லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் முதல் இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ‘சிக்மா’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் இருந்து வெளியாகியுள்ள ‘சிக்மா ஸ்டைல்’ மற்றும் ‘அய்யய்யோ அம்மாடி’ ஆகிய இரண்டு பாடல்களின் மாறுபட்ட இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் நீண்டகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் கதை என்ன என்பது வெளிப்படையாக சொல்லாவிடினும், டீசர் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் மூலம் வெளியாகியுள்ள காட்சிகள், ‘சிக்மா’ படத்தின் வண்ணமயமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த உலகத்தைப் பற்றிய அறிமுகத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளன. ‘சிக்மா ஸ்டைல்’ பாடலின் எனர்ஜியும், மெலோடியான ‘அய்யய்யோ அம்மாடி’ பாடலும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. வித்தியாசமான கதைக்களத்தையும், கண்கவர் காட்சியமைப்பையும் கொண்ட முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘சிக்மா’ உருவாகியிருப்பதற்கான எதிர்பார்ப்பை இந்த பாடல்கள் ஏற்படுத்தியுள்ளன.
படத்தின் உருவாக்கம் திட்டமிட்டபடி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவடைந்துள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சயின் தொழில் அணுகுமுறை, தெளிவு மற்றும் ஒவ்வொரு பணியிலும் அவர் காட்டிய நுணுக்கமான செயல்பாடு ஆகியவற்றையும் தயாரிப்பு நிறுவனம் பாராட்டியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் பகிர்ந்து கொண்டதாவது, “‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. குறிப்பாக, பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. சுவாரஸ்யம் கருதி, படத்தின் மையக்கதையையும், பல முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தாமல் வைத்துள்ளோம். இதுவரை வெளியிட்டுள்ள சில காட்சிகள் மூலம், சஞ்சய் உருவாக்கியுள்ள வண்ணமயமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த உலகத்தின் சிறிய அறிமுகத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.
‘சிக்மா’ திரைப்படத்திற்காக புதுமையான விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளையும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கியுள்ளார். தமன் எஸ். இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்புப் பணியை கவனித்துள்ளார். பெஞ்சமின் எம். கலைத்துறையை கையாண்டுள்ளார். ஹரிஹரசுதன் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.
‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

