Home Blog Page 10

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

0

பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்தியுள்ளதை சொல்லலாம். இது வெறுமனே கிரியேட்டிவ் தேர்வாக மட்டுமல்லாமல், இன்று அல்லு அர்ஜுன் பெற்றிருக்கும் பிரபலத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

‘AA23’ திரைப்படம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே அதன் தீம் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் வெளியாகாத ஒரு படத்தின் இசையும் களமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகச் சில நடிகர்களுக்கே நடக்கும். அல்லு அர்ஜுன் ஒரு வெற்றிகரமான நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளில் இந்திய சினிமாவின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். அவரது திரைப்படங்கள் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

’AA23’ திரைப்படம் பற்றி எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தருணங்கள்தான் அல்லு அர்ஜுன் அசல் பான் இந்தியா நட்சத்திரம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றன.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்!

0

சிறந்த திரைப்படங்கள் அனைத்தும் துணிச்சலான முடிவில் இருந்துதான் தொடங்குகிறது. உலகம் அங்கீகரிப்பதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளர் புதிய திறமையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் காதல், சுப்ரமணியபுரம் மற்றும் பீட்சா முதல் மாபெரும் சாதனை படைத்த பாகுபலி: தி பிகினிங், கே.ஜி.எஃப்: சாப்டர் 1 மற்றும் காந்தாரா வரை பல மறக்க முடியாத திரைப்படங்கள் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவிலும் ராக்கி, தி பிளேர் விட்ச் புராஜெக்ட் மற்றும் கெட் அவுட் போன்ற திரைப்படங்கள் புதிய திறமையாளர்கள் மீதான நம்பிக்கை சினிமா வரலாற்றை உருவாக்கும் என்பதை நிரூபித்தன.

அந்த வரிசையில், சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ், வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து புதிய சுவாரஸ்யமான கதைக்களங்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்று இந்திய சினிமாவில் தனியிடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் புதுமையான கதைக்களங்களை தொடர்ந்து ஆதரிப்பதோடு புதிய திறமையாளர்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றன. தற்போது, பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தங்களின் அடுத்த திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்திற்கு ‘லவ்வர் பாய்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் அட்லியின் முன்னாள் உதவி இயக்குநரான அசோக், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சென்னையில் நடைபெற்ற சிறப்புப் பூஜையுடன் ’லவ்வர் பாய்’ திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களான ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், ஹெச். வினோத், ’வித் லவ்’ புகழ் மதன் உள்ளிட்ட இயக்குநர்களும், தயாரிப்பாளர்கள் லலித் குமார், 5 ஸ்டார் செந்தில், ஜீ ஸ்டுடியோஸின் அக்‌ஷய், விநியோகஸ்தர்கள் அழகர் மற்றும் சீனு, திங்க் மியூசிக் சந்தோஷ், ஹாட்ஸ்டாரின் பிரசன்னா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழாவின் சிறப்பம்சமாக இயக்குநர்- நடிகர் அபிஷன் ஜீவிந்த், பாரத், பிக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன், தேவ், ‘5 ஸ்டார்’ செந்திலின் மகன் அஜய் கார்த்தி மற்றும் நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அர்ஜித்துடன் நெருங்கிய நட்பு கொண்ட ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு இடையிலும் நேரில் வந்து படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தத் திரைப்படம் மற்றும் வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்தது குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “பேஷன் ஸ்டுடியோஸில் வளர்ந்து வரும் திறமையாளர்களையும் புதிய தரமான கதைகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். ‘லவ்வர் பாய்’ படத்தின் கதையை முதன்முறையாக கேட்டபோதே இயக்குநராக அசோக் மீது நம்பிக்கை வந்த்விட்டது. அவரது நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் தெளிவு ஆகியவை இந்தத் படத்தின் மீதான எங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது. பார்வையாளர்களுக்கும் இந்தக் கதை நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும். அசோக் கதை சொல்லும்போது, கேவிஎன் புரொடக்ஷன்ஸின் வெங்கட் கே நாராயணா அங்கு எதேச்சையாக வந்தார். படத்தின் மையக் கருவும் கதை சொல்லும் விதமும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. அதனால் இந்தத் திரைப்படத்தில் இணைய அவர் முடிவெடுத்தார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்க நாங்கள் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளோம். அர்ஜித் மிகுந்த அர்ப்பணிப்புள்ள வளர்ந்து வரும் நடிகர் மட்டுமல்ல, அவருக்குத் திரையுலகம் குறித்த ஆழமான அறிவும் உள்ளது. பல படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கிருத்தி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ’லவ்வர் பாய்’ படத்தில் திறமையான இளம் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படம் ஏற்கனவே சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

0

முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் – ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், ” இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருந்தது.

ரக்பி விளையாட்டு ஆகட்டும் அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்த வகையான விளையாட்டாக இருக்கட்டும்.. அதில் எப்போதும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒன்றை நீங்கள் உண்மையாக நேசித்து, அதைத்தான் உங்கள் வாழ்க்கையில் செய்திட வேண்டும் என்று உறுதியாக நம்பும்போது… கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக மாறுகின்றன. அதே சமயத்தில் அந்த நல்ல நாட்கள் நம்மை தொடர்ந்து முன்னேறி செல்ல தூண்டுவதாகவும் அமைகின்றன.

ரக்பி பிரீமியர் லீக்கில் பங்கேற்று இந்த விளையாட்டை கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ராகுல் போஸை ( Ragul Bose)  எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர் எனக்கு அழைப்பு விடுத்து இந்த சிறப்பான முன்னெடுப்பு பற்றி கூறிய போது.. குறிப்பாக இந்த ஆண்டு ரக்பி பிரீமியர் லீக்கில் பெண்கள் அணிகளும் பங்கேற்கிறார்கள் என்று சொன்னபோது.. இங்கு இருப்பது ஒரு பெரும் கௌரவம் என்பதையும் நான் உணர்ந்தேன்.

விளையாட்டு வரலாற்றில் குறிப்பாக இந்தியாவில் திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குத் தேவைப்படுவது நிதி உதவி- அங்கீகாரம் -முறையான பயிற்சி மற்றும் உங்களை நம்பி ஆதரிக்கும் ஒரு குழு- ஆகியவை மட்டும் தான், திறமையான வீரர்களுக்கு தங்கள் கனவுகளை நனவாக்கவும்… இத்தகைய அற்புதமான மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும்… வாய்ப்பு அளிக்கும் ரக்பி பிரீமியர் லீகின் செயல்பாடு.. உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என்றார்.

“தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை!” – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா

0

நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது.

“This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒளிப்பதிவு இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது,

இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி ரெட்டி என்னை தொடர்பு கொண்டு, சமந்தாவை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

பொதுவாக நந்தினி ரெட்டி என்றாலே அழகான காதல் மற்றும் குடும்பக் கதைகளை நினைப்போம். ஆனால் இந்த முறை அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சமந்தா இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹார்ட்கோர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் படப்பிடிப்பு முழுவதும் எங்களை ஊக்கப்படுத்தியது.

டிரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த எனர்ஜி மற்றும் விறுவிறுப்பு முழுப் படத்திலும் இருக்கும். ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி” என்றார்.

நடிகை கௌதமி பேசியதாவது,

“ஒரு திரைப்படத்தின் மூலம் உங்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் ‘எங்கள் தங்கம்’ போன்ற ஒரு சிறப்பான படத்திற்காக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.

சமீப காலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது.

இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.

பலர் இதை ‘உமன் பவர்’ என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது ‘டாலண்ட் பவர்’. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். ‘எங்கள் தங்கம்’ கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம்” என்றார்.

நடிகை சமந்தா பேசியதாவது,

“சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான். சத்யம் திரையரங்கம் அமைந்துள்ள இந்த பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி காலத்தில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன். இன்று இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

இன்று இங்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பல வருடங்களாக அதிக தமிழ் படங்கள் செய்யவில்லை, அதிக வெளியீடுகளும் இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.

ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன், குடும்பம், உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் ISC மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார். திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மாரிங்கண்டி இணைந்து எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை பிரகாஷ் பொப்புடி கவனித்துள்ளார்.

படத்தின் நிர்வாக மேற்பார்வையை சீதா R மேனன், படத்தொகுப்பை தர்மேந்திர ககராலா, கலை இயக்கத்தை உல்லாஸ் ஹைடூர் மேற்கொண்டுள்ளனர். அதிரடி காட்சிகளுக்காக சர்வதேச புகழ்பெற்ற லீ விட்டேக்கர் மற்றும் ஏஜாஸ் குலாப் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சமந்தாவின் புதிய தோற்றமும், படத்தின் வித்தியாசமான கான்செப்ட்டும் ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “எங்கள் தங்கம்” திரைப்படம் இந்த கோடையின் முக்கிய வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

0

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் (Era Entertainment) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.

போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. தெரு முழுவதும் திருவிழா அலங்காரங்கள், வண்ணக் கொடிகள், இசை மற்றும் கொண்டாட்ட சூழல் நிரம்பியிருப்பது, படத்தின் ஜாலியான மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த அழகான போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற மனதை வருடும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வழங்கும் மற்றுமொரு இதயப்பூர்வமான படைப்பாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும், மனம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், குறிப்பாக, வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட Cross-Cultural Love Story ஆகவும், வடசென்னை மிடில்கிளாஸ் குடும்ப வாழ்க்கை, காதல், மற்றும் நகைச்சுவை கலந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குடும்ப உறவுகள், காதல் மற்றும் உணர்வுகளுடன் கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ‘அன்பே டயானா’, வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகி குடும்ப ரசிகர்களை கவரும் ஜாலியான காதல்-குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது

‘மெகா’ ஜோடியின் ஆண்டு : சரித்திரம் படைத்த தந்தை – மகன், சிரஞ்சீவி – ராம்சரண் வரலாறு

0

பல புகழ்பெற்ற குடும்பங்களையும்…. வெற்றிகரமான தலைமுறைகளையும்… ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும்… இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையாளராக திகழ்கின்றனர்.

முதலில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் வசூலுக்கான சாதனை களத்தை அமைத்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. சில மாதங்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் மகனும், ‘மெகா பவர் ஸ்டார்’ என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவருமான ராம்சரண் அந்த சாதனையை ஒரு படி மேலே கொண்டு சென்றார்.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாண்ட வெற்றி படமான ‘பெத்தி’ ( Peddi ) – ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தின் உலகளாவிய ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்தது. அத்துடன் 2026 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் வெளியான படங்களில் அதிக வசூலை செய்து ,பாக்ஸ் ஆபீஸ் சாம்பியனாகவும் உருவெடுத்தது. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.

இந்த சாதனை சரித்திரத்தின் முக்கியத்துவம் என்பது வசூல் தொகையை கடந்து நிற்கிறது. ஒரு ஆண்டில் மிகப்பெரிய வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை.. தந்தையும், மகனும் ஜோடியாக பிடித்திருப்பதை இந்திய திரையுலகம் இதற்கும் முன் கண்டதில்லை.. ஒரு திரை குடும்பத்தை சேர்ந்த இரண்டு தலைமுறையினரும்.. ஒரே நேரத்தில் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி இருக்கும் அபூர்வ தருணம் இது.

அவர்கள் நிகழ்த்திய இந்த சாதனையை தனித்துவமாக வெளிப்படுத்துவது அவர்கள் வெற்றி பெற்ற காலம் தான். பொதுவாக தற்போதைய சூழலில் திரையுலகினருக்கு மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றிகள் அவசியமாக தேவைப்பட்ட ஒரு காலகட்டத்தில்… இந்த இரு படங்களும் வெளியாகி வெற்றி பெற்றதுடன், திரையரங்கு சார்ந்த வணிகத்திற்கு புதிய உத்வேகத்தையும் அளித்திருக்கின்றன. குறிப்பாக கோடை கால பருவத்தில் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகள் மூலமான வெற்றி கிடைக்காத நிலையில்… திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும்.. திரையரங்கு உரிமையாளர்களுக்கும்… ‘பெத்தி’ திரைப்படம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றியைப் பெற்று, அவர்களுக்கு நிம்மதியை வழங்கி உள்ளது.

சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து 2026 ஆம் ஆண்டில் ‘மெகா’ குடும்பத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக மாற்றி உள்ளனர். இவை பல ஆண்டுகளுக்கு ஈடு இணையற்றதாக திகழக்கூடிய ஒரு பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தின் புதிய அத்தியாயத்தை அவர்கள் எழுதியுள்ளனர்.

அப்போலோ மருத்துவமனை நாள்பட்ட கணைய அழற்சி நோயாளிக்கு சிக்கலான ரோபோடிக் கணைய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது

0

சென்னை, 16 ஜூன் 2026: தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நாள்பட்ட கால்சிஃபிக் (கால்சியம் படிந்த) கணைய அழற்சியால் பாதிக்கப்பட்ட 39 வயது நோயாளிக்கு தனது முதல் ரோபோடிக் ஃபிரேஸ் (Frey’s) செயல்முறையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. இது மருத்துவமனையின் ரோபோடிக் கணைய அறுவை சிகிச்சை திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். டா வின்சி எக்ஸ்ஐ ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை (da Vinci Xi Robotic Surgical System) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, சிக்கலான கணையக் கோளாறுகளைக் கையாள்வதில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் பங்கினை விரிவுபடுத்துவதுடன், அதிநவீன இரைப்பைக் குடல் மற்றும் கல்லீரல்-கணைய-பித்தப்பை(HPB) அறுவை சிகிச்சையில் மருத்துவமனையின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த நோயாளி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் கடுமையான வயிற்று வலி மற்றும் பலமுறை கணைய அழற்சி பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தார். மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு கணையக் குழாய் கற்களுடன் கூடிய நாள்பட்ட கால்சிஃபிக்  கணைய அழற்சி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலை ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாகப் பாதிக்கக்கூடியது மேலும் இதற்கு பெரும்பாலும் சிறப்பு அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, நோயாளிக்கு எந்தவிதமான சிக்கல்களும் இன்றி உடல்நலம் சீரடைந்தது. அவர் மீண்டும் வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கினார், மேலும் அவரது உடல்நிலை சீராக இருந்ததால் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

டா வின்சி ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை இரைப்பை குடலியல் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய அறுவை சிகிச்சை பிரிவின் சீனியர் கன்சல்டன்ட் மற்றும் கிளினிக்கல் லீட் டாக்டர் எஸ். ஸ்ரீவத்சன் குருமூர்த்தி அவர்கள் தலைமையிலான குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

ஃபிரேஸ் செயல்முறையானது, கணையத்தின் தலைப் பகுதியைச் சீரமைப்பதோடு  லாங்கிடுடினல் பான்க்ரியாடோஜெஜுனோஸ்டமி (longitudinal pancreaticojejunostomy) எனப்படும் கணைய-குடல் இணைப்பு முறையையும் ஒருங்கிணைத்து செய்யப்படுவதாகும். இது கணைய நீர் தடையின்றி வெளியேறுவதை மேம்படுத்தவும், வலியைப் போக்கவும், கற்கள் மற்றும் நாள்பட்ட அழற்சியினால் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்யவும், நோயாளியின் நீண்டகால வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறை மிகவும் பிரத்யேகமானது மற்றும் சிக்கலானது என்றாலும், இதனை ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாகச் செய்வது குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய கணைய அறுவை சிகிச்சை துறையில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

கணைய அறுவை சிகிச்சை என்பது இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவிலேயே மிகவும் நுட்பமான மற்றும் சவாலான பகுதிகளில் ஒன்றாகும். இதற்கு மிகத் துல்லியமான பிரித்தெடுத்தல், அதிநவீன மறுகட்டமைப்பு நுட்பங்கள், சிறந்த கையாளுமைத் திறன் மற்றும் மென்மையான கணைய திசுக்களை மிகக் கவனமாகக் கையாளுதல் ஆகியவை அவசியமாகும். அப்போலோ மருத்துவமனையின் முதல் ரோபோடிக் ஃபிரேஸ் செயல்முறை வெற்றிகரமாக முடிவடைந்திருப்பது, சிக்கலான கணையக் கோளாறுகளைக் கையாள்வதில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும் இது மருத்துவமனையின் ரோபோடிக் இரைப்பைக் குடல் மற்றும் கல்லீரல்-கணைய-பித்தப்பை (HPB) அறுவை சிகிச்சை திட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த மைல்கல் குறித்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் Senior Consultant & Clinical Lead, Surgical Gastroenterology & Minimal Access Surgery, டாக்டர் எஸ். ஸ்ரீவத்சன் குருமூர்த்தி அவர்கள் இவ்வாறு கூறினார், நாள்பட்ட கால்சிஃபிக் கணைய அழற்சியானது, மீண்டும் மீண்டும் ஏற்படும் வலி மேலும் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிப்பது ஆகியவை ஒரு நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாகப் பாதிக்கும். எங்களது முதல் ரோபோடிக் ஃபிரேஸ் செயல்முறையை மேற்கொண்டது, எங்களின் ரோபோடிக் கணைய அறுவை சிகிச்சை திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ரோபோடிக் தளம் வழங்கும் துல்லியத்தன்மை, மிக நுட்பமான பிரித்தெடுத்தல் மற்றும் மறுகட்டமைப்புக்கு வழிவகுக்கிறது, இது குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய நுட்பங்களுடன் சிக்கலான கணைய பாதிப்புகளைக் கையாள எங்களுக்கு உதவுகிறது.”

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் CEO திரு. கரண் பூரி அவர்கள் மேலும் கூறியதாவது, இந்த சாதனை மருத்துவச் சிறப்பு, புதுமைகள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை முறைகளுக்கான மேம்பட்ட ரோபோடிக் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துமனையின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சையில் எங்களது தொடர்ச்சியான முதலீடு, சவாலான இரைப்பை குடல் மற்றும் கணைய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை சாத்தியங்களை விரிவுபடுத்த எங்களை அனுமதிக்கிறது.”

இந்த மைல்கல் சாதனை, அதிநவீன ரோபோடிக் இரைப்பை குடல் மற்றும் கணைய அறுவை சிகிச்சையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் திறன்களை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் இது சிக்கலான, குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய அறுவை சிகிச்சை பராமரிப்பை விரிவுபடுத்துவதில் அப்போலோ மருத்துவமனையின் தொடர்ச்சியான கவனத்தை பிரதிபலிக்கிறது. ரோபோடிக் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், கணைய அறுவை சிகிச்சை போன்ற மிகவும் பிரத்யேகமான செயல்முறைகளில் அதன் பயன்பாடு, சவாலான இரைப்பை குடல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை சாத்தியங்களை பரந்ததாக்க உதவுகிறது.

About Apollo Hospitals:

Apollo revolutionised healthcare when Dr. Prathap Reddy opened the first hospital in Chennai in 1983. Today, Apollo is the world’s largest integrated healthcare platform with over 10,400 beds across 76 hospitals, 6,600+ pharmacies, 264 clinics, 2,182 diagnostic centres, and 800+ telemedicine centres. It is one of the world’s leading cardiac centers, having performed over 3,00,000 angioplasties and 2,00,000 surgeries. Apollo continues to invest in research and innovation to bring the most cutting-edge technologies, equipment, and treatment protocols to ensure patients have access to the best care in the world. Apollo’s 1,20,000 family members are dedicated to delivering exceptional care and leaving the world better than we found it.

Media Contact: Apollo Hospitals | Ms. Suganthy – 98417 14433

Burson India | Haripriya Manoharan – 97907 50667

Zee தமிழ் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நடனத் திருவிழா: புதிய பொலிவுடன் “டான்ஸ் ஜோடி டான்ஸ்”, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு – 7 PM**

0

சென்னை: தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ், தனது மிகப்பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடன நிகழ்ச்சியான “டான்ஸ் ஜோடி டான்ஸ்” ஷோவின் புதிய சீசனை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இதுவரை ஒளிபரப்பாகிய சீசன்கள், 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைந்து, 120-க்கும் மேற்பட்ட நடன ஜோடிகளை அறிமுகப்படுத்திய பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. இத்தகைய புகழ்பெற்ற நடன மேடையில், இந்த முறை முற்றிலும் புதுமையான வடிவத்தில் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” (Dance Jodi Dance) என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக சீசனாக, மாபெரும் களமாக
உருவெடுத்துள்ளது.

அனைத்துத் தரப்பு பெண்களுக்கான அங்கீகாரம்: பெண்களின் திறமைகளைக் கொண்டாடும் விதமாக இந்த சீசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தீவிரத் தேர்வுகள் மூலம், அனைத்துத் தடைகளையும் உடைத்து சாதிக்கத் துடிக்கும் இளம் பெண்கள், திருமணமான பெண்கள், தாயானவர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் எனப் பலதரப்பட்ட திறமைசாலிப் பெண்கள் இந்த மேடையில் தங்களின் நடனத் திறமையை நிரூபிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியின் சுவாரசியமான வடிவமைப்பு (Format):

முதற்கட்ட ஆடிஷன்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டாப் 20 திறமையாளர்கள் மெகா ஆடிஷனுக்கு முன்னேறுவர். அவர்களின் தனித்திறன் மற்றும் நடன திறமை ஆகியவற்றின் அடிப்படையில் 18 வயதிற்கு மேற்பட்ட 10 சிறந்த பெண் நடனக் கலைஞர்கள் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இந்த 10 பெண் போட்டியாளர்களும், சின்னத்திரையின் முன்னணி ஆண் பிரபலங்களுடன் (Male Celebrity Dancers) ஜோடி சேர்ந்து தங்களின் நடனப் பயணத்தைத் தொடர்வார்கள்

நட்சத்திர நடுவர்கள் மற்றும் வழிகாட்டிகள்:

இந்த பிரம்மாண்ட மேடையை அலங்கரித்து, போட்டியாளர்களை வழிநடத்த, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான டாப் ஸ்டார் பிரசாந்த், டான்சிங் குவீன் சிம்ரன் மற்றும் புன்னகை அரசி சினேகா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர். இவர்களுடன் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் வழிகாட்டிகளாக (Mentors) இருந்து போட்டியாளர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை சேனல் அதிகாரி V.S ராகவன் அவர்கள் பேசியதாவது:

“கடந்த 18 வருடங்களாக ஜீ தமிழ், மக்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. வித்தியாசமான கதைகள் மட்டுமில்லாமல், ‘சரிகமப’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு பின்னணிகளிலிருந்து வரும் திறமையான போட்டியாளர்களுக்கு, கனவு மேடையை அமைத்து, ஒரு சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் மேடையாக இருந்து வருகின்றன.

பலரின் கனவை நனவாக்கும் மேடையாகவும், பல திறமையாளர்களுக்கு அங்கீகாரமும், அடையாளமும் தந்து அவர்களின் வாழ்வின் வழிகாட்டியாகவும் இந்த மேடை இருந்து வருகிறது. ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ கடந்த 10 வருடங்களாக பல திறமைகளையும், பல நட்சத்திரங்களையும் உருவாக்கியுள்ளது.
இந்த முறையும் நிறைய திறமையாளர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் மிகுந்த திறமைசாலிகள், எனவே உங்களது எதிர்பார்ப்பு பெரியதாக இருக்கலாம்.

தமிழ்நாடே இதுவரை பார்த்திராத ஒரு பவர்ஃபுல் நடுவர் குழு (Judges Panel) இந்த சீசனில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே எந்தவொரு நிகழ்ச்சியிலும், இந்த அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான நடுவர் குழு இருந்ததில்லை. இவர்களுடைய வழிகாட்டுதல் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சீசனில் இருந்து நாம் பல புதிய திறமைகளின் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் தருணங்களை எதிர்பார்க்கலாம்.

இது வெறும் தொடக்கம்தான்… மாற்றத்திற்கான தொடக்கம்! இன்னும் பல புதிய மாற்றங்களும், புதிய நிகழ்ச்சிகளின் தொடக்கங்களும் மிக விரைவில் வரவிருக்கின்றன.”

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை – இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் , திறமையும் கனவுகளும் கொண்ட பெண்களின் புதிய எழுச்சியைக் காணத் தயாராகுங்கள்!

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

0

#DarkTrailer: https://youtu.be/fKUPkoYkhII?si=fwgmrkGhdNpEjsQJ

‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், டி. சிவா , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசுகையில், ”டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை பார்த்துவிட்டு.. இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த ‘டார்க்’ திரைப்படம் இருக்கும்.

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவிலிருந்து பத்து முதல் பதினைந்து ஹீரோக்கள் உருவாகிறார்கள். அதில் ஒரு முக்கியமான இடத்தில் இப்படத்தின் ஹீரோவான அஜய் இருப்பார்.‌

இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை நாங்கள் படத்தின்  புரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.  

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருநாள் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் உடன் பயணிக்கும் போது, அவர் என்னிடம் உங்களின் ஆசை என்ன என கேட்டபோது, நான் சினிமாவில் தயாரிப்பாளராக வேண்டும் என சொன்னேன். உடனடியாக அவர் எழுதிக் கொடுத்த கதை தான் ‘டார்க்’. இப்படத்தின் மூலம் என்னை தயாரிப்பாளராக உயர்த்தியவர் இயக்குநர் கணேஷ். அவருக்கும் நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், ”இந்தப் படத்தின் டிரைலர் வழக்கமானதாக இல்லாமல் சற்று புதிதாக இருந்தது. இன்றைய தேதியில் ரசிகர்கள் ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள். ஏனெனில் புதிதாக கதை சொன்ன படங்கள் எல்லாம் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘டார்க்’ திரைப்படத்திலும் புதிதாக ஏதேனும் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.‌

இந்தத் திரைப்படம் ஒரு லாபகரமான திரைப்படமாக இருக்க வேண்டும். ஒரு ட்ரெண்ட் செட்டிங் ஃபிலிமாக அமைந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தை கொடுக்க வேண்டும். இப்படத்தின் ஹீரோவான அஜய் கார்த்திக்கும் இந்தப் படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் ரியோ பேசுகையில், ”டார்க் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. பொதுவாக சைக்காலஜிகல் திரில்லர் படங்களுக்கு என ரசிகர்கள் உள்ளனர் என்பார்கள். ஆனால் என்னுடைய ஒப்பினியன் வேறு. இது போன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படங்களுக்கென ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். பயந்து பயந்து ஒரு படத்தை பார்ப்பது ஒரு குடும்பத்திற்கே பிடிக்கும். அதற்கான மொமென்ட்ஸ் ட்ரெய்லரில் இருந்தது. ரீசன்டா ‘அப்சஷன்’ என்ற ஒரு பத்து கோடியில் எடுத்த படம், 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இது போன்றதொரு படங்கள் வராதா என்ற ஏக்கம் நமக்கும் இருக்கும். அந்த வகையில்  ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் ‘டார்க்’ படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

‘டாடா’ படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை பார்த்தவர் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு. இந்தப் படத்தில் அவர் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அதுவும் அவருடைய திறமைக்கு பொருத்தமானது தான். தயாரிப்பாளராகவும் அவர் மிகப்பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், ”டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபு என்னிடம் வந்து கதை சொன்னார். நான் ஃபேமிலி சென்டிமென்ட் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் ‘டார்க்’ படத்தின் கதையை சொன்னார். கேட்டதும் இப்படத்தின் ஹீரோ யார் ? என்று கேட்டேன். அஜய் கார்த்தி நடிக்கிறார் என்றார். இந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்து விடுவாரா..? புதுமுகமாச்சே..! என்று கேட்டேன். ஆனால் இப்படத்தினை டப்பிங் செய்யும் போது பார்த்தேன். அஜய் கார்த்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஃபைவ் ஸ்டார் செந்தில் கமர்சியல் படங்களை வெளியிட்டாலும், கன்டென்ட் உள்ள படங்களையும் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றி.

இப்படத்தினை திரையில் பார்த்தபோது குழுவினரின் உழைப்பை தெரிந்து கொண்டேன். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ”அஜய் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது. இதன் ட்ரெய்லர் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. திரையில் அவரது லுக் அண்ட் பிரசன்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது.‌ அவருக்கு வாழ்த்துகள்.

இந்தப் படம் திரில்லராக இருப்பதால் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உருவான பாடல் நன்றாக இருந்தது.

இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகி இருக்கிறார் நண்பர் கணேஷ் கே பாபு. தற்போது நிறைய படங்களை தயாரிக்கிறார். தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமான விஷயம். அதனால் அவருக்கும் என் வாழ்த்துகள்.

நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் ரிஸ்க் அதிகம். இது சாதாரண விஷயமும் அல்ல. படத்தை தயாரிப்பது என்பது எளிதானது அல்ல. கதையை நம்பி முதலீடு செய்து அந்த பணம் திரும்ப வருமா… வராதா… என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும்.

ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதிலும் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன். எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ் திரை உலகத்திலும் சின்ன படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. ‘பிளாஸ்ட்’, ‘சிறை’ போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் செய்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அண்மையில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது.

தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்ல படங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல லாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசுகையில், ”நான் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை அஞ்சனா நேத்ரன் பேசுகையில், ”டார்க் படத்தின் மூலம் நான் அறிமுகமாகிறேன். முதல் படத்திலேயே கே பாக்யராஜ், நட்டி நட்ராஜ், வி.டி.வி கணேஷ் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறேன். ஹீரோ அஜய் கார்த்திக் கடும் உழைப்பாளி. மிகவும் இனிமையானவர். அப்பாவி.  என்னைவிட அவர் ரொம்ப அப்பாவி.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.

என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. என்னுடைய அடுத்த பட வாய்ப்பையும் தயாரிப்பாளர் கணேஷ் பாபு வழங்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்,” என்றார்.

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில், ”இந்த படத்தின் குழுவினர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களுடன் தான் என்னுடைய அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றுகிறேன்.  அதனால் இந்த விழாவிற்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

டார்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது. அதிலும் விஷுவல்ஸ் அட்டகாசமாக இருந்தது. எழுத்து நன்றாக இருக்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். இதற்காக படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அஜய் கார்த்தி இந்த படத்தில் நன்றாக வேற லெவலில் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகிற்கு நல்லதொரு நடிகர் கிடைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் நியூ சாக்லேட் பாய். அவருடைய சிரிப்பு.. கவர்ச்சிகரமானதாக இருக்கும்.

நட்டி நட்ராஜ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களான கணேஷ் கே பாபு மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்,” என்றார்.

நடிகர் அஜய் கார்த்தி பேசுகையில், ”இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மேடை. டார்க் ஒரு படம் என்பதை கடந்து எனக்கு ஒரு பாடம் என்றும் சொல்லலாம். சினிமாவைப் பற்றி முறையாக கற்றுக் கொண்டதே இந்த படத்தின் படப்பிடிப்பில் தான். இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமான ஏ பி வி மாறன் மற்றும் கணேஷ் கே பாபு ஆகிய இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்கிறேன்.

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே பாபு வேறொரு பிரபலமான நடிகரை வைத்து படம் இயக்கியிருக்கலாம். ஆனால் இது போன்றதொரு எக்ஸ்பிரிமென்டல் படத்தை புது முகங்களை நம்பி தயாரிக்க முன் வந்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கும் எங்களது வாழ்த்துக்கள்.‌

அவரும் நானும் சில வருடங்களாக இணைந்து பயணித்திருக்கிறோம். அதில் பல சுவாரசியமான சம்பவங்கள்- வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.

படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கே செந்தில். என் அப்பா. அவருக்கு எத்தனை மேடைகளில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. அவரிடம் தொடக்கத்தில் பேய் படம் என்று சொன்னதும் அவர் பின்வாங்கினார். மகனை இப்படி ஒரு சீரியஸான பேய் படத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமா..! என யோசித்தார்.  அதன் பிறகு எங்களது குழுவினரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறார்.

இயக்குநர் கல்யாண் கே. ஜெகனுடன் மூன்றாண்டுகளாக பயணித்திருக்கிறேன். அவருடைய சமயோஜித புத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு தளங்களில் எத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் தன்னுடைய திறமையால் சீர் செய்து பட குழுவினருக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்க கூடியவர்.‌ எதற்கும் டென்ஷன் ஆகவே மாட்டார்.

படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய சின்ன சின்ன அசைவுகளையும் துல்லியமாக கவனித்து அதனை எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற விசயங்களை நட்டி நட்ராஜ் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை எனக்கு உற்சாகத்தை அளித்தது.

டார்க் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது. தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு புது வகையான அனுபவத்தை வழங்க வேண்டும். அடுத்து என்ன? என்பதை யூகித்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து ,இதனை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். பார்த்த பிறகு உங்களுடைய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் பேசுகையில், ”எனக்கும் இது முதல் மேடை. இந்த மேடையில் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மாஸ்டர் இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு நன்றி. அவர் ஒரு குறும்படத்தில் நடித்த போது என்னை முதல் முதலில் மானிட்டரில் பார் என்று சொன்னார். அதன் பிறகு அவருடைய தயாரிப்பில் முதல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது மிகவும் சந்தோஷம்.

தயாரிப்பாளர் மணிமாறன்- மிகவும் இன்ட்ரஸ்டிங்கான மனிதர். படத்தை வணிகம் செய்வதில் தேர்ந்தவர். இந்த படத்தில் நட்சத்திரங்களை நடிக்க வைத்ததில் அவருடைய பங்களிப்பும் உண்டு. முதல் படத்தில் இந்த இருவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே இந்தப் படம் உருவாக காரணமாகவும் இருந்தது.

இந்தப் படத்தில் அஜய் கார்த்தி தான் ஹீரோ. அவரும் புதுமுகம். நானும் புதுமுகம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்போம். அதைத்தொடர்ந்து ஹீரோயின் அஞ்சனா. அவர்களும் புதுமுகம். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக் கொண்டே எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை திரையில் செய்திருக்கிறோம்.

நட்டி நட்ராஜ் பேசும்போது படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று சொன்னார். அவர் வரும்போது நாங்களே படப்பிடிப்பு தளத்தை அமைதியாக்கி விடுவோம். எங்களுடன் நீண்ட நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் அஜயை மையப்படுத்தி தான் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் சொன்னதை அவர் புரிந்து கொண்டு நடித்தார்.

இந்தப் படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு பேசுகையில், ”டாடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிறைய பேச முடியவில்லை. பெரும் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்தத் தருணத்தில் டாடா படத்தின் வெற்றியையும் என்னால் சுவைக்க முடியவில்லை. அதே சமயத்தில் நான் மேடையில் அதிகமாக பேசும் நபரும் கிடையாது. ஆனால் இந்த மேடையில் நிறைய பேச வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்காக  என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக படிக்க வேண்டும் என்றார்கள்… படித்தேன். உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்… உதவி இயக்குனராக பணியாற்றினேன். நிறைய இடங்களுக்குச் சென்று நிறைய பேரை சந்திக்க வேண்டும் என்றார்கள்… சந்தித்தேன். அதன் பிறகு குறும்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்… குறும்படத்தை இயக்கினேன். மியூசிக் வீடியோ செய்ய வேண்டும் என்றார்கள்… அதையும் செய்தேன். எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கோவிட் காலகட்டத்தில் அனைவரும் முடங்கி விடுகிறோம். கோவிட் முடிந்த பிறகு நமக்கு சினிமா வராது என்று நினைத்து.. பத்து வருடமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ..! என நினைத்தேன். அதனால் இதனை விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்று விட்டேன். அந்த தருணத்தில் ஒரு போன் வருகிறது. டாடா படத்தின் கதையை சொல்கிறேன். அந்த கதையை சொல்லி முடித்தவுடன் ஒரே நாளில் அதனை படமாக உருவாக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.

தயாரிப்பாளரும் இந்தப் படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்கிறார். தயாரிப்பாளராக மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் நானும் அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது. பட்ஜெட்டில் எங்கெல்லாம் தயாரிப்பாளருக்கு செலவை குறைக்க முடியும் என்பதை பார்த்து பார்த்து செய்தேன்.

கல்யாண் என்னுடைய நண்பர். நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம். என்னுடன் இணைந்து பயணித்தான். எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது. அவன் நல்ல வேலையை பார்த்துக் கொண்டு, நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனது வேலையை நான் தான் கெடுத்தேன்.

அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவனுடைய ஆபீஸில் ஒரு பக்கத்தை ஒதுக்கி கொடுத்தான். நாளடைவில் அது என்னுடைய ஆபீஸ் ஆக மாறிவிட்டது. சிறிது நாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டான். இது பற்றி கேட்டபோது நீ முதலில் இயக்குநர் ஆகு. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

கல்யாணின் மனைவியிடம், ‘இவன் ஒரு நாள் நிச்சயம் பெரிய ஆளாகி விடுவான்’ என்று சொன்னேன். இன்று அது நடந்து விட்டது.

டாடா படத்தின் ரஃப் கட் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது செந்தில் சார் வந்தார். அந்தத் தருணத்தில் அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.‌ அவரை தயாரிப்பாளர் அழைத்து வந்தார். நான் சினிமாவை பற்றி படித்திருக்கிறேன் ஆனால் ஒரு சினிமாவுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாது.‌ செந்தில் சார் வந்து படத்தை பார்த்துவிட்டு சென்ற அடுத்த நாள்… என் வாழ்க்கை மாறிவிட்டது. அது என்ன மேஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இவர் வந்து சென்ற அடுத்த நாள் என்னிடம் எல்லோரும் வேறு மாதிரியாக நடந்து கொள்ள தொடங்கி விட்டனர். முதன்முதலாக டாடா படத்தை அங்கீகரித்தவர் செந்தில் சார் தான்.‌ இந்த செந்தில் சார் இருக்கும் தைரியத்தில் தான் நான் தொடர்ந்து படங்களை தயாரிக்கிறேன். அவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன். நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது ‘டாடா’ படத்திற்கான தேங்க்ஸ் தான்.    

இந்தப் படத்தின் கதையை நான் தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன். ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன் வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன் அஜய் ஓகேவா என்று.

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் ..எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைய காட்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு என்றார்கள். நான் கிளைமாக்ஸை படமாக்குவதை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன். மிகவும் அமைதியாக இருக்கிறது. அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜய் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைத்துவிட்டது. கல்யாணும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அஜய் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து ஒன் மோர் இன்னொரு டேக் போகலாமா என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. அஜயிடம் நேரம் ஆகிறது. இயக்குநர் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. போதும் என்றேன். இறுதியில் இயக்குநரை சமாதானப்படுத்தி அதே  காட்சியை மீண்டும் ஒரு முறை நடிப்பதற்காக அவர் செல்கிறார். நான் அப்போது கோபத்துடன் தனியாக சென்று அமர்கிறேன். அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து முடித்துவிட்டு இயக்குநர் ‘கட் ‘சொன்னவுடன் என் முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது அந்த ஷாட் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய படப்பிடிப்பில் நடிகர்கள் யாராவது நம்பிக்கையுடன் இன்னொரு டேக் கேட்டால் நான் அதை அனுமதிக்கிறேன். இந்த விஷயத்தை நான் அஜயிடம் கற்றுக் கொண்டேன்.

இந்தப் படமே அஜய் தான். அவர் கேரக்டர் மேல் ட்ராவல் ஆகும் கதை இது. இந்தப் படம் அஜயின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  

இந்த மாதம் ‘டார்க்’ வெளியாகிறது. அடுத்த மாதம் ‘கராத்தே பாபு’ வெளியாகிறது. அதற்குப் பிறகு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.

‘டார்க்’ திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைக்க, ரவி சக்தி ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பிற்கு கதிரேஷ் அழகேசன் பொறுப்பேற்க, கலை இயக்கத்தை சண்முகராஜா கையாள சண்டைப் பயிற்சியை நைஃப் நரேன் வழங்க, நடன இயக்கத்தை சதீஷ் மேற்கொண்டுள்ளார். பாடல்கள்: யுகபாரதி, விவேக், கணேஷ் கே. பாபு; ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்; ஒப்பனை: முகம்மது; உடைகள் வடிவமைப்பு: காயத்ரி பாலசுப்பிரமணியன்; நிர்வாக தயாரிப்பு: மீனா அருணேஷ்; சவுண்ட் மிக்சிங்: B. முத்துக்கிருஷ்ணன்; டி ஐ: லிக்சோ பிக்சல்ஸ்; கலரிஸ்ட்: ஜி. எஸ். முத்து; ஸ்டில்ஸ்: குமரேசன்: தயாரிப்பு மேலாளர்: பாலாஜி பாபு எஸ்; கோ டைரக்டர்: சதீஷ் சுகுமார்; இணை ஒளிப்பதிவு: கண்ணதாசன் செழியன்; இணை படத்தொகுப்பு: தீபன் சந்திரசேகரன்; இசை லேபிள்: திங்க் மியூசிக்.

பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

0

பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான ‘சின்ன சின்ன ஆசை’ திரையரங்குகளில் ஜுன் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.

காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஃபீல் குட் படமான ‘சின்ன சின்ன ஆசை’யில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடிக்க, அற்புதமான வேடத்தில் அபர்ணா பாலமுரளியும் சுவாரசியமான வேடங்களில் தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட்டும் நடிக்கின்றனர்.

’96’ புகழ் கோவிந்த் வசந்தாவின் இதயம் தொடும் இசையில் ஆறு அழகான பாடல்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம்: சாபு மோகன், உடைகள்: சமீரா சனீஷ், ஒலி வடிவமைப்பு: ரெங்கநாத் ரவி, ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் சென்சார் வாரியத்திடம் இருந்து யு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

திரைப்படம் குறித்து பேசிய படக்குழுவினர், “மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே ‘சின்ன சின்ன ஆசை’. அனைத்து ரசிகர்களும் ஒன்றிப் போகும் வகையில் திரைக்கதையும், நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் அமைந்துள்ளன,” என்றனர்.