இயக்குநர் – மணிகண்டன் ராமலிங்கம்
நடிகர்கள் – எஃப் ஜே, ஆய்ரா, மோனா, சாந்தினி
இசை – அஸ்வின் கிருஷ்ணா
தயாரிப்பு – எட்வர்டு
பல ஆண்டுகளுக்கு முன்னர் சில மனிதர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் சாத்தானை வழிபட்டு அதற்கு நரபலி கொடுத்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளை தாண்டி மனிதர்களையும் பலி கொடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த ஒரு கிராமத்தில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது. அந்த காலத்தில் நடந்ததை போல பலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரணை செய்கிறார், அதே சமயம், ஒரு பெண் விசித்திரமாக நடந்துக் கொள்வதோடு, தன்னை யாரோ இயக்குவதாக சொல்கிறார். திடீரென்று தனது உடலை காயப்படுத்திக் கொள்பவர், அந்த காயங்கள் ஆறுவதற்குள் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களில் ஈடுபடுகிறார். நாயகி ஏதோ பிரச்சனையில் சிக்கியிருப்பதை உணரும் நாயகன் , அவரை காப்பாற்றுவதற்காக அவரது வீட்டுக்கு செல்லும் போது, அங்கு கொடூரமான உருவம் ஒன்றை பார்க்கிறார். அந்த உருவத்தை பார்த்த பிறகு அவரிடத்திலும் பல விசித்திரமான உணர்வுகள் ஏற்பட, மறுபக்கம் ஊரில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த மர்ம மரணங்களுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு ? அதன் பின் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை.
பிக் பாஸ் மூலம் நாம் அனைவருக்கும் பரிட்சயமான எஃப்.ஜெ இந்தப் படத்தில் நாயகனாக பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தனது கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு வேலையை சரியாக செய்திருக்கிறார்.
அதே போல் பள்ளி மாணவியாக நடித்திருக்கும் நாயகி ஐரா, ஆபத்தான அம்மாவிடம் சிக்கிக்கொண்டு பறிதவிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை பதற வைத்து விடுகிறார். நம்மை பதபதக்க வைத்து விடுகிறார், மேலும் ஐராவின் அம்மாவாக, மிக பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோன பத்ரே, அதிரடியான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை அலற வைக்கிறார். சாந்தினி தமிழரசன் கிளைமாக்ஸ் நெருங்கும் போது வந்தாலும், கதையின் மையப்புள்ளியே அவர் தான். ஆனால், முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அவரது காட்சிகள் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
அஷ்வின் கிருஷ்ணாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக பயணித்துள்ளது, ஆங்காங்கே அதிக சத்தத்தோடு இசை இருப்பதால் அது கொஞ்சம் இறைச்சலாக இருக்கிறது, மற்றபடி காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கும் பின்னணி இசை பார்வையாளர்கள் நெஞ்சங்களை படபடக்கவும் வைக்கிறது.இதில் முக்கிய பங்கு ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமிகுத்தான், ஒரு வீட்டை வைத்தே பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை உருவாக்கி விடுகிறார்.
இந்த படத்தை மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார் , தான் சொல்ல வந்ததை பார்வையாளர்கள் மனதில் பயம் ஏற்படும் வகையில் சொல்லியிருக்கிறார், இன்றளவும் நரபலி என்பது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது என்ற பயத்தையும் நம்மில் புகுத்தி விடுகிறார்,
மொத்தத்தில், ‘சாத்தான்’ ஒரு விழிப்புணர்வு.



