இட்லி கடை – விமர்சனம்

0

இயக்குனர் – தனுஷ்
நடிகர்கள் – தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண்
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – டான் பிக்சர்ஸ் – ஆகாஷ் பாஸ்கரன்

ஒருவர் தனது சொந்த ஊரில் ஒரு இட்லி கடை நடத்தி வருகிறார். அவருடைய இட்லி கடைதான் அந்த ஊருக்கே அடையாளமாகவும் உள்ளது. அவரின் மகன் தனது தந்தையை போலவே தானும் ஆகவேண்டும் என்பதற்காக கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார்.மகன் சொந்த ஊரை விட்டு செல்வது அவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தனது மகனின் ஆசைக்காக அவர் சரி என சொல்ல ஊரில் இருந்து புறப்படுகிறார். வருடங்கள் செல்ல மிகப்பெரிய நிறுவனத்தில் மூத்த செஃப் ஆக இருக்கிறார். ஆனாலும், அவருக்கு தனது சொந்த ஊரில் இருக்கும் மன நிம்மதி அங்கு இல்லை. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகளை காதலித்து வருகிறார்,அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால், இது அண்ணனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், நாயகனின் தந்தை ராஜ்கிரண் இறந்துபோகிறார். அதனால் திருமணமும் நடக்காமல் போகிறது.பின் தனது தந்தையின் இட்லி கடையை எடுத்து நடத்த முடிவு செய்கிறார். இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் வந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரசிக்கும்படியாக இருந்தது. குறிப்பாக அருண் விஜய், அவருடைய ஈகோ தனமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. இப்படியொரு கதாபாத்திரத்தை எந்த ஒரு முன்னணி நடிகரும் ஏற்று நடிக்க மறுப்பார்கள். அதை செய்த அருண் விஜய்க்கு தனி பாராட்டு. மேலும், கீதா கைலாசம் மற்றும் ராஜ்கிரண் கதாபாத்திரங்கள் மனதை தொடுகிறது. அவர்கள் கதாபாத்திரத்தை எழுதிய விதத்திற்கே தனுஷை பாராட்டலாம்.

பார்த்திபன் கேமியோ ரோல் என்றாலும் கடைசியில் கைதட்டல்களை அள்ளிவிட்டார். சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தாலும், அவர்களுடைய கதாபாத்திரத்திற்கு நிறைய இடம் இருந்தாலும் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறார். படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. அதற்கு ஒளிப்பதிவாளர் கிரணுக்கு பாராட்டுக்கள்.

இயக்குநர் தனுஷை பற்றி பேசியே ஆகவேண்டும். தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அழகான, மிகவும் எமோஷனலான திரைக்கதையோடு நமக்கு வழங்கியுள்ளார். திரைக்கதையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், ஒரு இடத்தில் கூட போர் அடிக்கவில்லை. அதே போல், எமோஷனல் காட்சிகளை தனுஷ் சிறப்பாக இயக்கியுள்ளார். ராஜ்கிரணுக்கு பின் தனுஷ் அந்த கடையை எடுத்து நடத்துவது, சண்டைக்கு சண்டை போடுவது தீர்வு அல்ல, அகிம்சைதான் தீர்வு தரும் என சொன்ன விஷயம் சிறப்பு. அதை திரைக்கதையில் காட்சிகளாக அமைத்த விதமும் நன்றாக இருந்தது. அதே போல் தனுஷை அந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தருணம், தனுஷுக்கு துணையாக தெய்வமாக ராஜ்கிரண் வந்து நின்றது, இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் என அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தன.

மொத்தத்தில் இட்லி கடை நல்ல திரை சுவையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here