சட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்

0

இயக்கம் – பாபு விஜய்
நடிகர்கள் – ஜெய், மீனாக்ஷி , யோகி பாபு
இசை – கிரிஷ் கோபால கிருஷ்ணன்
தயாரிப்பு – பி வி ஃப்ரேம்ஸ்

ஐடி ஊழியரான ஜெய், மீனாட்சியைப் பார்த்ததும் காதல் வயப்படுகிறார். மறுநாளே தன் காதலைச் சொல்லி, அவசரக் கல்யாணமும் செய்து கொள்கிறார். தேன்நிலவுக்காகக் கொடைக்கானல் செல்லும் இந்த புதுமணத் தம்பதி, கருடா ராம் நடத்தும் ஒரு சொகுசு விடுதியில் தங்குகிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாக அவர்களுக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. மறுபுறம், ஜெய் – மீனாட்சி தம்பதியைப் பிரித்து, தன் மகளுக்கு வேறொரு மறுமணம் செய்து வைக்க மீனாட்சியின் அமைச்சர் தந்தை சதி செய்கிறார்.

ஒருபுறம் சொகுசு விடுதிப் பிரச்சனை, மறுபுறம் மனைவியைப் பிரிக்க நடக்கும் அரசியல் சதி என ஜெய் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், திடீரென மீனாட்சி காணாமல் போகிறார். மனைவியின் காணாமல் போனதற்கு ஜெய் தான் காரணம் எனப் போலீஸ் அவரைச் சந்தேகித்துக் கைது செய்கிறது. மகிழ்ச்சியாகத் தொடங்கிய திருமண வாழ்க்கை, ‘சட்டென்று மாறிய வானிலை’ போலப் பல சிக்கல்களுக்குள் சிக்கிக் கொள்கிறது. அத்தனை சவால்களையும் ஜெய் முறியடித்து, தன் மனைவியுடன் மீண்டும் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
நாயகனாக நடித்திருக்கும் ஜெய், வழக்கம் போல் தன் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில இடங்களில் ‘தீவிர விஜய் ரசிகர்’ என்ற அடையாளத்தோடு, அச்சு அசலாக விஜய் பாணியிலேயே நடிக்க முயன்றிருக்கிறார். இது ஒரு சில மாஸ் காட்சிகளுக்குக் கை கொடுத்தாலும், பல உணர்வுபூர்வமான காட்சிகளில் பலவீனமாகவே முடிகிறது. இருப்பினும், காதல் காட்சிகளிலும், கண்கலங்கும் உணர்ச்சிகரமான இடங்களிலும் முதிர்ச்சியான நடிப்பைத் தந்து அசத்தியிருக்கிறார்.

நாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி, மனதைக் கவர்கிறார். தந்தை மீதான கோபம், நண்பன் மீதான வெறுப்பு, கணவர் மீதான காதல் எனப் பலதரப்பட்ட உணர்வுகளை மிக நேர்த்தியாகவும் அளவாகவும் கையாண்டு பாராட்டுப் பெறுகிறார்.

ஜெய்யின் நண்பராக வரும் யோகி பாபு, தனது வழக்கமான ‘டைமிங்’ கவுண்ட்டர்கள் மூலம் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்களையும் வாரி வழங்கியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த முயற்சிகள் எதுவும் பார்வையாளர்களைப் பெரிதாகச் சிரிக்க வைக்கவில்லை. கவுண்டமணிக்கு செந்தில் போல, யோகி பாபுவிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் வரும் ஆதித்யா கதிர் சில இடங்களில் மட்டும் புன்னகைக்க வைக்கிறார்.

வில்லனாக வரும் கருடா ராம், மற்றும் சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், படத்தை மிகவும் வண்ணமயமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். நாயகன், நாயகி இருவரையும் அழகாகக் காட்டியதோடு மட்டுமின்றி, கொடைக்கானலின் காட்சிகளையும் தரமாகப் படமாக்கி ரசிக்க வைத்துள்ளார்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகமாக அமைந்துள்ளன. இரைச்சல் இல்லாத பின்னணி இசை, காட்சிகளின் விறுவிறுப்பிற்கும் திரைக்கதையின் வேகத்திற்கும் பெரிதும் துணை நின்றுள்ளது.

படத்தொகுப்பாளர் டார்லிங் ரிச்சர்ட்சன், காட்சிகளைத் தொகுத்ததிலும் கதையின் நகர்த்தலிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்; சில இடங்கள் தொய்வாகத் தெரிகின்றன.

இயக்கம் மற்றும் அலசல்
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பாபு விஜய், நவீன தொழில்நுட்பம் மற்றும் இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படித் திருடப்படுகின்றன என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை ஒரு வணிக ரீதியிலான (Commercial) பாணியில் சொல்லியிருக்கிறார்.

இளமை ததும்பும் காதல், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, எதிர்பாராத சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களைப் படத்தோடு ஒன்ற வைக்க இயக்குநர் முயன்றிருக்கிறார். ஆனால், இன்னும் கொஞ்சம் ஆழமான கதை சொல்லலில் கவனம் செலுத்தியிருந்தால், இப்படம் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மொத்தத்தில், சில குறைபாடுகள் இருந்தாலும், சுவாரசியமான திருப்பங்களால் ’சட்டென்று மாறுது வானிலை’ ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here