இயக்கம் – ஏ ஆர் முருகதாஸ்
நடிகர்கள் – சிவகார்த்திகேயன் , ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன்
இசை – அனிருத் ரவிச்சந்திரன்
தயாரிப்பு – ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் – ஶ்ரீ லக்ஷ்மி பிரசாத்
ஒரு சட்ட விரோத கும்பல் தென் இந்திய பகுதிகளில் பயங்கர ஆயுதங்கள் விற்க ஒரு திட்டம் தீட்டுகின்றனர், இந்த நிலையில் இந்த அமைப்பை பற்றி தெரிந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார், இதற்கிடையே ஒருவன் காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள போவதாக சுற்றிக் கொண்டிருக்கிறார் . பயங்கரவாத கும்பலின் திட்டத்தை முறியடிக்க அவனை பயன் படுத்திக் கொள்ள நினைக்கிறார். இந்த திட்டம் நிறைவேறியதா ? என்பதை பல திருப்பங்களுடன் சொல்வதே இந்த மதராஸ்.
சிவகார்த்திகேயனுக்கு நீண்ட காலமாக கைகொடுக்காமல் இருந்த மாஸ் ஆக்ஷன் அவதாரம் இந்த படத்தில் கைகொடுத்திருக்கிறது. மனுஷன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக கேஸ் தொழிற்சாலையில் நடைபெறும் சண்டைக்காட்சியும், கிளைமாக்ஸில் வில்லன் உடனான ஆக்ஷன் காட்சியும் மிரட்டல். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்துகிறார். அம்மா போன் செய்தது போல் நடிக்கும் காட்சியில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், ஆரம்பத்தில் திரைக்கதையில் இருந்து விலகியிருந்தாலும், இரண்டாம் பாதி படத்தில் அவர் இல்லை என்றால் படம் இல்லை, என்ற அளவுக்கு திரைக்கதையோடு பயணித்து பார்வையாளர்களை கவர்கிறார்.
துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் சூப்பர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் வித்யூத் ஜமால், “யார் கிட்ட வேண்டுமானாலும் துப்பாக்கி இருக்கலாம், ஆனால் நான் தான் வில்லன்” என்று பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு ஹாலிவுட் நடிகரைப் போல் ஆக்ஷனில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சபீர் கல்லரக்கல், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக நடித்திருக்கும் பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் பார்வையாளர்கள் மனதில் பதிந்துவிடும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுதீப் இளமோன், படம் முழுவதையும் பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். சண்டைக்காட்சிகளின் வேகம் மற்றும் பிரேம்கள் மூலம் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கும் சுதீப் இளமோன், படம் முழுவதையும் ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத், படத்தின் டைடில் கார்டிலேயே பார்வையாளர்களை தன் பின்னணி இசையால் நிமிர்ந்து உட்கார வைத்துவிடுவதோடு, தனது பீஜியம் மூலம் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறார். ஏற்கனவே முனுமுனுக்க வைத்திருக்கும் பாடல்கள் காட்சிகளோடு பார்க்கும் போது புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஆக்ஷன் மாஸ் ஹீரோவாக மீண்டும் ஜொலித்துள்ளார், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான படமாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தை மிக பலம் வாய்ந்ததாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் . அதுவே படத்திற்கு பெரிய பலம். துப்பாக்கி கலாசாரம் நாட்டிற்கு கேடு என்பதை ஒரு முன்னெச்சரிக்கையாக கூறியுள்ளார், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், கண்டிப்பாக இந்தப் படம் அவருக்கு கம் பேக் தான்.
மொத்தத்தில், ‘மதராஸி’ அனைவரையும் கவரும்.




