இயக்குனர் – சுதா கொங்காரா
நடிகர்கள் – சிவகார்த்திகேயன் , ஜெயம் ரவி, அதர்வா, ஶ்ரீ லீலா
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – டான் பிக்ஸர் _ ஆகாஷ் பாஸ்கரன்
இந்தப் படம் முதலில் சூர்யாவை நாயகனாக வைத்து உருவாக இருந்தது , ஆனால் சில காரணங்களால் அது கை விடப்பட்டது. இப்போது சிவகார்த்திகேயன் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,
ஒருவன் புறநானூறு படை என்ற பெயரில் தீவிரமாக இந்தித் திணிப்புக்கு எதிராக போராடி குழுவுக்கு தலைமை தாங்குகிறார் . இதுபோல போராடுபவர்களை ஒடுக்குவதற்காகவே மத்திய அரசால் ஒரு அதிகாரி நியமிக்கப்படுகிறார், ஒரு மோதலில் தன் நண்பனை இழக்கும் அவன், அதன் பிறகு போராட்டங்களை எல்லாம் கைவிட்டு குடும்பத்தை கவனிக்கச் சென்று விடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவனின் தம்பி மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன் நண்பர்களுடன் ஈடுபடுகிறார். இந்தப் போராட்டங்களை ஒடுக்க காவல் துறைக்கு வானளாவிய அதிகாரத்தை மத்திய அரசு வழங்க உத்தரவிடுகிறது. இதன் பிறகு என்னவானது என்பதே ‘பராசக்தி’ படத்தின் திரைக்கதை.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே சென்சார் பிரச்சினை, பல முக்கிய காட்சிகள் கத்தரிப்பு என விவாதப் பொருளாகி ஒருவழியாக சொன்ன தேதியில் வெளியாகிவிட்டது படம். படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள், அண்ணாவின் கேமியோ என எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு படம் நியாயம் செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். வரலாற்றுச் சம்பவங்களுக்கு நடுவே கற்பனை கதாபாத்திரங்களை மையப்படுத்தி, அதை முடிந்த அளவு நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
’அமரனுக்கு’ பிறகு சிவகார்த்திகேயனுக்கு மிக முக்கியமான படம். நடிகராக அவருக்கு பேர் சொல்லும் படம். முதல் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரவிமோகன். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் மிரட்டல். ஸ்ரீலீலாவுக்கு முதல் தமிழ் படம் இது. நடிகை வைஜயந்தி மாலாவின் தோற்றத்தை நினைவூட்டுகும் மேக்கப்பில் ஆங்காங்கே ஓவர் ஆக்டிங் தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார். சில முக்கிய நடிகர்களின் கேமியோ படத்தில் உள்ளன. அவர்கள் வரும் காட்சிகள் சிறப்பு.
இடைவேளைக்கு முன்னதாக வரும் 20 நிமிடங்கள் காட்சிகள் தீயாக இருக்கின்றன. அந்த ஒட்டுமொத்த காட்சியும் எழுதப்பட்ட விதம் அட்டகாசம். கைதட்டல் காதை பிளக்கிறது. இத்தனை வெட்டுகளுக்கு மத்தியில் இந்தக் காட்சி சென்சாரில் தப்பித்ததே ஆச்சர்யம்.
1965-ல் நடந்த பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பதிவு செய்த விதம் சிறப்பு. படத்தில் சில மறைந்த தமிழக அரசியல் தலைவர்களின் கேமியோ வரும் இடம் கூஸ்பம்ப்ஸ் ரகம். ஏகப்பட்ட கட் + மியூட் செய்திருந்தாலும் படத்தின் நோக்கத்தில் அவை எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை.படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று.. இதை முழுக்க முழுக்க ஒரு பிரச்சார படமாக ஆகிவிடாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட விதம். சற்றே பிசகினாலும் ஒருசார்பு நிலை எடுத்துவிடக்கூடிய அபாயம் இருக்கும் கதைக்களத்தை மிக கவனமாக கையாண்டிருக்கிறார். மற்றொன்று இதன் டெக்னிக்கல் அம்சங்கள், இசை, ஒளிப்பதிவு, கலை அலங்காரம் என படக்குழு மொத்தமும் அதன் உழைப்பை கொட்டி இருக்கிறது
மொத்தத்தில் முதல் பாதியில் கொஞ்சம் தடுமாறும் காதல் காட்சிகளைத் தாண்டி இடைவேளையில் வேகமெடுக்கும் படம், ஒரு வரலாற்றின் மொத்த வலியையும் கொழுந்து விட்டு எரியும் தீயாக நமக்குள் ஏற்றி, தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாக மலர்ந்து நிற்கிறது ‘பராசக்தி’.




