ரைட் – விமர்சனம்

0

இயக்கம் – சுப்பிரமணியன் ரமேஷ்குமார்
நடிகர்கள் – நட்டி, அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி
இசை – குணா பாலசுப்ரமணியன்
தயாரிப்பு – திருமால் லக்ஷ்மணன் – ஆர் டி எஸ் பிலிம் ஃபேக்டரி

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதமர் பாதுகாப்பிற்காக சென்ற  நிலையில், அவரது காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர், எங்கோ இருந்து தொழில்நுட்ப ரீதியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார். இந்த சூழலில் தன் மகன் காணவில்லை என்று புகார் அளிக்க ஒருவர் வந்துள்ளார், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் போது விசயம் கசிந்தால் பதற்றம் அடிகரிக்கும் என்பதால், வெளியே  தெரியாத வகையில், பிரச்சனையை சமாளிக்க காவல்துறை முயற்சிக்க, மர்ம நபர் தனது தேவையை தெரியப்படுத்துகிறார். அது என்ன ?, அவர் யார் ? என்பதை காவல்துறை கண்டுபிடித்து, காவல் நிலையத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்டதா? இல்லையா ? என்பதே இப்படத்தைபற்றிய கதை.

இந்த படத்தில் கதையின் நாயகன் என்ற அடையாளம் இருந்தாலும், ஒரு கதாபாத்திரமாக கதைக்கு ஏற்ப நட்டி நடித்திருக்கிறார். படம் முழுவதும் அவர் இடம்பெறவில்லை என்றாலும், படத்தின் இறுதிக்காட்சியின் போது திடீரென்று எண்ட்ரி கொடுத்து, அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து தன்னை கதையின் நாயகனாக நிலைநிறுத்திக் கொள்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியன், மகன் காணவில்லை என்ற பரிதவிப்பையும், அவருக்கு என்ன ஆனது என்ற கவலையையும் தன் நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகன் பற்றிய புகாரை சரியாக விசாரிக்காத காவலர்கள் மீது கோபம் கொள்வதும், வெடிகுண்டு வைக்கப்பட்ட காவல் நிலையத்தில் சிக்கிக்கொள்வதும், திடீரென்று அவர் மீது எழும் சந்தேகம் என்று திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ரெட்டி, சூழ்நிலையை புரிந்துக்கொண்டு செயல்படுவது, பிரச்சனையை சமாளிக்க முயற்சிப்பது என்று அசல் காவல்துறை அதிகாரி போல் அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

முழுக்க முழுக்க காவல் நிலையத்தில் நடக்கும் கதை என்பதால், காவல் நிலையத்தை தனது வசதிக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ், ஒரே இடத்தில் கேமரா பயணிக்கும் உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பதற்றம், கதாபாத்திரங்களிடம் இருக்கும் பயம், திரைக்கதையின் வேகம் ஆகியவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிக கச்சிதமாக பயணித்திருக்கிறது.

இந்தப் படத்தகிவியக்குனர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார் எழுதி இயக்கியுள்ளார் , இந்தப் படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் மற்றும் பழிவாங்கும் கதையை ஒரு புதிய வடிவில் சொல்கிறது, படம் முழுக்க ஒரே இடத்தில் நடந்தாலும் அதை தொய்வில்லாமல் இயக்குனர் உருவாக்கியுள்ளார், திரைக்கதை படத்தை நன்றாக தாங்கி பிடித்துள்ளது,

மொத்தத்தில், ‘ரைட்’ சரியான வழியில் உருவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here