தேசிய தலைவர் விமர்சனம்

கதை சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் தொடங்குகிறது. தன் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார் தேவர். ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிரித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார். மதுரை வைத்தியநாத அய்யருடன் இணைந்து ஹரிஜன மக்களுக்கு ஆலய பிரவேசம் நடத்துகிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பார்வேர்ட் பிளாக் கட்சியில் சேர்க்கிறார். சுதந்திரம் கிடைத்த பின்பு பலவேறு சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொள்கிறார். ஒரு சிறிய பிரச்சனையால் இமானுவேல் சேகரன் என்பவர் கொலை செய்யப்படுகிறார். அரசியல் சூழ்சியால் இந்த கொலையில் முத்துராமலிங்க தேவர் சிக்க வைக்கப்படுகிறார். இந்த அரசியல் பழியை எதிர்த்து தேவர் சட்ட போராட்டம் நடத்துகிறார். இப்படி முத்து ராமலிங்க தேவரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இந்த படம் வந்துள்ளது

முத்துராமலிங்க தேவர் படத்தை இயக்க பலர் முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அரவிந்தராஜ், தேவர் வாழ்க்கையை பல போராட்டங்களுக்கு பிறகு எடுத்ததற்கே அவரை முதலில் பாராட்டலாம். படத்தின் முதல் பாதி டாக்குமெண்ட்ரி போல் இருந்தாலும் இரண்டாம் பாதி நல்ல எமோஷனலாக இருக்கிறது. நேதாஜி, நேரு, காந்தி, தேவர் சந்திக்கும் காட்சி சிறப்பாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியும், நீதிமன்ற காட்சியும் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன.

படத்தின் பலம் இளையராஜா என்று சொல்வதை விட படத்தின் உயிர் ராஜா என்று சொல்லலாம். தேவர் இறக்கும் தருவாயில் வரும் பின்னணி இசையிலும், பாடல்களிலும் ‘அற்புதம் ராஜா’ என்று சொல்லவைக்கிறார் இளையராஜா.முத்து ராமலிங்க தேவராக பஷீர் சரியாக பொருந்தி போகிறார். நீண்ட முடியும் திருநீறு நெற்றியுடன் முத்துராமலிங்க தேவராக வாழ்ந்து காட்டி உள்ளார்.

நேதாஜி சுபாஷ் உயிருடன் வந்துவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு உருவ அமைப்பில் ஒத்து போகிறார் நேதாஜி யாக நடித்தவர்.

அரவிந்தராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய ஊமை விழிகள் தொழில்நுட்பத்திற்காக இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால் தேசியத் தலைவர் படத்தில் சில தொழில்நுட்ப தவறுகள் உள்ளன. சில தவறுகளும்,குறைகளும் இருந்தாலும் தமிழ் நாட்டில் சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி படம் தந்ததற்கு தேசியத் தலைவர் படக்குழுவிற்கு சபாஷ் சொல்லலாம்.

மொத்ததில் இந்த “தேசிய தலைவர்” முத்து ராமலிங்க தேவரின் வாழ்வை எடுத்துரைக்கும் படமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *