டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) – விமர்சனம்

0


இயக்கம் – அஸ்வின் கந்தசுவாமி.
நடிகர்கள் – சந்தோஷ், சக்யுக்தா விஸ்வநாதன் ,ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷான்.
இசை – சாம் சி எஸ்
தயாரிப்பு – பென்ஸ் மீடியா – அருண் குமார்.

ஒரு தம்பதிகள் திருமணம் ஆன பல நாட்களாகியும் குழந்தை இல்லாமல் மன உளைச்சலில் இருக்கின்றனர், இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் மூச்சு இல்லாமல் இருக்க குழந்தையின் தந்தை கடவுளிடம் வேண்டுகிறார். அப்போது வானத்தில் இருந்து வெளியான வெளிச்சம் மூலம் குழந்தையின் நின்ற மூச்சு திரும்ப கிடைக்கிறது. அதே சமயம் ஒரு அதிசயமும் நிகழ்கிறது. பிறக்கும் போது ஆணாக இருந்த குழந்தை, அந்த வெளிச்சம் பட்ட பிறகு பெண் குழந்தையாக மாறிவிடுகிறது. அது மட்டும் இன்றி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அதிசயமும் நடக்கிறது. அதன் பின் அந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று விடுகின்றனர், சில நாட்களிலேயே விபத்து ஒன்றில் தாயும் தந்தையும் இறந்து விட, அந்த அதிசய பிறவிகள் சென்னைக்கு வந்து விடுகிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாமலும், ஒருவரது செயல்கள் மற்றவரின் நினைவில் நிற்காமலும் இருக்க அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர், இதன் பின் அவர்களது வாழ்க்கை என்ன ஆனது என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நாயகனுக்கு இதுவே முதல் படம். நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சந்தோஷ், நடிகருக்கான அனைத்து கலைகளையும் கற்றுத்தேர்ந்தவராக இருக்கிறார். ஆக்‌ஷன், நடனம், காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, வசன உச்சரிப்பு என அனைத்தும் சரியாக செய்துள்ளார், அதே போல சந்தோஷின் காதலியாக நடித்திருக்கும் சக்யுக்தா விஸ்வநாதன், நவீன ஆடையில் அழகாக வலம் வருவதோடு, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கவர்ச்சியில் ஜொலிக்கிறார்.

இரவு பார்க்காத பெண் உருவமாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ், அழுத்தமான கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்து கவனம் ஈர்க்கிறார். மாலை 6 மணிக்குள் வெளியில் நடமாட முடியாத தனது வாழ்க்கை சூழலையும், சராசரி பெண்ணாக வாழ வேண்டும் என்ற தனது ஏக்கத்தையும் தனது கண்களின் மூலமாக வெளிப்படுத்தும் ரேஷ்மா, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.ரேஷ்மா வெங்கடேஷின் காதலராக நடித்திருக்கும் வினோத் கிஷான், மிரட்டும் தன் கண்களை கண்ணாடி போட்டு மறைத்து காதலையும், காமெடியையும் வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். விடிவி கணேஷ் நடித்த அனைத்து காட்சிகளும் சிரிக்க வைக்கிறது.

வழக்கம் போல சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் துள்ளலாக இருக்கிறது. பின்னணி இசை அளவாக இருந்தது. ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் சக்கரவர்த்தி படம் முழுவதையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தை அஸ்வின் கந்தசுவாமி எழுதி இயக்கியிருக்கிறார், ஒரு இதயம் இரண்டு உருவம், என்ற வித்தியாசமான கதைக்கருவை நல்ல திரைக்கதை மூலம் நம்மிடம் கொடுத்துள்ளார், என்னதான் ஃபேண்டஸி ஜானர் கதை என்றாலும் அதை அறிவியலோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்ட காட்சிகள், அதை புரிய வைத்த விதம், மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்களை ஒரு கதாபாத்திரம் மூலம் சொன்னது, என முதல் பாதி லாஜிக்கோடும், நகைச்சுவையோடும் பயணித்து பார்வையாளர்களை கவர்ந்து விடுகிறது. மேலும் பகிர்ந்துக் கொள்ள முடியாத வித்தியாசமான இரட்டையர்களின் உணர்வுகள் மூலம் திரைக்கதையை பலமாக்கி விடுகிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசுவாமி.

மொத்தத்தில், ‘டபுள் ஆக்குபன்ஸி’ வித்தியாசமான முயற்சி ஆனாலும் வெற்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here