திரையுலகில் ஹீரோக்களுக்கே இல்லாத ரசிகர்படையை, குரலாலேயே உருவாக்கியவர் அர்ஜூன் தாஸ். கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் டிரெய்லரில் வில்லன் குரலால் அதிரவைத்த அந்த தருணத்திலிருந்து, இப்போ பாம் படத்துல அசத்தலான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்துவிட்டார்.
கைதி படத்தில் வில்லனாக பிரபலமானதும், பேஸ் வாய்ஸ் க்கு தனி ரசிகர் வட்டம் கிடைத்ததும், அவர் ஹீரோவாக வரப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பை விட பல மடங்கு ஆச்சரியம் தரும் விதமாக, பாம் படம் அவரை “நடிகன்” ஆக்கி நிரூபித்திருக்கிறது.
திரையில் வில்லனாக மிரட்டி நடித்தவர், பாம் படத்தில் ஒரு அப்பாவி, கடவுள் நம்பிக்கையோடு வாழும் இளைஞனாக முழு படத்தையும் தாங்கியிருக்கிறார். இது அவர் இதுவரை எடுத்த பாத்திரங்களோடு ஒப்பிடவே முடியாத அளவுக்கு வித்தியாசமான ஒன்றாக அமைந்துள்ளது.
எந்த சூழலிலும் பயந்து நடுங்கும் கதாப்பாத்திரம்; காளிவெங்கட் உடன் சிரித்தும் அழுதும் பழகும் தருணங்கள்; காதலியை எட்டிப் பார்க்கும் நாணம்; சாமி ஆடும்போது வெளிப்படும் உக்கிரம்—ஒவ்வொரு காட்சிகளும் அர்ஜுன் தாஸின் நடிப்பு திறமையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.
பாம் படம் அவர் ஒரு சாதாரண ஹீரோவல்ல, பல பரிமாணங்களைக் கொண்ட நடிகன் என்று அடையாளப்படுத்தி விட்டது. இது அவருடைய பயணத்தில் மறக்க முடியாத மைல்கல்.
இன்னும் பல படங்களில் அவர் இன்னும் பெரிய ஆச்சரியங்களை தருவார் என்பதில் சந்தேகமே இல்லை.




