது. நாங்கள் அனைவரும் இணைந்து, முன்கூட்டியே மருத்துவ மதிப்பீடுகளைச் செய்ய உதவக்கூடிய அதிநவீனப் பரிசோதனைத் தொழில்நுட்பங்களை அதிக மக்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம்; இது இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.” என்றார்.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய சுகாதாரப் பராமரிப்பில் பல முன்னோடித் திட்டங்களை அப்போலோ மருத்துமனை தொடர்ந்து முதன்முறையாக அறிமுகப்படுத்தி வந்துள்ளது. இதில் மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை, சைபர்நைஃப் ரேடியோசர்ஜரி, புரோட்டான் தெரபி, துல்லியமான புற்றுநோய் சிகிச்சை, மரபியல் மற்றும் ஏஐ சார்ந்த மருத்துவத் தீர்வுகள் ஆகியவை அடங்கும். தற்போது இந்த ஷீல்டு எம்சிடி பரிசோதனையின் அறிமுகம், புற்றுநோய் சிகிச்சை மற்றும் மருத்துவப் புதுமைகளில் அப்போலோவின் முன்னணி நிலையை மேலும் வலுப்படுத்துகிறது..

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

0

இயக்கம் – செல்லா அய்யாவு
நடிகர்கள் – விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா, கருணாஸ்
இசை – ஷான் ரோல்டன்
தயாரிப்பு – வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்

2022 ஆம் ஆண்டு வெளியான கட்டா குஸ்தி படத்தின் தொடர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது, முதல் பாகத்தின் இறுதியில் நாயகன் நாயகி இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது, குழந்தை பிறந்த பின்னரும் நாயகி தனது கட்டா குஸ்தி விளையாட்டை பின் தொடர நினைக்கிறார், அவருக்கு கணவனும் உதவியாக இருக்கிறார், இந்நிலையில் தனது மகளையும் இதே குஸ்தி போட்டியில் களம் இறக்க அந்த பெண் நினைக்கிறார், ஆனால் குழந்தைக்கு அதில் முழு விருப்பம் இல்லை, எனவே இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது, இதன் பின் என்ன ஆனது என்பதை நாம் அன்றாட பார்க்கும் ஒரு கணவன் மனைவி பிரச்சினைகளை நகைச்சுவை கலந்து சொல்வதே இந்த கட்டா குஸ்தி 2 படத்தின் கதை.

முதல் படத்தில் நாம் அனைவரையும் கவர்ந்த அதே ஜோடிகள் இணைந்து இந்த படத்திலும் நம்மை ரசிக்க வைத்துள்ளனர்,
நாயகன் விஷ்ணு விஷால் அதே கதாபாத்திரத்தை சற்று மெருகேற்றி மேலும் ரசிக்கும் வண்ணம் செய்துள்ளார், தன் மகளுக்காக பேசும் காட்சிகளில் குழந்தை தாய்மார்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளார், அதேபோல் ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது என்பதை நாம் அறிந்து கொள்ளும் வண்ணம் நாயகியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஐஸ்வர்யா முதல் படத்தில் இருக்கும் அதே வேகத்தில் இருக்கிறார், தாய்மை அடைந்த பின் பெண்கள் தங்கள் குறிக்கோளை அடைய எவ்வளவு சிரமம் அடைகிறார்கள் என்பதை தான் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்,

அதன் பின் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சாரா, நம் பக்கத்து வீட்டு குழந்தை போல தாய் தந்தை சமாளிப்பது , அறிவுரை கூறுவது என கலக்கியுள்ளார், அதே போல கருணாஸ் வழக்கமான தனது காமெடி மூலம் திரையரங்கை சிரிக்க வைத்துள்ளார், மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், அவரது குரலிலும் இசையிலும் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணம் உள்ளன, பின்னணி இசை மேலும் வலு சேர்க்கிறது. ஒளிப்பதிவை கே எம் பாஸ்கரன் கையாண்டுள்ளார், படம் நன்கு கலர்புலாக இருந்தது,

சம காலங்களில் நடக்கும் கணவன் மனைவி கருத்து வேறுபாடு, குழந்தை வளர்க்கும் முறை மற்றும் சமூகத்தின் வெளிப்பாடு என ஒரு சோசியல் கருத்துகளை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர் செல்லா அப்பாவு , கணவன் மனைவி இருவரும் குழந்தைக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நம்மிடம் வைத்துள்ளார், எந்த இடத்திலும் தொய்வில்லாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு கதையை நகர்த்தி கொண்டே இருக்கிறார்,

மொத்ததில் இந்த ” கட்டா குஸ்தி 2 ” அனைவருக்கும் பிடித்த ஒரு சோசியல் பொழுதுபோக்கு.

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

0

திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு, தற்போது மற்றொரு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு, படக்குழுவினரை நெஞ்சாரப் பாராட்டியுள்ளார்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதையை மிக அழுத்தமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் திரையில் கொண்டு வந்ததற்காக படக்குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான இயக்கம் ஆகியவை தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், இத்திரைப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
திரையிடலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., “சமூகத்தில் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இன்னும் பெருவாரியான மக்களைச் சென்றடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.

படத்தின் முக்கிய அம்சங்கள்:

சான்றிதழ்:

தணிக்கைக் குழுவின் மூலம் ‘U/A’ சான்றிதழ் பெற்று, ரிலீஸுக்கான அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

தயாரிப்பு & இயக்கம்: 2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தை தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார்.

நடிப்பு: வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பின்னணி: தமிழக வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிஜக் குற்றப் பின்னணியை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான கோர்ட்ரூம் க்ரைம் டிராமா (Courtroom Crime Drama) இது.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பாராட்டு மற்றும் ‘U/A’ சான்றிதழ் ஆகியவை படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. இத்திரைப்படம் வரும்

ஜூலை 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸின் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது!

0

சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வது என்பது ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் என அனைத்தும் சேர்ந்ததுதான். இயக்குநராக ராஜா கருப்பசாமிக்கு இது முதல் படமாக இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த இயக்குநருக்குரிய முதிர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் படப்பிடிப்பை குறித்த காலத்திற்குள் முடித்து கொடுத்தார். திரைக்கதையின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் இடையறாத கவனம் பாராட்டுக்குரியவை. இந்தத் திரைப்படம் நல்லபடியாக வர உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது எனக்கு நிறைவாக உள்ளது. எனது கதையில் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றி. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அயராது உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்” என்றார்.

நடிகர்கள்: ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சுரேந்திரன் பரஞ்சோதி, படத்தொகுப்பாளராக அசோக் அர்ஜுனன், இசையமைப்பாளராக பரத் சங்கர், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, கலை இயக்குநராக ஏ. பாலுமகேந்திரா மற்றும் விளம்பர வடிவமைப்பாளராக வியாகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

பின்னணிப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.