Padai Thalaivan Movie Review

0

இயக்குனர்- அன்பு

நடிகர்கள்- சண்முக பாண்டியன், யாழினி சந்திரன், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், அருள்தாஸ்

இசை- இளையராஜா

தயாரிப்பு – வி ஜே கம்பைன்ஸ் – ஜகநாதன் பரமசிவம்

ஒரு காடு சார்ந்த பகுதியில் ஒரு தந்தை மற்றும் மகன் ஒரு யானையை வளர்ந்து வருகிறார்கள். மிகவும் பாசம் காட்டி குடும்பத்தில் ஒருவரைப் போல வளர்க்கின்றனர், அப்படி வளர்ந்து வந்த யானைக்கு திடீரென ஒரு நாள் மதம் பிடித்து விடுகிறது பலரை அடித்து காயப்படுத்திவிடுகிறது. யானைக்கு மதம் பிடித்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நீதிமன்றம், இதற்கு மேல் யானையை வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது, முகாமில் ஒப்படைத்துவிடும் படி சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். முகாமில் இருந்த யானை திடீரென காணாமல் போய்விட, யானையை தேடி, காடு மலையென அலைந்து திரிகிறார் நாயகன். அதன் பிறகு யானை கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படைத்தலைவன் படத்தின் கதை.

இப்படத்தில் சண்முக பாண்டியன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் பறந்து வந்து அடிப்பதும், காலால் பன்ச் கொடுப்பதும் மாஸ். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பதை சண்முக பாண்டியன் நிரூபித்துவிட்டார். ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார் சண்முக பாண்டியன், ஆக்சன் காட்சிகள் மட்டுமில்லாமல் எமோஷன் காட்சிகளிலும் நம் கண்ணை கலங்க செய்துள்ளார், இனி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத ஒரு நாயகராக உருவாகியுள்ளார்.

மேலும் இப்படத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் முனிஷ் காந்த், அருள் தாஸ் போன்றவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளனர்,

யானையை குடும்பத்தில் ஒருவராக நினைத்து பாசத்தை கொட்டி வளர்ப்பது, என யானையை சுற்றியே முதல் பாதி அமைந்துள்ளது. யானை வளர்ப்பவர்களுக்கும் யானைக்கும் இடையெ இருக்கும் பாசப்பிணைப்பை எடுத்துரைத்துள்ளனர், இடைவேளைக்கு பிறகு நமக்கு தெரியாமல் இருக்கும் பல அதிர்ச்சி நிகழ்வுகளை சொல்லியுள்ளனர். விஜயின் கோட் படத்தில் விஜயகாந்த்தை AI இல் வருவது போல இந்தப் படத்திலும் விஜயகாந்த்தை அழகாக காட்டியுள்ளனர், இந்தப் படத்தில் அவர் நடித்த ஒரு கதாபாத்திரமாகவே நடித்துள்ளார், பார்த்த ரசிகர்கள் கண்கலங்கினார்கள்.

இசைஞானி இளையராஜா வழக்கம் போல இந்த படத்திலும் ஸ்கோர் செய்துவிட்டார். பின்னணி இசை அருமை, பாடல்கள் கேட்கும் வண்ணம் இருந்தது. ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார் நம் கண் முன்னே காட்டை கொண்டு வந்துள்ளார், காட்சிகள் அனைத்தும் அத்தனை இயற்கை எழில் பொங்கும் வண்ணம் அமைந்துள்ளது, அதற்காகவே படத்தை பார்க்கலாம்.

அறிமுக இயக்குனரான அன்பு சண்முக பாண்டியனை வைத்து ஒரு கமர்ஷியல் கலந்த வாழ்வியலை எடுத்துள்ளார், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இத்திரைப்படம் ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கும். ஆனால், பல காட்சிகளில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நினைவுபடுத்துவதால் விஜயகாந்தின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.

மொத்தத்தில் இந்த “படைத்தலைவன்” அனைவரையும் வென்றுள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here