உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள ஒரு கோர்ட் ரூம் ட்ராமா திரைப்படம் “வில்” (உயில்). Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, விக்னேஷ் ரெட்டி என்பவரின் இறப்பிற்கு பின், உயில் ஒன்றை அவர் எழுதி வைத்திருப்பது அவரது குடும்பத்திற்கு தெரிய வருகிறது. அந்த உயிலில் அவரது இரு மகன்களுக்கும் சரி பாதி சொத்துக்களை எழுதி வைத்த அவர், சென்னையில் அவருக்கு சொந்தமான 2 கோடி மதிப்பிலான ஃபிளாட்டை ஸ்ரத்தா என்ற பெண்ணுக்கு எழுதி வைத்திருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. ஸ்ரத்தா என்ற பெயரில் ஒரு பெண்ணை தயார் செய்து விக்னேஷ் ரெட்டியின் குடும்பத்தினர் கோர்ட்டில் நிற்க வைத்து அந்த சொத்தை அவர்களே எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதை சந்தேகிக்கும் நீதிபதி சோனியா அகர்வால் அந்த ஸ்ரத்தாவை கண்டுபிடிக்க சப் இன்ஸ்பெக்டர் விக்ராந்துக்கு உத்த்ரவிடுகிறார். அவர் உண்மையான ஸ்ர்த்தாவை கண்டுபிடித்தாரா? அவருக்கு ஏன் விக்னேஷ் ரெட்டி அந்த ஃபிளாட்டை உயில் எழுதி வைத்தார்? யார் அந்த ஸ்ரத்தா? என்பதே மீதிக்கதை.
படத்தின் கதையின் நாயகி என்றால் அது அலெக்யா தான். தோற்றத்தில் அதிதி ஷங்கர், பூர்ணிமா ரவியின் கலவையாக இருக்கிறார். நடிப்பில் தேர்ந்த ஒரு சீனியர் நடிகையை போல மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். குடும்பத்துக்காக பொறுப்பை தோளில் தாங்கும் போதும் சரி, முக்கியமான கட்டத்தில் முடிவெடுக்கும்போது சரி, வழக்கு விசாரணையின் போது அவரின் மனநிலையை பிரதிபலித்ததும் என நல்ல அளவான, தேர்ந்த நடிப்பை தந்து கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.
சொல்லப் போனால் சோனியா அகர்வால் மற்றும் விக்ராந்த் சிறப்புத் தோற்றத்தில் ஆனாலும் வலுவான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நீதிபதியாக சோனியா அகர்வால் ஆளுமையான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். விக்ராந்த் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம், அதை மிக சிறப்பாக செய்திருக்கிறார். அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.
பதம் வேணு குமார் பலரும் செய்ய யோசிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் பாராட்டுக்கள் பெறும் ஒரு நடிப்பை தந்துள்ளார். மோகன் ராமன், ஸ்வாமிநாதன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பெரிய சர்ப்ரைஸாகவே இருந்தது. பின்னணி இசையும் படத்தின் ஆன்மாவாக அமைந்திருக்கிறது. பிரசன்னாவின் ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான அழகியலை தந்திருக்கிறது. தினேஷ் எடிட்டிங் படத்தின் நீளத்தை கச்சிதமாக வைக்க உதவியிருக்கிறது.
இயக்குனர் சிவராமன் வழக்கறிஞராக பணியாற்றிய போது சந்தித்த உண்மையான வழக்கை மையமாக வைத்து இந்த கதையை எழுதியிருக்கிறார். உறவுகளின் சிக்கல்களை, ஒரு பெண்ணின் தியாகத்தினை பேசும் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ளது. உயில் என்பது பல குடும்பங்களிலும் பிரச்சனையாக இருந்திருக்கிறது. அந்த உயில் பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த படம் படத்தினூடே பல பேசத் தயங்குகிற விஷயங்களையும் தைரியமாக பேசியிருக்கிறது. அதை ரசிக்கும் விதத்திலேயே கொடுத்திருப்பது இயக்குனருக்கு கிடைத்த பெரும் வெற்றி. மொத்தத்தில் சின்ன பட்ஜெட்டில் நல்ல ஒரு தரமான படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் சிவராமன்.



