BM ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில், ”இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் ‘ஏமாற்றாதே’, ‘பொய் சொல்லாதே’, ‘திருடாதே’, ‘கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்’ என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த ‘குயிலி’ பட குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன். இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது. இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,” என்றார். நடிகை தாஷ்மிகா பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,” என்றார். மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல், எல்லாருக்குமான தலைவராகவும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவராக திகழும் தொல் திருமாவளவனை வருக, வருக என வரவேற்கிறேன். அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம். இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ‘குயிலி’ திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன். இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். நான் தமிழக முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத் தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களை கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும். …