படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி : மாஸ்டர் சில்வா பெருமிதம்

ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதி உதவி செய்ததாக சண்டை பயிற்சி இயக்குநரும், திரைப்பட இயக்குநருமான சில்வா பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகையில் நடைபெற்றது. இந்த படத்திற்கான ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டபோது காரில் இருந்து தாவி குதிக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த தருணத்தில் சண்டைப் பயிற்சி கலைஞரான எஸ். மோகன்ராஜ் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

பல்வேறு திரைப்படங்களில் கடினமான சண்டை காட்சிகளில் ஈடுபட்டு, அனுபவம் வாய்ந்த ஸ்டன்ட் பயிற்சியாளரான இவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததை தொடர்ந்து இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இவரைப்பற்றி சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா ஊடகங்களிடம் பேசும் போது , ” நடிகர் சிலம்பரசன் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கியுள்ளார் ” என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக திரையுலகினர் பேசுகையில், ”சிலம்பரசன் மறைந்த சண்டை பயிற்சி கலைஞர் எஸ் மோகன்ராஜுக்கு மட்டுமல்ல.. ஏராளமானவர்களுக்கு எந்தவித விளம்பரமும் இல்லாமல்… எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்.. ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்” என உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

சிலம்பரசனின் இந்த செயல்.. சமூக வலைதளவாசிகளாலும் , ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *