இயக்கம் – கார்த்திக் கட்டம்நேநி
நடிகர்கள் – தேஜா சஜ்ஜாம், மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண்
இசை – கவுரா ஹரி
தயாரிப்பு – பியூபில் மீடியா ஃபேக்டரி – விஷ்வா பிரசாத்.
பழங்காலத்தில் கலிங்கத்து போருக்குப் பின் பேரரசன் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீய சக்திகள் இந்த 9 புத்தகங்களை கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார். மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் ஒன்றின் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா களத்தில் இறங்க, அதை அவர் எப்படி செய்கிறார் ? என்பதை பிரமாண்டமாக சொல்வதே இந்த ‘மிராய்’.
இதில் நாயகன் தேஜா சஜ்ஜா, ஃபேண்டஸி படங்களின் கதைக்கு கச்சிதமாக பொருந்தி, பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க வைத்துவிடுகிறார். தான் யார் ?, தன்னிடம் இருக்கும் மிராயின் சக்தி என்ன ? என்று தெரியாமல் இருப்பவர், அது தெரிந்ததும் எடுக்கும் விஸ்வரூபமும் திரையரங்கில் நிச்சயம் கைதட்டல் பெறும்.
வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்கள் மூலம் சாகாவரம் பெற்று உலகத்தை ஆளும் தனது எண்ணத்தையும், திறமை மிக்கவர்களே கடவுள் என்ற தனது கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக், நாயகனின் இளம் வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு என அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாண்டத்திற்கு பிரமாண்டம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி கேமரா ஒரு கதாபாத்திரமாகவே திரையில் வலம் வந்து பிரமிக்க வைக்கிறது.
அன்றைய காலத்தில் நடந்த கதை என்பதால் அதற்கேற்ற பழமையை கொண்டு வந்துள்ளார் இயக்குநர் கார்த்திக் கட்டம்நேநி, அதிக கிராபிக் காட்சிகள் இருந்தாலும் அதனை நம்பகத்தன்மையோடு உருவாக்கியுள்ளார், ஒட்டு மொத்தமாக ஒரு பிரம்மாண்ட உணர்வை நமக்கு கொடுத்துள்ளது, கண்டிப்பாக ஒரு நல்ல திரை அனுபவமாக இப்படம் இருக்கும்.




